யாழ் நூலக எரிப்பு தின நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -
ஜூன் 1 1981 என் வாழ்வில் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. தமிழர்களின் சர்வதேசப் புகழ்பெற்ற அறிவுக் களஞ்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது சன நூல் நிலையம் எரிக்கப்பட்ட நாள். மனித நாகரிகத்தின் கறை படிந்த நாட்களில் ஒன்று. தனிப்பட்டரீதியில் என் பால்ய பருவத்தில் நண்பனாக, ஆசிரியனாக விளங்கிய நிறவனம் அது. நான் செல்லும் அறிவாலயங்களில் ஒன்று. வேலியே பயிரை மேய்ந்த கதையாக அன்றிருந்த த(ம்)ர்மிஷ்ட்டரின் அரசின் தூண்களாக விளங்கிய இனவெறி பிடித்த அமைச்சர்கள் சிலரின் தலைமையில் ,ஏவல் நாய்களாகப் படையினர் பாவிக்கப்பட்டு யாழ் நகர் எரிக்கப்பட்டது. யாழ் பஸ் நிலையத்தில் கடைகள் ,பூபாலசிங்கம் புத்தகக்கடையுட்பட, எரிக்கப்பட்டன. யாழ் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயமும் எரிக்கப்பட்டது.
இத்தருணத்தில் யாழ் பொது சன நூலகத்தில் கழித்த நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். யாழ் ஈழநாடு பத்திரிகை தனது மாணவர் மலரில் , வாரமலரில் எனது மாணவ, இளம் பருவத்து எழுத்துகளைப் பிரசுரித்து ஊக்குவித்ததை எண்ணிப் பார்க்கின்றேன்.
யாழ் நூலக எரிப்பு தமிழர்கள் உள்ளங்களில் ஏற்படுத்திய காயம் ஆறாதது. ஏனென்றால் அப்போது நடந்த வன்முறையில் அரிய வரலாற்று நூல்கள், ஓலைச்சுவடிகளையெல்லாம் நாமிழந்தோம். அவை திரும்பக் கிடைக்கப்போவதில்லை. தாவீது அடிகள் நூலகம் எரிக்கப்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமான சம்பவமும் நடந்தது.