கிடைக்கப்பெற்றோம்: எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின் 'பாவை என்று சொல்லாதே என்னை' கவிதைத்தொகுப்பு! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின் கவிதைத்தொகுப்பு "பாவை என்று சொல்லாதே என்னை" - மனஓசை வெளியீடு. 72 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. புகலிடத் தமிழ் இலக்கியத்தில் நன்கறியப்பட்ட பெண் ஆளுமைகளில் ஒருவர் சந்திரவதனா செல்வகுமாரன். எழுத்தாளர் சந்திரா இரவீந்திரனின் (செல்வி சந்திரா தியாகராஜாவாக அறிமுகமானவர்) சகோதரி. இவரது சகோதரர்கள் மூவர் இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்திலிணைந்துப் போராடி மறைந்தவர்கள். தற்போது ஜேர்மனியில் வாழ்ந்து வரும் சந்திரவதனா செல்வகுமாரன் ஆத்தியடி, பருத்தித்துறையைச் சேர்ந்தவர்.
ஐபிசி தமிழ் வானொலி, எரிமலை (சஞ்சிகை), ஈழநாடு (பாரிஸ்)< பெண்கள் சந்திப்பு மலர், இணைய இதழ்களான வார்ப்பு, சூரியன், பதிவுகள், யாழ் இணையம், வளரி ஆகியவற்றில் வெளியான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.