
பகுதி இரண்டு: கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு!
1. நல்லூர்க் காலம் - நகர அமைப்பு மற்றும் கட்டடக்கலை
நல்லூர் ராஜதானியாக விளங்கிய காலகட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் ஒல்லாந்தர் காலத்து நிலப்படங்கள், போர்த்துக்கேயர் காலத்து வரலாற்று அறிஞர்கள், பாதிரிமார்களின் நூல்கள் , கள ஆய்வு போன்றவற்றிலிருந்து நல்லூர் ராஜதானியின் தெருக்கள், ஆலயங்கள் பற்றிய தன் கருத்தை முன் வைக்கின்றார். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (1996) நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார்.
"...முத்திரைச் சந்தை ஏறத்தாழ இதன் மையத்தில் அமைந்துள்ளது. எனினும், அக்கால நல்லூர் ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ, அதன் சரியான மையத்திஒல் முத்திரைச் சந்தை இருந்தது எனறோ எடுத்துக்கொள்ள முடியாது. ஒல்லாந்தர் கால நல்லூர் ஒழுங்கற்ற வடிவம் கொண்டதாக இருந்ததையே அக்கால நிலப்படங்கள் காட்டுகின்றன. தற்காலத்தில் முத்திரைச்சந்தையிலிருந்து நான்குதிசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்." ('யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) , பக்கம் 69)
நகரம் ஒழுங்கான சதுர வடிவில் இருந்ததாகவோ , சந்தை நகரின் மையத்தில் இருந்ததாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு அவர் வருவதற்கு முன்னர் , இவ்விடயத்தில் கட்டடக்கலை பற்றி, நகர அமைப்புப் பற்றிய வாஸ்துசாத்திர விதிகளையும் சிறிது கவனத்திலெடுத்திருக்கலாம். ஏனென்றால் நாம் இன்று வரை வாஸ்துசாஸ்த்திரம் பார்த்துத்தான் வீடுகளைக் கட்டுகின்றோம். இவ்விதிகளைத்தான் எம் முன்னோரும் நகரங்களை அமைக்கையில் பின் பற்றினார்கள். இவ்விதிகளின்படி தலைநகர்களை அமைக்கும்போது நகரின் மையத்தில் கிழக்கு - மேற்காக, வடக்கு - தெற்காக இரு பிரதான பாதைகள் இருக்க வேண்டும் எனவும், நகரம் சதுர வடிவில் (அவ்விதம் அமைக்க முடியாத சூழலில் செவ்வக வடிவில் ) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் இவ்விதம் அமைக்கப்படும் தலைநகரைச்சுற்றி மதில் அமைக்கப்பட வேண்டும் எனவும், பிரதான பாதைகள் மதில்களின் வாசல்களை சந்திக்குமிடத்துக்கண்மையில் ஒவ்வொரு திக்கிலும் ஆலயங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் இவ்விதிகள் குறிப்பிடுகின்றன. இவ்விதமான பண்டைய நகர அமைப்பு விதிகளை ஆராய்ந்து , தென்னிந்திய , வட இந்திய நகரங்கள் , ஆலயங்களையெல்லாம் ஆராய்ந்திருக்கும் Architecture of the World: India என்னும் நூல் இவற்றை ஆராய்வதற்குரிய சிறந்த உசாத்துணை நூல்களில் ஒன்று. (Andreas Wolwahsen , Henri Stierlin (Editor) இந்நிலையில் மயூரநாதன் இவ்விடயத்தில் முடிந்த முடிவுக்கு வராமல், வாஸ்துசாத்திர விதிகளின்படி அவ்விதம் இருந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் அதற்காக உறுதியான ஆதாரங்கள் இல்லையென்று குறிப்பிட்டிருக்கலாம் என்று மேற்படி அவரது கருத்தை வாசித்தபோது தோன்றியது.