

கட்டுரையாசிரியர் - முனைவர் வ.கோபாலகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் - 636005, பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்றது, சேலம், தமிழ்நாடு, இந்தியா. ( Orcid: https://orcid.org/0000-0002-9465-4421)
முகவுரை
தொழிலாளர்கள் என்போர் சமுதாயத்தில் சிக்கலுக்கு ஆளாக்கப்படக்கூடிய குழுவினர் ஆவர். இவர்களுடைய நிலை பல ஆண்டுகளாகப் பல விதங்களில் இன்பம், துன்பம், அவலம் போன்ற பல பிரச்சினைகளில் அமைந்துள்ளது. இவற்றைத் தட்டிக்கேட்பதற்காகவும் இவர்களுடைய உரிமைகளுக்குப் போராடவும் தொழில் சங்கங்கள், தொழிலாளர் நல வாரியம் போன்ற பல அமைப்புகள் இருந்தாலும் தொழிலாளர்களுக்குச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை எல்லாம் தீர்ப்பதற்கு அரசியல், தனி நபர் சூழ்ச்சி போன்ற பல தடைகள் இருக்கின்றன. இத்தடைகள் யாவும் தொழிலாளர்களைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்க முடியாமல் போகின்றனர். இந்நிலை தற்கால இலக்கியங்கள் என்று கருதப்படுகின்ற நாவல் இலக்கியங்களில் பேசப்படுகிறது. அவற்றில் ஒன்றாக கு.சின்னப்ப பாரதி எழுதியுள்ள சர்க்கரை எனும் புதினம் அமைந்துள்ளது. இவற்றிலுள்ள முதலாளித்துவமும் தொழிலாளர் வர்க்க நிலையையும் பற்றிக் காண்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
தொழிலாளர் அறிமுகம்
தொழிலாளர்கள் என்போர் பொருளாதார தேவைக்காகப் பிறரிடம் வேலைப் பார்த்து அவ்வேலைக்கேற்ற ஊதியத்தைப் பெறுபவர்களே ஆவர். இவர்கள் தங்களின் குடும்ப தேவைக்காகவும் எதிர்கால சேமிப்புக்காகவும் உழைத்து வாழக்கூடிய வர்க்கத்தினர் ஆவர். மேலும், “மக்களின் சமூக வாழ்க்கை, நிலத்தை அடிப்படையாக வைத்து அமைகிறது. நிலத்துடனான உடல் உழைப்பு என்பதோடு மட்டுமல்லாது சகமனிதர்கள் உடனான உறவு நிலையைப் பொறுத்தும் சமூக வாழ்க்கை பொருள் உடையதாகிறது. நிலங்கள் பகுக்கப்பட்டு நிலத்தினை அடிப்படை ஆதரமாக வைத்து அமைந்த தொழில் பிரிவுகளும் தோன்றக் காரணமாயிற்று”1 என்ற கூற்றைக் காணும் போது தொழிலாளர்கள் என்போர் உடல் உழைப்பு, குடும்ப பொருளாதாரம் ஆகியவற்றிக்குப் பாடுபடக்கூடிய நிலையில் இருப்பவர்கள்; என்பதை இதன் வழியாக அறிந்து கொள்ளலாம்.