முதன்முதலாக நான் கருத்தரித்திருந்தபோது, இலங்கையிலிருந்த சித்தியுடனும், அவவின் சில சினேகிதிகளுடனும் பருத்தித்துறையிலிருந்து, நுவரெலியாவுக்குச் சென்றிருந்த பயணமொன்று மீளவும் என் நினைவுக்கு வந்தது. அந்தப் பயணத்தின்போது, செங்குத்தான குன்றுகளில் ஏறவேண்டியிருந்தபோதுகூட, தனது ஒன்பது மாதக் குழந்தையைச் சித்தியின் சினேகிதி ஒருவர் மிக இயல்பாகவும், எவ்வித தயக்கமும் இல்லாமலும் தூக்கிக்கொண்டு வந்திருந்தார். அப்போது நான் எடுத்திருந்த நிழல்படங்களில், அந்தக் குழந்தை நீர்வீழ்ச்சியருகே, மலையோரக் காய்கறிக் கடையில், ஏரிக்கரையில் என எல்லாவிடங்களிலும், சிலநேரங்களில் விழித்தபடியும், சிலநேரங்களில் உறங்கியபடியும், ஆனால், எப்போதும் தூக்கி வைத்திருந்தபடிதான் இருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு என் கணவருடன் சென்றிருந்தபோது, சமைக்கும்போதும், வீதிகளில் அல்லது கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோதும், தன் ஒரு வயதுப் பேத்தியைத் சித்தியும் அவ்வாறே தூக்கிவைத்துக் கொண்டிருந்ததும் என் நினைவுக்கு வந்தது. இலங்கையில் எடுக்கப்பட்டிருந்த என்னுடைய பழைய நிழல்படங்கள் உள்ளடங்கலான ஏனைய நிழல்படங்களை மீளப் பார்த்தபோதும், அவற்றிலிருக்கும் குழந்தைகளை யாரோ ஒருவர் தூக்கிவைத்திருப்பதையே நான் பார்த்தேன்.
எங்களுடைய மகன் பிறந்தபோது, எங்களின் கனேடிய நண்பர்களைப்போல தள்ளுவண்டியைப் பயன்படுத்தாமல், எல்லாவிடங்களுக்கும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்லும் அதே தமிழ் மாதிரியையே நானும் என் கணவரும் பின்பற்றத் தொடங்கினோம். ஆனால், அவனை வெறுமனே கைகளில் காவுவதற்குப் பதிலாக, cloth baby carrier ஒன்றில் அவனை நாங்கள் சுமந்தோம். எங்கள் இருவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. அது சுலபமானதாவும், வசதியாகவும், இயல்பானதாகவும் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். சுமந்துசெல்லும் அல்லது இறுகப்பிணைந்திருக்கும் பாலூட்டிகளாகவே மனிதர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். அதாவது, எல்லாநேரங்களிலும் எங்களின் உடலுக்கு அருகில் இருக்கவேண்டும் என்ற உள்ளார்ந்த தேவை எங்களின் குழந்தைகளுக்கு இருக்கிறது. எனவே, தொடர்ந்து தூக்கி வைத்திருப்பதைக் குழந்தைகள் விரும்புவது இயல்பானதே — அத்துடன், அவர்களைத் தூக்கிவைத்திருப்பதற்கு நாங்கள் விரும்புவதும் விளங்கிக்கொள்ளக்கூடியதே.