உலகம் அமைதி பெற - சந்திரகெளரி சிவபாலன் -
இன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.
உலக அமைதி முதலில் குடும்பத்தால் சீரழிகின்றது. குடும்பத்துக்குள் கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடுகளால் நடைபெறுவது குடும்பச் சண்டை. இதனால், மன அமைதி குன்றுகின்றது. சகோதரர்களிடையே பணவிடயங்கள் உரிமைப் போராட்டங்கள் ஏற்படுகின்றன. இதனால், பாரத யுத்தமே கண்டது எம்முடைய தமிழ்நாடு. இதனைவிட குடும்ப அமைதியின்மை மனிதர்களிடம் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. அதன் மூலமாக பலவிதமான பிரச்சினைகளை குடும்பம் எதிர்நோக்க வேண்டி வருவதுடன் தொடர் கொலைகள் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகின்றன என்று மனநலவியலாளர்கள் ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கின்றார்கள்.
பேராசையும் எமக்கு உரிமையில்லாதவற்றில் நாம் ஆசைப்படுதலும் குடும்பம் அமைதி இழந்து உலக அமைதியைக் கெடுக்கின்றன. இதனால், இராவண வதை, வாலி வதை போன்ற யுத்தங்கள் கண்டது தமிழ்நாடு. இவ்வாறான காரணங்களினால், குடும்ப அமைதி குன்றி அது அடுத்த கட்டமாக நாட்டின் அமைதியின்மையாகவும் உலக அமைதியின்மையாகவும் மாற்றம் பெறுகின்றது.