'பதிவு'களில் அன்று - எழுத்தாளர் திலகபாமாவின் (சிவகாசி) நிகழ்வுக் குறிப்புகள்!
[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முர்சு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
பதிவுகள் செப்டம்பர் 2004 இதழ் 57
செப்டம்பர் மாத சந்திப்பு! நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள்! சிறப்புரை: கவிஞர் பிரம்மராஜன்! பாரதி இலக்கியச் சங்கம் சிவகாசி 5.09.04 அன்று காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. திலகபாமாவின் “நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள் பற்றிய” ஆரம்ப உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவரது உரையில் “வாழ்வோடுதான் என் எழுத்து என வாழ்ந்து கொண்டிருந்தவள் நான். முதன் முறையாக2000த்தில் தான் எழுத்துலகை நின்று கவனிக்கத் துவங்குகின்றேன். இனிமேலும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்கின்ற சூழலில் தான் எழுத்து பற்றிய என் விமரிசனங்களை வெளியிடத் துவங்குகின்றேன். இந்த 4 வருட அவதானிப்பு நிறைய எனக்குள் கேள்விகள்: எழுப்பியிருக்கின்றது.. மனிதத்துள் நுழைய முடியாது தவிப்பவர்கள்,சமுகப் பொறுப்புணர்வு அற்றிருப்பவர்கள் எல்லாம் இலக்கியம் செய்ய வந்திருப்பதும், செய்து கொண்டிருப்பதும் தாங்கள் செய்து கொண்டிருந்தவற்றை பலரும் பின் பற்றும் படி செய்ய தொடர் பழக்க வழக்கமாக்கி அதை நிலை நிறுத்துவதும் தொடர்ந்து நடந்த படி இருப்பது இலக்கியத்துள் குறிப்பாக கவிதைகளில் ஒரு ஆரோக்கியமற்ற போக்கை உருவாக்கி வைத்திருக்கின்றது.
வாழ்வியலில் இருளும் ஒலியும் இரண்டரக் கலந்திருப்பினும் இருளை வெல்வதற்கான போராட்டமே மனிதனது அப்படியான போராட்டத்தையும் அதன் வலிகளைப் பேசுவதன் மூலம் போரட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுமே இலக்கியம். ஆனானப் பட்ட தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைகையிலேயே கூட விசம் வருகின்றது. இலக்கியத்தின் புதிய போக்குகள் தோன்றும் போது அதன் பக்க விளைவுகளும் எதிர் விளைவுகளும் இருக்கும்.. ஆனால் பக்க விளைவுகளும் எதிர்விளைவுகளும் முழுமையாக ஆக்கிரமிக்கப் பார்க்கின்றன. வெளிப்படும் விசத்தை அள்ளி விழுங்கி தனை பலி கொடுக்க ஒருவர் முன் வந்தால் மட்டுமே அமிர்தம் என்பது சாத்தியம் என்றே எனக்குத் தோன்றுகின்றது. நடக்க இருக்கின்ற போரில் எனக்கு முன்னால் முப்பாட்டனாரும், பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலிகளும் கூட இருக்கின்றார்கள்.. என்ன செய்ய எல்லாம் கௌரவ சேனையி;ல் இருக்க உணமையை நிலை நிறுத்த, உணர வைக்க வில் எடுக்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு.