கம்பராமாயணத்தில் தன்மையணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று தன்மைஅணி அணியாகும். தண்டியலங்காரத்தின் தன்மை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
தன்மைஅணி
எப்பொருளையும் அதன் இயல்பும் தன்மையும் மாறாமல் இயற்கையாகவும் உண்மைத் தன்மையுடன் விளக்குவது தன்மையாகும்.
“எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொன்முறை தொடுப்பது தன்மை ஆகும்”
(தண்டியலங்காரம் 2)
இதற்கு தன்மை நவிற்சி அணி என்ற பெயரும் உண்டு.
தன்மை அணியின் வகை
தன்மையணி பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித்தன்மையணி, தொழில் தன்மையணி என்று நான்கு வகைப்படும்.