![](/images/ChingizAitmatov5.jpg)
- எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் -
ஒரு ஓவியனின், புதிய சித்திரத்திற்கான தயாரிப்புகளுடன் சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'என் முதல் ஆசிரியர்' நாவல் ஆரம்பமாகின்றது. ஓவியன் பின்வரும் பொருள்படக் கூறுவான் :
“பொழுது புலர்கின்றது… ஜன்னல்களை அகலத் திறக்கின்றேன்… கிரகிக்க முடியாத, எதிரொலிகளை உள்ளத்தில் உருவாக்கும், இந்த இளம் கோடையின், உதயம் போன்றதன், முக்கியத்துவத்தை இன்னும் நான் பெறவே இல்லை. எனது சித்திரம் வெறும் எண்ணக்குவியலாய் மாத்திரமே இருக்கின்றது. எத்தனையோ கோட்டுருவங்களை இந்தச் சித்திரத்திற்காய், இதுவரை கீறிவிட்டேன். ஆனால், என் ஆன்மாவிலிருந்து, பிறப்பெடுக்கக்கூடிய அந்த மர்மமான, வஸ்து, அகப்படாமல் கைநழுவிச் செல்லும் அந்தப் பொருள், இன்னமும் என் கைக்கு வந்து சேர்ந்ததாய் இல்லை. வசப்பட்டதாயில்லை”.
“முடிவுப்பெறாத எனது சித்திரம் குறித்த எண்ணப்பாடுகளைப் பொதுவில் நான் எனது நண்பர்கள் மத்தியில்கூட பிரஸ்தாபிப்பதில்லை. ஆனால், இம்முறை ஓர் விதிவிலக்கை பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். முழுமையுறா என் சித்திரத்தை, இன்று பகிரங்கமாய் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளும் போக்கொன்றைக் கடைப்பிடிக்கப் போகின்றேன். இது வெறும் சபலம் அல்ல. தூரிகையை, இப்போது கையில் எடுக்க எனைத் தூண்டிய இக்கதை மிகப்பெரியது…”
“இக்கதையை பாழ்படுத்தி விடுவேனோ என்று அஞ்சுகிறேன். இப்போதுகூட அந்த நடுக்கத்துடனேயே என் தூரிகையை நான் கையில் ஏந்தவும் செய்கின்றேன்”.
கிட்டத்தட்ட ஒரு நேர்மையான கலைஞனின் உண்மை வாக்குமூலம் என இதனை நாம் கொள்ளலாம். மாபெரும் கலைஞர்கள் இக்கேள்வியைக் கடந்து அடியெடுத்து வைத்ததாகவும் சரிதம் இல்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் இக்கேள்வியானது அவர்களைத் துன்புறுத்தி வாட்டி வதைக்கவே செய்திருக்கும்.
துன்புறுத்தல்? ஆம், இது, மிகப்பெரிய சொல்தான். ஆனால், இக்கேள்வியை வெறும் ஒரு யதார்த்தமாகக் கொண்ட மகாபுருடர்களும் இவ்வுலகில் ஜீவிக்கத்தான் செய்திருக்கின்றார்கள்.