இலங்கை அரசியல்: முஸ்லீம் இனவாதமும் - இலங்கையில் தேர்தலும் - மன்சூரின் எடுகோள்களை முன்வைத்து ...! (பகுதி இரண்டு) - ஜோதிகுமார் -
3
தமிழருக்கு எதிரான இனவாத அரசியல் என்பது இதுவரை இரு அடிப்படைகளில் செயல்பட்டு வந்துள்ளது. ஒன்று, இனப்படுகொலைகள் மலிந்த, வன்செயல்கள் பரவலாக நிகழ்ந்த 1977, 1981, 1983 காலப்பகுதியின் ஓர் அரசியல் வடிவத்தைக் கூறலாம். மற்றது, தேர்ந்த, குறுகிய எல்லைப்படுத்தப்பட்ட, அரசியல். உதாரணமாக குருந்தூர் மலை அல்லது மயிலத்தடு மேய்ச்சல் நிலம் அல்லது நினைவேந்தல்களில் இடையூறுகளை ஏற்படுத்துவது அல்லது பொன்னம்பலம் கஜேந்திரன் போன்றோரை உடல்ரீதியாக குண்டுகட்டாக கட்டி அப்புறப்படுத்துவது – என்றளவில் இனவாதமானது இந்நாட்டில் தனது இரண்டாவது முகத்தை காட்டியும் உள்ளது. அதாவது, ஒரு புறம் தமிழ் மக்களுக்கு எதிரான பரந்த ரீதியான வன்செயல். மறுபுறம், திட்டமிடப்பட்ட ரீதியில், முன்னெடுக்கப்படும் குறித்த எல்லைப்படுத்தப்பட்ட, பிரதேச ரீதியான இனவாத நகர்வுகள்.
ஆனால் இனி ஒரு 77 அல்லது 83 நடக்குமானால் (அதாவது, பெருவாரியான, இனப்படுகொலைகள் மலிந்த, பரந்துப்பட்ட வன்செயல்கள்) அது ஓர் இந்திய தலையீட்டுக்கு வழிசமைத்து விடுமோ என்ற அச்சம் ஒருபுறம் ஆட்டிப்படைக்கையில் ஜே.வி.பியினரை இந்தியா அழைத்து, அவர்களை ஒரு தலையாய சக்தியாக அங்கீகரித்த செயற்பாடானது, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதாகவே இருந்தது.அதாவது ஒருபுறம் இந்திய ஆக்கிரமிப்பு சம்பந்தமான அச்ச உணர்வு. மறுபுறம் ஜே.வி.பியினரை இந்தியா அழைத்து அங்கீகரித்த செய்கை. இவை இரண்டும், சர்வதேசிய நகர்வுகளை பின்தள்ள கூடியவை என்பதில் சந்தேகமில்லை.