
பாலத்தை கடந்து, கார், குன்று போல் அமைந்திருந்த, மேட்டு நிலத்தில் ஏற தொடங்கிய போது, சூட்டு முள் அசாதாரணமாக உச்சத்தை தொட்டிருந்தது. திடுக்கிட்டேன். காரை வலப்புறமாய் ஒடித்துத் திருப்பினேன். இரு புறமும் காடுகள். வலப்புறமாய், மற்றொரு கார் வாயை பிளந்து கொண்டு நின்றிருந்தது. எனது காரைப் போல சூடேறி இந்த வனாந்தர பிரதேசத்தில் ஆள் அரவமற்று அகப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்ன? அந்த காரின ட்ரைவர் கதவுகளின் ஜன்னல் வழியாக யாருடனோ கதைத்தப்படி நின்றிருந்தான்.
இனி, செய்வதற்கு ஒன்றுமில்லை. இறங்கிய போது, மற்ற காரின் சொந்தக்காரன் என்னிடம் மெதுவாக வந்து என்ன பிரச்சினை என்றான். தண்ணீர் இல்லை என்றேன். பரவாயில்லை. இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது காரில் இருந்து ஒரு பிளாஸ்டிக் போத்தலை இழுத்தெடுத்தான். இந்த ஒரு லீட்டரால் ஆக போவது ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தேன். குறைந்தபட்சம் எனது காருக்கு ஆறு லீட்டர் ஊற்றியாக வேண்டும். அன்புடன் நீட்டிய அவனது உதவிக்கரத்தை மறுத்து, காரில் பின் சீட்டில் இருந்த ஐந்து லீட்டர் கேனை எடுத்து கொண்டு பாலத்தை நோக்கி, வந்த வழியே, அந்த நடுக்காட்டில் நடக்க ஆரம்பித்து விட்டேன்.
வெப்ப அலை வீசும் முன்னரே, விடிய தொடங்கியதும் அக்கரைப்பற்றில் இருந்து, புறப்பட்டு வந்திருந்தேன். அந்த இளங் காலையில் சுகமான காற்று வேறு. ஆனால் இப்போது? வாகனம் எப்போது சூடு பெறத் தொடங்கி இருக்கும்? பாதையின் இருபுறமும் அடர்ந்த காட்டு மரங்கள் அமைதியாக நின்றிருந்தன, அமைதியுடன் பார்த்தப்படி. காற்று வேறு இல்லை. பாலத்தின் அடியே மிக அகலமான, மஞ்சள் நதி ஓடிக் கொண்டிருந்தது. மேல் பிரதேசத்தில், பெய்யும் மழையில், இப்படி கலங்கல் அடைந்து ஓடுவதாக இருக்கலாம். இம் முனையில் ஹ{ம்…ஹ{ம்… இறங்க முடியாது. ஒருவேளை பாதையின் மறுமுனையில் இறங்க கூடிய பாதை ஏதாவது இருக்கலாம். ஆனால் அங்கேயும் இதே கதைத்தான். அப்படி, என்றால் இனி வந்த வழியே நடந்து, பாலத்தின் மறுமுனையை மீண்டும் அடைந்து, காட்டின் வழியாக இறங்கி, காட்டுக்குள் சென்று நதியை அடைந்தாக வேண்டும். ஆம், அங்கே இறங்குவதற்கு வசதிதான். ஆனால், நதியை நோக்கி, காட்டு பிரதேசத்தினுள்ளேயே நடக்க வேண்டும் - அது தண்ணையாக இருந்த போதிலும். பாலத்தின் நடுப்பகுதியை நான் மீண்டும் கடந்து கொண்டிருந்த போது, ஒரு கெப் வாகனம் என்னை கடந்து சென்றது. பின்னால் ஐந்தாறு இளைஞர்கள், நீல நிற, அழுக்கடைந்த யூனிபோர்மில் இருந்தார்கள்.