நாங்கள் சென்ற அசகுசா என்ற இடத்தில் உள்ள புத்த கோயில் யப்பான் வருபவர்கள் எவரும் தவறவிடாது செல்லும் இடமாகும் இது டோக்கியோவில் உள்ளது . 30 மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் வந்து போவார்கள். முக்கியமான மட்டுமல்ல எல்லா நாட்களுமே உல்லாசப்பிரயாணிகளால் நிறைந்திருக்கும். அசகுசா என்பது புல்தரை என்ற கருத்தாகும் அக்காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். அருகில் ஆறு ஓடுகிறது தற்போது முழு இடமும் கடைவீதிகள், உணவகங்கள் நிரம்பி உள்ள இடமாகிறது.
நமது நாடுகளில் உள்ளது போல் புத்தரை மட்டும் முக்கியத்துவப்படுத்தும் தேரவாத புத்த கோயில் அல்ல . மகாயான புத்தகத்தில் சொல்லப்படும் போதிசத்துவரான அவலோகிஸ்வரர் தெய்வம் இங்கு பெண் (Kannon, the Goddess of Mercy in Japanese Buddhism) உருவம் கொண்ட தெய்வமாக வழிபடப்படுகிறார் – அதாவது கருணையின் தெய்வமாக ஜப்பானியர்கள் பார்க்கிறார்கள் . அவர்களுக்குத் துன்பங்கள், தேவைகள் மற்றும் இயற்கையின் அழிவுகளிலிருந்து பாதுகாக்கும் தெய்வமாக கருதி வழிபட இங்கே வருகிறார்கள். இதில் விக்கிரக வழிபாடுகள் உள்ளது. ஒரு விதத்தில் எங்கள் பெண் தெய்வங்கள் துர்க்கா, காளி என்பது போல் தான் .
எத்தனை பேர் வந்தாலும் யப்பான் சுத்தமான இடம். யப்பானில் பல இடங்களில் குப்பை போடும் கலயங்கள் இருப்பதில்லை . குப்பைகளை நீங்கள் கொண்டு செல்லவேண்டும் என்பதால் எல்லோரும் பொறுப்பாக நடக்கிறார்கள் . நான்கூட சில குப்பைகளை வைத்து இரவு வரையும் அலைந்தேன்.
இந்த இடத்தில் ஐந்து அடுக்கு பகோடா உள்ளது . இங்குள்ள பெண் தெய்வத்தின் உருவம் உச்சியிலுள்ள ஆலயத்தின் பகுதியாகும். இந்த பகோடாவில் இந்தியக் கட்டிடக்கலையின் சாயல் இருந்தது. அதைவிட எனக்கு ஆச்சரியம் தந்த தகவல் – இங்கு அனுராதபுர த்திலிருக்கும் இசுறுமுனிய புத்த கோவிலிலிருந்து இலங்கையிலிருந்து புத்தரது சாம்பல் 1966இல் கொடுத்ததால் அதை அங்கு ஒரு பெட்டியில் வைத்து உள்ளார்கள் என்ற செய்தியாகும.
இங்கு வந்த ஜப்பானிய பெண்கள் பலர் பாரம்பரியமாக கிமோனா ஆடைகளை அணிந்திருந்ததையும் பார்க்க முடிந்தது . நல்லூர் கோவிலுக்கு மட்டும் சீலையணிந்து செல்பவர்களை சிறுவயதில் பார்த்த காட்சி என் மனதில் நிழலாடியது.
எல்லா தெய்வங்களுக்கும் பாரம்பரியமான, அல்லது தொன்மையான கதைகள் இருப்பதுபோல் இங்கும் உள்ளது. மக்கள் மனத்தில் அக்கதைகளே நம்பிக்கைகளின் ஆதார சுருதி. இங்கு ஒரு கதை : ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இரு சகோதரர்களுக்கு ஒரு நாள் அவர்களது வலையில் மீன் அகப்படவில்லை. அதற்குப் பதிலாகத் தங்கத்தாலான சிறிய சிலை கிடைத்தது. ஆனால் , அவர்கள் அதன் பெறுமதி புரியாது மீண்டும் ஆற்றில் எறிந்து விட்டார்கள். ஆனால், மீண்டும் மீண்டும் அதுவே அவர்கள் வலையில் பட்டது. இறுதியில் தங்களது தலைவரிடம் அதை எடுத்து சென்றபோது அது ஒரு பெண் தெய்வமாக அவரால் கணிக்கப்பட்டு அங்கு புல்லால் வேய்ந்த குடிசையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது . இதன்பின் மூன்று நாட்களில் சொர்க்கத்திலிருந்து வந்த தங்க டிராகன், வானில் நடனம் ஆடியதை பலர் கண்டார்கள். இது நடந்த காலம் கி . பி 628 அக்காலத்திலே மகாஞான புத்த மதம் ஜப்பானுக்கு வந்தது.
மகாஞான பௌத்தம் யப்பானுக்கு வந்தபோது ஏற்கனவே 1000 வருடங்கள் பழமையானது புத்த மதம். ஆரம்பத்தில் வந்த மதம் பிக்குகளோடும் பிக்குணிகளோடும் மடாலயங்களில் மட்டுமே இருந்தது . அரச குலத்தவர்களிடமோ அல்லது சாமானியர்களிடம் செல்லவில்லை. கிட்டத்தட்ட 200 வருடங்கள் பின்பு அரச குலத்தவர்களால், சாமானியர்களிடம் பரப்பப்பட்டது . அக்காலத்தில் பௌத்தம், கொரியா சீனா நாடுகளிலும் அரச குலத்தின் மதமாக இருந்தால் இது ஒரு பிரபுத்துவ கலாச்சாரமாக மாறியது எனலாம். அரசர்கள் நல்லாட்சி செய்வதற்குப் பௌத்தம் உதவியது என்பதை நாம் மறுக்க முடியாது. நமது சைவ மதம் அரசர்களால் தென்னிந்தியாவில் வளர்க்கப்பட்டது போலான நிலை இங்கும் இருந்தது. ஆனால், மக்கள் காலம் காலமாக இருந்த தங்களது ஷின்டோ வழிபாட்டு முறையில் ஈடுபட்டார்கள்.
யப்பானில் பிற்காலத்தில் பௌத்தம் இங்கு இரு பிரிவுகளாகப் பிரிந்தது (Shingon Buddhism and the more popular Pure Land Buddhism -: அமிடா பௌத்தம்) இந்த இரு பிரிவும் சாதாரண மக்களிடம் பௌத்த போதனையைக் கொண்டு சென்றன நமது ஏளாவது நாள் கிறீஸ்தவம்போல் எனலாம்.
தற்போது யப்பானில் பிரபலமானது அமிடா பௌத்தம் (Pure Land Buddhism) இதில் சொர்க்கம் நரகம் உள்ளது. அதாவது இதில் உள்ள அமிடா போதிசத்துவர் முன்பு புத்த துறவியாக இருந்தவர். தற்பொழுது போதிசத்துவரான இவரால் மக்கள் நரகத்திற்குச் செல்லாது காப்பாற்றப்படுவார் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது.
சென்சோஜி புத்த ஆலயம் மகாயான மதத்தின் புத்த கோவிலாக இருந்தபோதிலும் இங்கு சொரக்கத்தின் வாசல் (Torii Gates) உள்ளது. அதை இடி முழக்கத்தின் வாசல் (Thunder Gate) என்பார்கள் என எழுதப்பட்டு இருந்தது. இந்த ஆலயம் 942 இல் கட்டப்பட்டதாகும். இது ஷின்ரோ மதத்தின் சின்னமாகும். இதன் அர்த்தம் இந்த வாசலுக்கு அப்பால் சொர்க்கமே உள்ளது என்பதாகும். இது ஆயிரம் வருடங்கள் பழைமையானது. இந்த வாசலில் மக்கள் வந்து இங்குள்ள புத்த கோயிலை அழிவிலிருந்து பாதுகாக்க வாயுதேவன், இடிமுழக்கம் என்பவற்றின் கடவுளிடம் வேண்டுவார்கள் . அதாவது நமது இந்திரனிடமும் வாயுதேவனிடமும் என வைத்துக்கொள்ள முடியும் .
பகோடவை சுற்றிவிட்டு வெளியேவந்தபோது இரண்டு அழகான புத்தரது கற் சிற்பங்கள் இருந்த. அவற்றின் அருகே இளைப்பாறிவிட்டு சிறிது சென்றபோது ஒரு தாய் குழந்தையைப் பாதுகாப்பாக அணைத்திருப்பதும் அந்த கருங்கல் சிற்பத்திற்கு சிவப்பு உடை அணிவித்திருந்ததும் மிகவும் அழகாக இருந்தது.
இந்த கோயில் பல தடவை அழிந்தது. மீண்டும் திருப்பி கட்டப்பட்டது. எக்காலத்திலும் நடுங்கியும் நிலமும், சுனாமிகள் கொண்ட கடலை ஆதாரமாக கொண்ட யப்பானியர்களுக்கு தெய்வங்களின் தேவை இந்த நவீன காலத்திலும் உள்ளது என்ற சிந்தனையோடு அந்த இடத்தை விட்டு அங்குள்ள உணர்ந்தேன்பானில் சில நாட்கள்2
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.