பயணத்தொடர்: நதியில் நகரும் பயணம் (2) - நடேசன் -
- இரண்டாவது உலகப்போரில், மரணமடைந்த 6,845 சோவியத் போர் வீரர்களுக்கான , பிரட்ரிஸ்லாவா நகரின் சிலாவின் என்ற இடத்திலுள்ள நினைவுச் சின்னம. -
புடாபெஸ்டில் எங்களது படகில் ஏறியதும் வரவேற்பு விருந்துடன், கப்பலில் வேலை செய்பவர்களுடன் எமக்கு அறிமுகம் நடந்தது. இந்த உல்லாசப்படகு போகும்போது அதாவது டானியுப்பையும் ரைன் நதியையும் இணைக்கும் நதி மெயின் நதி (main River) என்பார். இது பல இடங்களில் மிகவும் அகலமற்ற கால்வாய்கள் இருப்பதால் படகின் அகலம் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். சில இடங்களில் டொக் எனப்படும் பகுதிகளைக் கடக்க அரை மணி நேரம் செல்லும். நதி நீரை அடைத்து நீர்மட்டத்தை உயர்த்துவார்கள். ஜேர்மன்- பவேரியா பிரதேசத்திலே இந்த ஆறு உள்ளது . பல காலமாகக் கப்பல் போக்குவரத்து இந்த வழியாக நடப்பதால் இந்த நீர்ப்பாதை கவனமாக பராமரிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நதிகள் மிகவும் சுத்தமானவை. மிகவும் கடுமையான சட்டங்கள் இங்கு உள்ளது. நதிகளில் படகுகள் தரித்து நிற்கும்போது பயணிகளது கழிவுகள் தரித்து நிற்கும் இடங்களில் அகற்றப்படும். அதற்கான கொந்தராத்து நிறுவனங்களால் அதேபோல் உணவுகளும் புதிதாகக் கொண்டு வரப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது
நாங்கள் சென்ற நதிப் படகில் மூன்று தட்டுகள் உள்ளன. அங்கு வேலை செய்பவர்களை விட 200 பயணிகள் இருந்தார்கள். இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளன.
அவுஸ்திரேலியாவின் படகுக் குழுமம் என்றபோதும் படகின் கெப்டன் உக்ரேனை சேர்ந்தவர். உணவுக்குப் பொறுப்பாக இருந்தவர் ரஸ்சிய நாட்டையும், பயணிகள் நலத்திற்குப் பொறுப்பாக இருந்த விக்ரோரியா என்ற இளம் பெண் பெலரூஸ் நாட்டையும் சேர்ந்தவள். படகின் பொறுப்பிலிருந்தவர் ஒரு போர்த்துக்கல் நாட்டவர். சமையல், பரிமாறல் , சுத்தப்படுத்தல் போன்ற வேலைகளில் கிழக்கு ஐரோப்பா, பிலிபைன்ஸ் நாட்டினர் வேலை செய்தார்கள். கப்பலில் வேலை செய்தவர்களைப் பார்த்தபோது ஒற்றுமையான ஒரு ஐக்கிய நாடுகள் சபைபோல் தெரிந்தார்கள். பயணிகளில் பெரும்பான்மையானோர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். மிகுதியானவர்கள் கனடா, அமெரிக்கா, பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள். இங்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எங்களைப்போல் அறுபதைத் தாண்டியவர்கள், அத்துடன் பலருக்கு இதுவே முதல் பயணமாக இருந்தது.