* Photo by David Edelstein on Unsplash
இரவில் டோக்கியோ போய் சேர்ந்ததும் நாங்கள் தங்க வேண்டிய ஹொட்டேலை அண்ணாந்து பார்த்தேன். இத்தனை உயரமான மாடிக்கட்டிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர் தப்புவோமா என்ற வினா மனத்தில் எழுந்தது.
ஒவ்வொரு நாளும் ஏதாவது இடத்தில் நடுங்கியபடி இருக்கும் நாடு யப்பான்.
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களை காப்பாற்றும்படி பிரார்த்திப்பார்கள். படைப்பில் நம்பிக்கையற்ற, பரிணாமத்தை நம்பும் நான் என்ன செய்ய முடியும் ? அரைநூற்றாண்டு தாம்பத்தியம் எங்களிடையே இருப்பதால் எனக்கும் சேர்த்து சியாமளாவே பிரார்த்திக்கலாம்!
இலகுவான வழி?
எப்படி இந்த நாட்டில் இவ்வளவு உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் தப்புகிறது என்ற எனது கேள்வியை நாகரிகமாக எமது வழிகாட்டியிடம் ஹொட்டேல் வாசலில் வைத்துக் கேட்டேன்.
அந்த யப்பானிய இளைஞன் என்னை பார்த்து சிரித்தான். ஆனால் , பதில் தரவில்லை.
இந்த இரவு நேரத்தில் இது தேவையான கேள்வியா என சியாமளாவின் பார்வை என்னை நோக்கி கூரிய கணையாக வந்தது.
அவனது மனத்தில் என்ன நினைத்திருப்பான்? அதைபற்றி என்ன கவலை?
நான் கேட்டதற்கு காரணம் உள்ளது.
(On 11 March 2011, the Fukushima nuclear power station was damaged after the magnitude 9.0 earthquake and subsequent tsunami.)
யப்பானில் ஆங்கிலம் பேசுபவர்கள் மிக குறைவு. ஆனால் , அமெரிக்காவில் இரு வருடங்கள் படித்த இளைஞன் வழிகாட்டியாக கிடைத்தது எங்கள் அதிஸ்டமே .
அடுத்த நாள் காலையில் ஹொட்டேலை விட்டு பஸ்சில் ஏறியபின் அவனிடமிருந்து, எனது இரவு கேள்விக்கான விடை அரைநாள் தாமதமாக கிடைத்தது.
‘யப்பானில் ஃபுக்கசீமா நில நடுக்கத்தால் கடலில் ஏற்பட்ட சுனாமியாலே அணு உலையின் குளிராக்கி ( Cooling pond) உடைந்து கதிரியக்கம் வெளிப்பட்டது. அந்த நில நடுக்கம் டோக்கியோவில் தாக்கியபோதும் உயரமான கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சிறிய தனி வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. பெரிய கட்டிடங்கள் நிலத்தின் கீழ் அத்திவாரமற்று அவற்றை இரும்பு பிரேம் தாங்கியபடி இருக்கும். அந்த பிரேமில் இப்படியான அதிர்வைத் தாங்கி அசைந்து ஆடிவிட்டு (Horizontal Shock absorber) மீண்டும் அதே நிலைக்கு வரும் தன்மை உள்ளதால்,அடுக்குமாடிகள் இங்கு பாதுகாப்பானவை‘ என்று விளக்கம் கிடைத்தது.
யப்பானுக்கு கடந்த வருடம் சென்ற ஒரு மில்லியன் அவுஸ்திரேலியர்களில் இருவராக நானும் சியாமளாவும் சென்றோம். நாங்கள் நடு இரவில் டோக்கியோ சென்றடைந்தபோது ஒரு நாற்பது மாடிகள் கொண்ட ஹொட்டேலுக்கு அழைத்து சென்றார்கள். ஒரு குழுவாக சென்றதால் மொழி, போக்குவரத்து , உணவு என்ற பிரச்சினைகள் எமக்கு இருக்கவில்லை.
ஜப்பான் வரலாறு பல ஆசிய நாடுகளில் இருந்து வித்தியாசமானது. எந்த ஒரு ஐரோப்பிய நாடுகள்போல் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருக்காதது மட்டுமல்ல மற்ற நாடுகளை தனது காலனியின் கீழ் வைத்திருக்க முயன்றது. ஜெங்கிஸ்கான் காலத்தில் மங்கோலியர்கள் மூன்று முறை கடல் கடந்து படையெடுத்து தோற்றார்கள். ஒரு முறை புயலே யப்பானியர்களை காப்பாற்றியது என அறிந்தேன்.
ஆயிரம் வருடங்கள் வரையும் ஷோகன் (Shogun) என்ற ஒரு வித இராணுவ பொறுப்பானவர் முழு யப்பானுக்கும் பொறுப்பாக இருந்தாலும் அவரின் கீழ் இந்திய ஜமீன்தார்கள் போல் பல பிரபுக்கள் கொண்ட பிரிவுகளாக யப்பான் அக்காலத்தில் ஆளப்பட்டது. அவர்களது அதிகாரம் எல்லை கடந்தது. அவர்களிடம் சமுராய் எனப்படும் விசுவாசமாக போர் வீரர்கள்- ( அதாவது பாண்டிய மறவர்கள் போல) இருந்தார்கள். அதன்பின் எல்லா பிரதேசங்களையும் இணைத்து மொத்தமான ஜப்பானுக்கு ஒரு மன்னர் வருகிறார். 7ஆம் நூற்றாண்டின் பின்பாக மன்னர் இருந்தாலும் அவர் அதிகாரமற்றவர். யப்பானிய மன்னர் மீண்டும் அதிகாரம் பெற்றது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே நடந்தது.
வரலாற்றுக்கு முன்பாக அதாவது 35,000 வருடங்கள் முன்னால் யப்பான் ஆசியாவோடு நிலமாக இணைந்திருந்த காலத்தில் மக்கள் சைபீரியாவின் பகுதிகளிலிருந்து சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆரம்பக்கால யப்பானின் வரலாறு மற்றைய நாடுகளினது கற்கால மக்கள்போல் ஆரம்பிக்கிறது. அதாவது 10,000 வருடங்களுக்கு முன்பு கரையோரத்தில் வாழும் மக்கள் மீன் பிடித்தல், உள்பகுதியில் வசிப்பவர்கள் வேட்டையாடுதல் என்பன முக்கிய ஜீவனோபாயத் தொழிலாக நடந்தது. யப்பானிய வரலாற்றில் ஒரு வித்தியாசமான விடயம் எனக்கு அறிய முடிந்தது .
பெரும்பாலாக பிரதேசங்களில் மண்பாண்டங்களின் உருவாக்கம் விவசாயத்தோடு தொடங்கும். ஆனால், யப்பானில் மண்பாண்டங்கள் விவசாயத்திற்கு ஆயிரம் வருடங்கள் முன்பு தொடங்கியது என்கிறார்கள். யப்பானுக்கு கிட்டத்தட்ட 2500 வருடங்கள் முன்பாக கொரியா போன்ற இடங்களிலிருந்து விவசாயம் மற்றும் உலோக சாதனங்களின் தொழில்நுட்பம் சென்றது. யப்பானின் தெற்குத் தீவுகள் கொரியாவிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ளன. அதாவது இலங்கைக்கு ,இந்தியா போல அக்கால கடல் பயணத்திற்கு அதிக தூரமில்லை. விவசாயம் ஆரம்பித்தபின் பின்பு சமூக கட்டுமானங்களின் படிமானங்கள் உருவாகிறது.
ஒரு காலத்தில் ( கி.பி300) சீனாவிலிருந்து சென்ற ஒரு தூதுவர் ஒருவர் யப்பானை பற்றிச் சொல்லிய சில விவரங்கள் எழுத்தில் உள்ளன . அதில் பல சிறிய அரசுகள் அக்காலத்தில் ஒன்றாகிய யப்பானில் 30 பெரிய அரசுகள் இருந்தன அதில் முக்கியமான அரசைப் பெண் மந்திரவாதி அவளது சகோதரனது உதவியுடன் அரசாண்டாள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சூரியனை முக்கிய கடவுளாக கொண்டாடிய யப்பானியர்களது வாழ்க்கை சீனாவிலிருந்து சென்றவருக்கு வித்தியாசமானதாகத் தெரிந்திருக்கலாம் . பிற்காலத்தில் எழுத்துமுறை சீனாவிலிருந்து சென்றது. இதனால் ஆரம்ப ஷின்டோ மத நம்பிக்கை, தொன்மைக் கதைகளே. கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டு வரையில் வாய்மொழி விடயங்களாகவே மத நம்பிக்கை இருந்தன. நமது இதிகாசம் புராணங்கள்போல், இதற்கு மேல் வரலாறு தேவையில்லை.
நாங்கள் யப்பான் சென்றது இலையுதிர்காலம். வசந்த காலமும் இலையுதிர் காலமும் விசேடமானவை . இளஞ்சிவப்பு நிறத்தில் ஷெரி மரங்கள் வசந்தகாலத்தில் பூத்து குலுங்குவதுபோல் சிவப்பு மஞ்சள் என மாப்பிள் இலைகள் வர்ணத் தோரணமிட்டு நம்மை வரவேற்கும்.
டோக்கியோவில் முதல் நாள் காலையில் சென்றது அருகில் உள்ள யப்பானிய பூங்காவிற்கு. இந்த பூங்கா 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டோக்கியோ, நாட்டின் தலைநகரானபோது, அப்போதிருந்த ஷோகன் இந்த அழகிய பூங்காவை தனக்காக வடிவமைக்கிறார்.
அக்காலத்தில் பொதுமக்கள் இந்த பூங்காக்களுக்கு செல்ல முடியாது. கடந்த 100 வருடங்களாக மட்டுமே பொதுமக்கள் உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த யப்பானிய பூங்காக்களின் தத்துவமே தனியானது. மற்றைய நாடுகளில் பூங்காக்கள் இருந்தாலும் அவைகள் கலாசாரக் கூறுகள் அல்ல.அழகுக்காக உருவாக்கப்பட்டவை. இங்கு பூங்காக்கள் யப்பானிய கலாசாரத்துடன் இணைந்துள்ளன. முக்கியமாக அமிடா பௌத்தம்( Pure land Buddhism) வந்தப்பின் இவை பூமியில் சொர்க்கத்தை பிரதிபலிப்பன . ஷோகன் இறந்தபின், அவர் சொர்க்கம் செல்லும் நம்பிக்கையுடன் இருந்தார் என்பதால் அவரது கற்பனையில் இப்படித்தான் சொர்க்கம் இருக்கும் என்ற நினைவுடன் இந்தப் பூங்காக்கள் வடிவமைக்கப்பட்டது. உண்மையில் சொர்க்கம் இப்படி இருக்குமென்றால் நல்ல விடயம், நானும் அதற்கு பயண சீட்டை எடுக்க விரும்புவேன்.
கியோசூமி பூங்கா (Kyosumi Garden) மிகவும் அழகானது. பூங்கா என வார்த்தையில் சொல்லாது நான் அதை விவரிக்கவேண்டும். ஒரு மணி நேரம் பூங்காவை சுற்றி வந்தபோது, இதுவரையிலும் ஆங்காங்கு நான் கேள்விபட்ட யப்பானிய பூங்காவின் முக்கிய கூறுகளை அங்கு முழுமையாக பார்க்க முடிந்தது.
உலகத்தின் பல பெரிய பூந்தோட்டங்களைப் பார்த்துள்ளேன். பேராதனையில் படித்த காலத்தில் அங்குள்ள பூந்தோட்டம் என்னைக் கவர்ந்தது. அவுஸ்திரேலியாவில் பலவற்றைப் பார்த்தாலும் எனது மனதில் நிற்பது கனடாவின் மேற்குப்பகுதியில் உள்ள விக்டோரியா நகரில்(Butchart Garden) உள்ளதே. இங்கு அழகை விட இந்த பூங்கா ஒரு காலத்தில் சுண்ணாம்பு கற்கள் அ௧ன்றெடுத்த இடமாக இருந்தது. அதை தனி ஒருவராக வடிவமைத்து இப்பொழுது அரசின் பொறுப்பில் உள்ளது. சமீபத்தில் அவுஸ்திரியாவின் சலஸ்பேர்க்கில் உள்ள மிரபெல்லா பூங்காவைப் பார்த்தேன். இவைகள் எல்லாம் ஐரோப்பிய சிந்தனையின் வடிவங்கள். அதேபோல் டெல்லியில் சில பூங்காக்கள் முகாலய அல்லது பேர்சிய சிந்தனையின் வடிவமைப்பில் அமைந்தது.
இவற்றிலிருந்து யப்பானியர்களது பூங்கா அமைப்பு முற்றாக வித்தியாசமானவை. யப்பானின் கால நிலைக்கும் அவர்களது நில அமைப்பையும் ஒன்றிணைத்து அமைப்பார்கள். யப்பானில் நான்கு காலநிலைகளிலும் அந்த பூங்காக்கள் அழகாக இருப்பதற்கு, அதற்கேற்ப மலர் செடிகளுடன், எல்லா கால நிலைக்கும் ஏற்ற மரங்கள், யப்பானின் நில அமைப்பு அதாவது மலைகள், பள்ளங்கள், நீர்நிலைகள், அருவிகள் என்பவற்றை ஒன்றிணைத்து, அதற்கேற்ப நீர் தடாகங்கள் உருவாக்கி, அதில் சிறிய அருவிகள் மெல்லிய ஓசையுடன் சலசலத்தபடி ஓடும். ஒழுங்கற்ற தடாகத்தில் மீன்கள், பறவைகள்,நீர்த்தாவரங்களுடன், குறுக்கே வாய்கால்கள் மீது சிறிய மரப்பாலங்கள் பாதையாக அமைந்திருக்கும். ஆங்காங்கே கற்கள் வைக்கப்பட்டு , அவைகளில் பச்சைப் பாசி படித்திருக்கும். சுற்றியிருக்கும் கருங்கற்களில் சிறிய சிற்பங்கள் அல்லது பகோடா போன்ற அமைப்பு இருக்கும். நடக்கும்போது பாதைகளாக மரத்தாலான சிறிய பாதைகள் வளைந்து செல்லும். வர்ண விளக்குகள் பல இடங்களில் அமைத்திருப்பார்கள். மொத்த பூங்காவும் அமிடா புத்தரின் சொர்க்க உலகத்தை நமக்கு படிமமாக்குகின்றன.
பூங்காவில் மரங்கள் சிறிதாக, அதாவது பொன்சோ முறையில் வளர்க்கப்படுகிறது. நான் பார்த்தபோது, சில மரங்களின் அடிப்பகுதிகளை சுற்றி காயமடைந்த இடத்தில் துணி சுற்றுவதுபோல் மூங்கில் பாய் போன்ற ஒன்றைக் கொண்டு அந்த மரத்தை சுற்றியிருந்தவர்கள் . அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது . ‘ மரத்தின் சில பகுதிகள் ஏதாவது காரணத்தால் உடைந்தால் அந்த இடங்களில் தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்காக’ என்ற பதில் கிடைத்தது. பூங்காவின் நுழைவாயில், மூங்கில்களால் அமைந்தது இவை எல்லாம் இங்கு இருந்தால் உள்ளே வருபவர்கள் மனங்கள் பூரண அமைதி அடைய முடியும் என கருதுகிறார்கள்.
இங்கு யப்பானிய மன்னரது இறுதிக் சடங்குகள் நடந்ததுடன் பல நில நடுக்கங்களை கடந்து வருங்கால சந்ததிக்காக இந்த பூங்கா தற்போது டோக்கியோ நகரசபையினரால் பராமரிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு அங்கிருந்தது
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.