எழுத்தாளர் டானியல் அன்ரனியின் 'முல்லை' சஞ்சிகை! - வ.ந.கிரிதரன் -
இலங்கையில் வெளியான கலை, இலக்கியச் சஞ்சிகைகள் பற்றிய பூரணமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது அவசியம். நூற்றுக்கணக்கில் சஞ்சிகைகள் பல வெளிவந்து , பொருளாதாரச் சூழல் காரணமாகத் தாக்குப்பிடிக்க முடியாது காணாமல் போயிருக்கின்றன.இவை பற்றியெல்லாம், இவற்றில் எழுதிய எழுத்தாளர்கள், பங்களித்த ஓவியர்கள் , வெளியான பல்வகை ஆக்கங்கள் பற்றியெல்லாம் தகவல்கள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
எழுத்தாளர் டானியல் அன்ரனி சமர் காலாண்டிதழின் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வந்தவர். சமர் வெளியீட்டகம் மூலம் தனது 'வலை' சிறுகதைத்தொகுதியினையும் ஜனவரி 1987இல் முதற்பதிப்பாக வெளியிட்டவர். ஆனால் எத்தனைபேருக்கு எழுபதுகளில் இவர் 'முல்லை' என்னும் சஞ்சிகையினை ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வந்தவர் என்பது தெரியும்? ஜனவரி 1987 வெளியான 'வலை' தொகுப்பின் பின்பக்க ஆசிரியர் பற்றிய குறிப்பில் கூட அச்சஞ்சிகை பற்றிய தகவலினைக் காண முடியவில்லை.