பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவாக.. - வ.ந.கிரிதரன் -
* பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் பிறந்த தினம் மே 10!
பேராசிரியர் கா.சிவத்தம்பியை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது அவரது 'தமிழில் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்' ஆய்வு நூல் மூலம்தான். தினகரன் வாரமஞ்சரியில் அவர் எழுதி வெளியான கட்டுரைகளின் தொகுப்பே அந்நூல். தமிழ்ப்புத்தகாலய வெளியீடாகத் தமிழகத்தில் வெளியானது. அவ்விதம் தமிழகத்தில் மேற்படி நூல் வெளிவரக் காரணமாகவிருந்தவர் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் என்பதை நூலுக்கான முன்னுரையில் பேராசிரியரே கூறியுள்ளார்.
இந்நூல் எனக்கு எவ்விதம் கிடைத்தது என்பதும் என் வாழ்வில் சுவையானதோர் அம்சம். ஏழாம் வகுப்பு மாணவனாக , மட்டக்களப்பில் நடந்த அகில இலங்கைத் தமிழ்த்தின விழாவில் கட்டுரை எழுத வவுனியா மகா வித்தியாலய மாணவனாகச் சென்றிருந்தேன். அதில் எனக்குக் கிடைத்த முதற் பரிசுக்காகக் கிடைத்த நூல்களிலொன்றுதான் மேற்படி நூல்.
அக்காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை பற்றிய ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் எழுதிய பலரும் தவறாது பாவித்த நூல்களிலொன்று இந்த நூல்.
இதன் பின்னர் என் வாசிப்பின் வளர்ச்சியினூடு இவரது கட்டுரைகள், நூல்களை வாசித்து வந்துள்ளேன். இவரது அறிவாற்றலில் மிகவும் மதிப்பு வைத்துள்ளேன். ஆனால் இவரது பிற்காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் இவரது நிலை தளும்பியதையும், சிலவற்றில் சில விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதையும் அவதானித்திருக்கின்றேன். முழுமதிக்கறைகளாக அவற்றை நான் அணுகுவேன்.
இவரை நான் ஒரு தடவை நேரில் சந்தித்துள்ளேன். நண்பர் ஒருவருடன் எண்பதுகளின் ஆரம்பத்தில் 'நுட்பம்' சஞ்சிகைக்காகக் கட்டுரை பெறுவதற்காகச் சந்தித்துள்ளேன். கட்டுரை தருவதாக உறுதியளித்தார். அச்சமயம் பேராசிரியர் கைலாசபதியையும் சந்தித்தேன். அவரும் குறிப்பிட்டதொரு தினத்தில் தருவதாக உறுதியளித்ததுடன் அத்தினத்தையும் தனது குறிப்பேட்டில் எம் முன்னால் வைத்தே குறித்துக்கொண்டதையும் அவதானித்தேன். குறித்த தினத்தில் பேராசிரியர் கைலாசபதி கட்டுரையினைத்தந்தார். பேராசிரியர் சிவத்தம்பியின் கட்டுரை கிடைக்கவேயில்லை.