நண்பரும், எழுத்தாளரும், முகநூலில் ஜெயன் தேவா , Jeyan Deva , என்னும் பெயரில் அறியப்பட்டவருமான மகாதேவன் ஜெயக்குமரன் (விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அமைப்பின் போராளியாகவும், அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினி ஜெயக்குமரனின் கணவர்) மறைந்த செய்தியினை அறிந்தேன். அண்மைக்காலமாகச் சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்தார். தனிமையில் வாழ்ந்து வந்த ஜெயன் தேவாவின் மறைவு துயர் தருவது.
தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' (சுயசரிதை) 'மழைக்கால இரவுகள்' (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை தமிழினி ஜெயக்குமரனின் மறைவையடுத்து வெளியிட்டார். இவரது முக்கிய சமூகப் பங்களிப்பாக இதனை நான் கருதுவேன்.
இவரது கட்டுரையொன்று 'பதிவுகள்' இணைய இதழில் ' மற்றொரு செப்ரெம்பர் 11ம் ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும். சல்வடோர் அயெண்டே (1908-2008)' என்னும் தலைப்பில் , ஜெயன் மஹாதேவன் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது.
யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியான ஜெயன் தேவாவின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.
'பதிவுகள் ' இணைய இதழில் 'மற்றொரு செப்ரெம்பர் 11ம் ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும். சல்வடோர் அயெண்டே (1908-2008)' என்னும் தலைப்பில் ஜெயன் மஹாதேவன் எழுதிய கட்டுரை!
'மற்றொரு செப்ரெம்பர் 11ம் ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும். சல்வடோர் அயெண்டே (1908-2008)' - ஜெயன் மஹாதேவன் -
லத்தின் அமெரிக்க கண்டத்தின் மக்கள் கூட்டம் பல தலைமுறைகளாக காலணியாதிக்கத்தின் அடக்கு முறையின் கீழ் அனுபவித்த அவலங்களைக் கண்டு பொங்கியெழுந்த புரட்சியாளர்கள் பலர். இவர்களுள் எனர்ஸ்டோ சே குவேரா போன்று தமது மக்களுடைய அவலநிலையைக் கண்டு மனம் பொறுக்காமல் அவர்களுடைய நன்மைக்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த காரணத்தால் கொலை செய்யப்பட்ட தலைவர்களில் ஒருவர் சிலி நாட்டின் ஜனாதிபதி சல்வடோர் அயென்டே, தமது மக்களின் நன்மைக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதனது ஆதரவாளர்களான சுதேசியப் பெருமுதலாளிகளையும் பகைத்துக் கொண்டதால், 1973 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி சிலியின் இராணுவ ஜெனரல்களால் கொலை செய்யப்பட்டார்.
ஜனாதிபதிக்கான தேர்தலில் 1970 இல் போட்டியிட்டபோது அயென்டே தான் ஒரு மார்க்ஸிஸ்ட் எனப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றபோது, உலகிலேயே வாக்குச்சீட்டின் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த முதலாவது மார்க்ஸிய அரசுத் தலைவராக அயென்டே புதிய வரலாற்றை உருவாக்கினார்.
லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் இருந்த நாடுகளுக்கும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கும் அயென்டேயின் வெற்றி ஏகாதிபத்தியத்துக்கெதிரான ஏழை மக்களின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டு பெரும் ஆதர்சமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. அரசியல் அதிகாரம் எதுவுமற்;ற சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறிய முன்னேற்றம்கூட, அவர்கள் வாழும் சமூக அமைப்பில் ஏற்படக்கூடிய தீவிரமான மாற்றத்தின் மூலமே சாத்தியமாகுமெனில், அத்தகைய ஒரு தீவிர அமைப்பு மாற்றத்தை அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில், சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்ட வழிகளில் ஏற்படுத்துவது நடைமுறைச் சாத்தியமானது என்பதை அயென்டேயின் வெற்றி உலகத்திற்கு உணர்த்தியது. ஒரு மாக்ஸிஸ்ட்டை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டத ன் மூலம் சிலி, உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.
1908 ல் உயர் குடும்பத்தில் பிறந்த அயென்டே, தனது இருபத்தைந்தாவது வயதில் ஏனைய அரசியல் தோழர்களுடன் சேர்ந்து சிலியின் சோசலிசக் கட்சியை நிறுவினார். பாராளுமன்றம் முதலான ஜனநாயக அமைப்புகளின் மூலமாக, சோசலிசச அடிப்படையில் அமைந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அயென்டே உறுதியாக நம்பினார். வன்முறையை அடிப்படையாகக் கொண்ட புரட்சியின் மூலம் சோசலிசத்தை உருவாக்குவது, நூற்றைம்பது வருடங்களுக்கு மேலான ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட சிலிக்கு பொருத்தமானதல்ல என அவர் கருதினார். சோசலிசத்திற்கான சிலியின் பாதையை நாற்பது வருடங்களுக்கு மேலாக அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். சிலியின் உழைக்கும் ஏழை மக்களுடைய நலன்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த அயென்டே, தனது வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும், சொந்த நலன்களுக்காக, ஏழைகளின் வாழ்க்கையைப் பேரம்பேசி விட்டுக் கொடுக்காத தலைவராக இறுதிவரை வாழ்ந்தார்.
மக்களால் சுருள்முடித் தோழர் என அன்புடன் அழைக்கப்பட்ட அயென்டே நவம்பர் 1970 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் மக்களுக்கான நாற்பது அம்சத் திட்டத்தை அறிவித்தார். ஒவ்வொரு சிலியக் குழந்தைக்கும் ஒவ்வொரு நாளும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்குவது அவற்றுள் மிக முக்கியமானது. பல தலைமுறைகளாக வறுமையின் பிடியில் போசாக்கின்மையால் வாடிய ஏழை மக்களுக்கு இத்திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. 1970ம் ஆண்டளவில் சிலி போன்றதொரு ஏழை நாடு மேற்கொண்ட இத்திட்டம் உலகிலேயே ஒரு முற்போக்கான சமூக அபிவிருத்தித் திடடமாகக் கருதப்பட்டது.
கட்டுரையை முழுமையாக வாசிக்க - https://www.geotamil.com/.../2021-02.../4028--11-1908-2008