படித்தோம் சொல்கின்றோம்: சிங்கள மூத்த எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் - எங்கள் கிராமம்! அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன்! - முருகபூபதி -
இலங்கையின் தென்பகுதியில் கொக்கலை என்ற சிங்களக் கிராமத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த மார்ட்டின் விக்கிரமசிங்கா, சிங்கள இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்பாளி. அவர் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் 90 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். அவற்றில் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மாத்திரமன்றி ருஷ்ய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது நாவல்கள் சில திரைப்படங்களாகியுள்ளன. 1914 ஆம் ஆண்டில் தனது முதலாவது நாவலாக லீலா என்ற புதினத்தை வெளியிட்டிருக்கும் மார்ட்டின் விக்கிரமசிங்கா 1976 ஆம் ஆண்டு தமது 86 ஆவது வயதில் மறைந்தார். அன்னாரின் நினைவாக இலங்கையில் மல்லிகை இதழும் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது.
மார்ட்டின் விக்கிரமசிங்காவின் கம்பெரலிய நாவலை பேராசிரியர் முகம்மது உவைஸ் தமிழுக்கு வரவாக்கியதையடுத்து, பின்னாளில் மடோல்தூவ நாவலை மடோல்த்தீவு என்ற பெயரில் சுந்தரம் சௌமியன் மொழிபெயர்த்தார். அத்துடன் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் பற்றற்ற வாழ்க்கை நூலை சுந்தரம் சௌமியனும் சில சிறுகதைகளை பேராசிரியர் சபா. ஜெயராசாவும் தமிழுக்கு மொழிபெயர்த்து வழங்கியுள்ளனர். ஏற்கனவே பல சிங்கள இலக்கிய படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்தவரும், பத்திரிகையாளரும், இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகளை பெற்றவருமான இரா. சடகோபன் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் அபே கம என்ற தன்வரலாறு சார்ந்த கிராமத்தைப்பற்றிய கதையை எங்கள் கிராமம் என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இதனை இலங்கை இராஜகிரிய சரச பதிப்பகம் வெளியிட்டுள்ளது.