எழுத்தாளர் தேவா சுவிஸ்ஸில் வசித்து வந்தவர். இலங்கையில் போர் முடிவுக்கு  வந்த பின்னர் இலங்கைக்குச் சென்றவர். தமிழ் இலக்கியத்துக்கு இவரது மொழி பெயர்ப்புகள் வளம் சேர்த்தன.  ‘குழந்தைப் போராளி’, ‘அனோனிமா’, ‘அம்பரய’ (உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்தில் எழுதிய நாவலின் தமிழ்  மொழிபெயர்ப்பு; வடலி பதிப்பகம் வெளியிட்டிருந்தது)   போன்றவை இவர் மொழிபெயர்ப்பில் வெளியான நூல்கள். எழுத்தாளர் தேவா மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மறைவு பற்றி எழுத்தாளர் மன்னார் அமுதன் தனது முகநூற் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்:

"மன்னார் மாவட்டத்தின் மூத்த இலக்கியச் செயற்பாட்டாளரும் இலக்கிய மொழிபெயர்ப்பாளருமான மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட 'அனோனிமா' தேவா காலமானார். அம்பரய, என் பெயர் விக்டோரியா, அனொனிமா, குழந்தைப் போராளி முதலிய சிறந்த மொழி பெயர்ப்புகளைத் தந்த படைப்பாளி.  நாளை , மார்ச் 26 2023,  மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிவரை பூதவுடலை அவரின் தலைமன்னார் வீட்டில் பார்வையிடமுடியும். 3.00 மணிக்கு நல்லடக்கம் இடம்பெறும்."

எழுத்தாளர் தேவாவின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.


-  எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர் தேவாவின் மொழிபெயர்ப்பில் , தமிழகத்தில் பூபாளம் பதிப்பக வெளியீடாக வெளியான 'அனோனிமா' மொழிபெயர்ப்பு நாவலுக்கு எழுதிய முன்னுரையிது. இதனை அவர் தனது வலைப்பூவான 'தந்துகி'யில் வெளியிட்டிருந்தார். அதனை நன்றியுடன் எழுத்தாளர் தேவாவின் மறைவையொட்டி மீள்பிரசுரம் செய்கின்றோம். -


ஆண்கள் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள், மனிதர்கள் வேறுபாதையில் செல்லவும்

- ஆதவன் தீட்சண்யா -


1.

காலந்தோறும் போர்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. தேசியப் பெருமிதம், இனமானம், வீரம், எல்லை விரிவாக்கம், கௌரவப்பிரச்னை என்று போருக்கான காரணங்களை ஆட்சியாளர்களும் ஆள விரும்புவோருமே உருவாக்குகின்றனர். உன்னத இலட்சியம் அல்லது அற்பமான கற்பிதம் என்ற இருபுள்ளிகளுக்கிடையே அலைவுறும் எதுவொன்றையும் போருக்கான காரணமாக கட்டமைத்துவிட முடிகிறது அவர்களால். உண்மையில் அவர்கள் இருவேறு முகங்கள் கொண்ட ஒருவரே தான். சுண்டிவிடப்படும் நாணயத்தில் பூவோ தலையோ எது விழுந்தாலும் அது போரை தொடங்குவது அல்லது தொடர்வதற்குரிய சமிக்ஞையாகவே அவர்களது அகராதியில் பொருள் விளக்கம் உள்ளது. எனவே காலமும் களமும்தான் மாறுகிறதேயன்றி போரை அவர்கள் கைவிடுவதாயில்லை. ஆயுதங்களின் மீதான ஈர்ப்பு தவிர்க்கவியலாதபடி தம்மை மனிதவுயிர்கள் மீதான வெறுப்புக்குள் நெட்டித்தள்ளுவதை ஒருபோதும் அவர்கள் உணர்ந்தாரில்லை. முகமும் இருதயமுமற்ற ஆயுதங்களின் முனையில் வழியும் ரத்தத்தால் நிறைகிறது அவர்களது கோப்பை.

சொந்தமக்களின் நாவும் குரலுமே போர்க்கடவுள் கோரும் முதற்படையல். எனவே போரின் நோக்கம் எதுவாயினும் அதன்பொருட்டு நோவதும் சாவதும் யாரென்ற கேள்வி எழாது ஒடுக்குவதிலிருந்தே போர் தொடங்கிவிடுகிறது. அதற்கு பிறகு நடப்பதெல்லாம் தத்தமது படைக்கலத்தில் அணிவகுத்து நிற்கும் ஆயுதங்களின் மேன்மையை சோதித்துப் பார்ப்பதும் வீழ்ந்தத் தலைகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதும்தான். இங்கு யுத்ததர்மம் என்று பேசுவதெல்லாம் வியர்த்தம். யுத்தமே தர்மமல்ல என்கிறபோது அதிலென்ன வெங்காயத்துக்கு தர்மமும் இன்னொன்றும்?

எதிரெதிர் முனைகளைப் போல் மேலுக்குத் தோன்றும் வெற்றியும் தோல்வியும் ஒன்றையொன்று ஒட்டியேயிருக்கின்றன. ஒன்றின் இருப்பிலேயே மற்றது மேலெ ழுகிறது. அரூபமாய் இருக்கிற கருத்தை திடப்படுத்துவது/ நிர்மூலமாக்குவது என்ற வெறி இறுதியில் ராணுவத்தின் வழியே நடைமுறைக்கு வருகிறது. எப்படியாயினும் யாரோ ஒரு ஆட்சியாளனுக்காக ஒரு ராணுவமே வெற்றியடைகிறது. தோற்பதென்னவோ இருதரப்பின் மக்களாய் இருப்பதுவே வரலாறாய் நெளிகிறது. இரண்டாம் உலகப்போரிலும் இதுவே நிகழ்ந்தது.

2.

ஜெர்மனியின் பெயரால் ஹிட்லர் தொடங்கி வைத்தப் போர் எல்லையற்றுப் பரவி உலகையே கிடுகிடுங்க வைத்ததை சொல்லிச் செல்ல இதுவல்ல இடம். ஆசிய நாடுகளை ஜப்பானும், ஆப்பிரிக்க நாடுகளை இத்தாலியும் ஐரோப்பிய நாடுகளை ஜெர்மனியும் காலனிகளாக பங்கிட்டுக் கொள்ளும் பேராசையில் டோஜோவும் முசோலினியும் ஹிட்லருடன் கூட்டு சேர்ந்தார்கள். இவர்களது போர்வெறிக்கு முன்னே தாக்குபிடிக்க முடியாமல் சடசடவென சரிந்து விழுந்தன சாம்ராஜ்யங்கள்.

தடையற்றப்பாதையில் கிடைத்த வெற்றிகளின் கிறக்கத்தில் மேலும்மேலும் முன்னேறிச் சென்ற ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனில் தன் உச்சபட்ச மூர்க் கத்தை வெளிக்காட்டின. எட்டே எட்டு வாரங்களில் சோவியத்தை வீழ்த்தி விடும் திட்டத்தோடு களமிறங்கியதால் அங்கு ஏற் படுத்திய அழிமானங்கள் போர் வரலாற்றில் இதுவரை உலகம் அறியாதது. நிலை குலைந்திருக்கும் நாடுகளது மனிதவுயிர்களின் எண்ணிக்கையில் அர்த்தம் ஒன்றுமில்லை. வழக்கத்திலில்லாத கடுமையான வழிமுறைகள் தாக்குதல்கள் மூலம் மட்டுமே பிறரை அச்சுறுத்தக்கூடிய அளவிலானதொரு பயங்கர வெற்றியை ஈட்ட வேண்டும் என்றும் சரணடையும் ரஷ்யர்களைப் பாதுகாக்க உணவுக்கும் மருந்துக் கும் செலவழிக்க வேண்டியிருக் கும் என்ப தால் தனிநபர் எவரொருவரின் சரணாகதியையும் ஏற்றுக்கொள்ளாமல் கொல்லப்பட வேண்டும் என்றும் தன் படையினருக்கு உத்தரவிட்டிருந்தான் ஹிட்லர். எனவே சிறைபிடிக்கப்பட்ட 1981000 ரஷ்யர்களின் பேரின் கதி என்னவாகியிருக்கும் என்பதில் மர்மத்துக்கு இடமில்லை. இரவும் மூடுபனியும் என்ற சங்கேதப் பெயரால் அழைக்கப்பட்டகாணாமல் போக்கடித்தல் என்ற கொடூர தண்டனையை நிறைவேற்ற தன் தனிப்படையை ஏவிவிட்டிருந்தான் ஹிட்லர். லெனின், ஸ்டாலின் என்ற பெயர்கள்மீது அவனுக்கிருந்த ஆத்திரத்தால் லெனின் கிராட் மற்றும் ஸ்டாலின் கிராட் நகரங்களையே குண்டுமாரிப் பொழிந்து நிர்மூல மாக்கிவிட வேண்டு மென்று வெறி கொண்டிருந்தான்.

ஆனால் நிலைமை அப்படியே ஏறுமுகமாய் நீடித்துவிட வில்லை ஹிட்லருக்கு. 164 டிவிஷன்களைக் கொண்டிருந்த ரஷ்யப்படைகள் சரிபாதியாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், சாவதற்கு முன் பற்களைக் கொண்டாவது ஒரு ஜெர்மா னிய ராணுவத்தானின் குரல்வளையைக் கடித்துத் துப்புமளவுக்கு ரஷ்யர்களின் பதிலடி உக்கிரமாகவே இருந்தது. கடும் பனிப்பொழிவு வேறு. -28டிகிரி பாரன்ஹீட் அளவுக்கான குளிர். ஈடுகொடுக்க முடியாத ஹிட்லரின் ராணுவத்தினர் ஒவ்வொரு 7 விநாடிக்கும் சராசரியாக ஒருவர் வீதம் செத்தொழிந்ததாக ஒரு கணக்கிருக்கிறது. உலகையே தன் காலுக்கு கீழிருக்கும் ஒரு பந்தென எண்ணி உதைத்தாடிக் கொண்டிருந்த ஹிட்லரின் தோல்வி அப்போதே தீர்மானமாகிவிட்டது.

உலகம் அதுவரை கண்டறியாத வகையில் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியை நடத்தி மார்க்சிய லெனினிய அடிப்படையில் சோசலிச நிர்மாணத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் படையெடுப்பு உலக முதலாளித்துவவாதிகளுக்கு உள்ளூர மகிழ்ச்சியையே தந்தது. சோசலிசக் கட்டுமானத்தில் குவிந்திருந்த கவனத்தை வழி மாற்றித் திருப்பிவிட முடிந்ததற்காக அவர்கள் மானசீகமாய் ஹிட்லரைப் பாராட்டினர். ஆனால் சோவியத்தின் இறுதி அத்தியாயம் ஹிட்லரால் எழுதப்படவிருக்கிறது என்ற அவர்களின் கணிப்பும் விருப்பும் பொய்த்துப்போயின. சோவியத் படைகள் தமது நாட்டை மட்டுமல்லாது ஹிட்லரிடமிருந்து உலகத்தையும் காப்பாற்றியது. ஹிட்லரின் படைகளை அவை புறப்பட்ட இடத்திற்கே விரட்டிச் சென்ற சோவியத் படைகள், இறுதியாக ஜெர்மனியையும், ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் விடுவித்தன.

இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட சோவியத் மக்கள் மற்றும் படையினர் ஒவ்வொருவருக்கும் ஒருநிமிடம் அஞ்சலி செலுத்த விரும்புகிற ஒருவருக்கு தொடர்ந்து 38 ஆண்டுகள் தேவைப்படுமாம். போரின் மொத்த உயிரிழப்பு சுமார் ஐந்து கோடிப்பேர். அவர்களில் 3 கோடிப்பேர் சோவியத் யூனியனைச் சேர்ந்தவர்கள். இது வெறும் உயிரிழப்பு பற்றிய தோராயமான கணக்குதான். பொருளிழப்பு, உளவியல் பாதிப்பு, அங்கவீனம் குறித்து யாதொரு கணக்கீடும் இதுகாறும் இறுதிப்படுத்தப்படவில்லை.

3.

அனோனிமா இந்த போர்ச்சூழலுக்கிடையே வாழ்ந்த ஒரு ஜெர்மானியள். 12 ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்திருந்தாலும் பெர்லின் நகரத்தில் வாழ்வதே அவளுக்கு உவப்பானதாய் இருக்கிறது. அனாதைச்சிறுமி தெருவிலே அலைவதுதான் நியதி என்பதை தன்னளவில் மறுத்து சுயமரியாதையோடு வாழ்ந்து கொண்டிருந்தவள். ஹிட்லரின் படைகளை விரட்டி வந்த ரஷ்யப் படைகள் ஜெர்மனிக்குள்ளேயே நுழைந்துவிட்ட தையடுத்து நடந்த குண்டு வெடிப்பில் அவளது மூச்சுக்காற்றாலும் புத்தகங்கள் ஓவியங்களாலும் நிரம்பியிருந்த அவளது வீடு சிதறிப்போனது. அவளுக்கு சொந்தமென்று இருந்த எல்லா வற்றையுமே இழந்துவிட்டதால் கண்ணுக்குத் தெரிந்த எல்லா வற்றையுமே தனக்கு சொந்தமானவையென்று வரித்துக்கொண்டு ஒரு அன்னிய வீட்டின் நிலவறையில் பதுங்கி வாழும் சாமானியர்களில் ஒருத்தியாக அனோனிமா அறிமுகமாகிறாள் நமக்கு. இடையறாத குண்டுமழைக்கூடாக போர்ச்சூழலின் பதற்றங்களை, கவலைப்படுவதால் ஆகக்கூடியது எதுவுமில்லை என்பதால் ஒரு வேடிக்கை மனோபாவத்துடன் குறிப்பெழுதத் தொடங்குகிறாள். அவளது குறிப்புகள் யார் மீதுமான புகார்ப் பட்டியலாகவுமின்றி அன்றையச் சூழலை அதன் முழுப் பரிமாணத்தோடு ஒவ்வொரு தனிமனிதரும் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதன் மனவோட்டமாக உருப்பெற்றுள்ளன.

யாருடைய அனுதாபத்தையும் கோரி நிற்காமல் மனதிற்குப்பட்டதை எழுதிச் செல்கிறாள். பின்னாளில் இக்குறிப்புகள் புத்தகமாக வெளியானபோது அது அவளது வாழ்க்கை மட்டுமல்ல, போர்ச்சூழலுக்குள் வாழநேரும் எவரொருவருக்குமானதுதான் என்கிற எளிய உண்மை அதில் பொதிந்திருப்பதைக் கண்டது உலகம். எனவே அவள் தனது தனித்தப் பெயரையும் அடையாளத்தையும் துறந்து அனோனிமா ( முகம் மறைத்தவள்) என்று புத்தகத்துக்குத் தலைப்பிட்டது கவித்துவ உணர்விலல்ல.

சகமனிதர் மீதான வெறுப்பும் ஆயுதங்களையும் போரையும் கொண்டாடும் முனைப்பும் கொண்ட ஒரு ஆட்சியாளனின் கீழ் வாழ நேர்ந்த குடிமக்கள், அந்த ஒரு காரணத்திற்காகவே அனுபவிக்க நேரும் துயரங்களின் தொகுப்பான இந்நூல் இன்றைய காலத்திற்கான கேள்விகள் பலவற்றை தன்போக்கில் எழுப்பிச் செல்கிறது. தனது தனித்த அனுபவங்களைச் சொல்லிச் செல்லும் போக்கில் தன்னொத்தப் பெண்களுக்கு நேந்ந்த அவலங்களையும் விவரித்துப் போகிறாள்.பெண் என்றான பிறகு அவள் எந்த நாட்டிலிருந்தாலும் அவளது அனுபவங்கள் ஒன்றெனவே இருப்பதை தன்னியல்பில் அம்பலப்படுத்துகிறாள். இதன்பொருட்டு அவள் தன்னை ஜெர்மானியள் என்று பெருமிதம் கொள்வதிலிருந்தும் ரஷ்யர்களையோ மற்றவர்க ளையோ வெறுத்தொதுக்குவதிலிருந்தும் வெகு இயல்பாகவே விலகி நின்றுவிடுகிறாள்.
இரண்டு ராணுவங்கள் தமக்கிடையே போரிட்டுக் கொள்ளும் போது அது வெறுமனே குறிப்பிட்ட யுத்தக்களங்களில் நடந்து முடிந்துவிடுவதில்லை. தவிர்க்கவியலாத வகையில் எந்தவொரு போரும் குடிமக்களையே தாக்கெல்லையாக மையப்படுத்துகிறது. ராணுவங்கள் குடிமக்களின் வாழ்வுரிமைகளை எந்தளவிற்கு பொருட்படுத்துகின்றன/ உதாசீனப் படுத்துகின்றன என்பதும், ராணுவத்தின் பார்வையில் ஒரு பெண்ணின் பெறுமதி என்னவென்பதுவுமே அனோனிமாவின் பேசுபுள்ளிகளாக மேலெழுகின்றன. எனவே அவள் ஜெர்மன் ராணுவம் சோவியத்யூனியனில் நிகழ்த்திய அத்துமீறல்களையும் அவற்றுக்கு எதிர்வினையாக ரஷ்யராணுவம் ஜெர்மனியில் நிகழ்த்திய அத்துமீறல்களையும் அருகருகாக வைத்துப் பார்க்கிறாள். சோவியத்தின் குழந்தைகளை சுட்டுக்கொன்றதும், குழந்தைகளின் கால்களை கயிற்றால் கட்டி குழந்தைகள் மண்டையை சுவரில் மோதி சிதறடித்ததுமான ஜெர்மானியப் படையினரின் அட்டூழியங்களுக்கான விலையை யாராவதொருவர் கொடுத்துத்தானேயாக வேண்டும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்கிறாள்.

தேசியவாதம்/ இனப்பெருமிதத்தின் பெயரால் தன் தரப்பை விமர்சனமின்றி மொன்னையாக ஆதரிக்கும் நிலையை ஒருபோதும் அவளால் எடுக்கவே முடியவில்லை. ஆடுகளத்தின் மையத்தில் நின்றாட வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்த போதிலும் அவள் ஆட்டத்துக்கு வெளியே நின்று எல்லா நிகழ்வுகளையும் ஒரு மூன்றாவது கண்ணைப்போல பார்த்து பதிவு செய்திருக்கிறாள். இதன் வழியே வெளிப்படும் கசப்பான உண்மைகள் ஈராக்கில், ஆப்கனில், காஷ்மீரில், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், இலங்கையில் அந்த மக்களின் வெகு அடிப்படையான உயிர் வாழும் உரிமைக்கும் சுயமரியாதைக்கும் எதிராக ராணுவங்கள் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை சுளீ ரென சொடுக்கி நினைவூட்டி அலைக்கழிக்கின்றன. ராணுவம்/ ஆயுதங்களின் கண்காணிப்புக்குக் கீழே வாழநேர்வதன் கொடுமைகளை வரலாற்றிலிருந்து கற்றறிவதற்கு இன்றைய உலகம் இனியும் தயங்கக்கூடாது என்ற பதற்றத்திலிருந்தே, குழந்தைப் போராளியை மொழிபெயர்த்த தேவா, இந்த அனோனிமாவையும் மொழி பெயர்க்கத் தெரிவு செய்திருக்கக்கூடும்.

கொடுங்கோலாட்சியாளர்களிடமிருந்து மக்களைக் காக்கவென ஆரம்பிக்கப்பட்ட ஒரு விடுதலை இயக்கம், தன் கையிலிருக்கும் ஆயுதங்களையும் அவ்வாயுதங்களின் வழியே உருவாகும் அதிகாரங்களையும் எப்படி தன் சகபோராளிகளுக்கும் சொந்த மக்களுக்கும் எதிராகவே பயன்படுத்தியது என்பது குழந்தைப் போராளியின் மையம். ஒரு நாட்டை ஆளும் கட்சி/ தத்துவம் எதுவாக இருப்பினும் அதன் ராணுவம் எப்போதும் ஒரு மரபான ராணுவத்திற்கேயுரிய குணநலன்கள்/குணக்கேடுகளுடன் தான் மக்களை அணுகும் என்பது அனோனிமாவின் மையம். இவ்விரண்டு எதிரெதிர் துருவ அமைப்புகளிடமுள்ள ஆயுதங் களும் அதிகாரமும் சாமானிய மக்களை என்ன பாடுபடுத்தும் என்கிற கொடிய அனுபவங்களைப் பெற்றிருக்கும் இலங்கைத் தமிழர்களிலிருந்து ஒருவர் இந்த இரண்டு நூல்களையும் மொழி பெயர்த்திருப்பது இலக்கிய ஆர்வத்திலிருந்து அல்ல என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

குழந்தைப்போராளி சைனா கெய்ட்ரஸியும் அனோனிமாவும் இருவேறு பெண்களல்ல. ஒரேவகையான கொடுமைகளை வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு முகாம்களிலிருந்து பெற்றுக்கொள்ள நேரிட்டப் பெண்களின் மாதிரிப் படிமங்கள்.

4.

ஸீக்ரிப்ட் லென்ஸ் எழுதிய நிரபராதிகளின் காலம் நாடகத்தின் கதாபாத்திரங்கள், ஒரு குற்றம் நிகழ்கிறபோது அதில் தனக்கு உடன்பாடில்லை என்று மறுப்புரைக்கவோ எதிர்க்கவோ முன் வராதவர்கள் அந்தக குற்றத்தின் இயல்பான பங்குதாரிகளா இல்லையா என்று ஓயாது வாதிட்டுக்கொள்வதைப் போலத்தான் அனோனிமாவும் அவளுடன் தங்கியிருப்பவர்களும் தர்க் கித்துக் கிடக்கிறார்கள். ஹிட்லர் என்ற போர்வெறியன் கையில் அதிகாரத்தைக் கொண்டு சேர்த்ததன் மூலம் அவனது எல்லா பழிபாவங்களிலும் தமக்கும் பங்கிருக்கிறது என்று உறுத்துகிற குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபடும் முயற்சியாகத்தான் ஹிட்லரின் சுயசரிதையான எனது போராட்டம் நூலை எரித்து வென்னீர் காய்ச்சுவதையும், ஹிட்லர் மீது நன்மதிப்பு கொண்டிருக்கிற சீகிஸ்முண்ட் என்பவரை பைத்தியக்காரன் என விளிப்பதையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஹிட்லரும் கோயபல்சும் வெற்றி அல்லது வீரமரணம் என்று ராணுவத்தை உசுப்பேற்றிக்கொண்டிருக்கும்போது எங்களுக்கு இறந்த வீரர்கள் தேவையில்லை உயிரோடிருக்கும்   ஆண்களைத்தான் தேடுகி றோம்... என்று அனோனிமா எதிர்நிலை எடுப்பதற்கும் இந்த மனநிலையே காரணமாய் இருக்கும். வீரம்,  தியாகம் என்று தூண்டிவிடப்படும் உணர்ச்சிகளுக்கு பொருளேதுமிருக்கிறதா? எல்லோரையும் சாகக்கொடுத்து தியாகிகளாக்கி விட்டு யாருக்கு எதை பெற்றுத்தரப் போகிறாய் என்று அவள் உள்ளுறையாய் வைக்கும் கேள்வி எல்லை கடந்து எங்கெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டியதாயிருக்கிறது. போர்முனைகளில் பின்வாங்கி தளர்நடையில் முகாம் திரும்புகிற ஜவான்கள் மீது அவளுக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. யாரோ ஒருவனது விருப்பம்/ கனவுக்காக போரிட்டு மாள்வதற்கென்று தயாரிக்கப்பட்ட பொம்மைகள்/ இயந்திரங்கள் என்று தம்மையுணராத ஜெர்மனி ராணுவத்தினரைப் பார்த்து ஆட்டம் முடிந்து விட்டது, இப்போது நீங்களும் தெருநாய்கள்தான் என்று  பரிகசித்து ஒரு பெண் கூச்சலிடுவதை அனோனிமா தன் குறிப்பில் இடம்பெறச் செய்திருக்கிறாள்.

இந்தப் போரின் முடிவில் பல தோல்விகளோடு ஆண் என்ற பாலினத்தின் தோல்வியும் சேர்ந்தே இருக்கும் என்ற அனோனிமாவின் தீர்க்கவசனம் காலத்தை மீறி இன்றும் நிற்கிறது மடங்காமல். மற்றவர்களுக்காவது தமது பாரத்தை இறக்கிவைக்க கடவுள் என்ற கற்பிதம் இருந்தது. அதுவுற்றவள் அனோனிமா. அவள் ஒருபோதும் ஜெபித்தவள் இல்லை. மகிழ்ச்சியான தருணங்களில் ஜெபிக்காமல் இருந்துவிட்டு துன்பவேளையில் ஜெபிப்பது பிச்சைக் கேட்பது போலாகும் என்ற சுயமரியாதையின் உந்துத லில் அவள் இனியும்கூட கடவுளிடம் மன்றாடுவதில்லை என்ற தெளிவுடன் இருந்தாள். அன்னிய ராணுவத்திடம் அகப்பட்டுக் கொண்டோமே என்று அழுதுபுரண்டு ஆகப்போவது எதுவு மில்லை என்பதையும் அவளுக்கு சூழல் விளக்கி விட்டிருந்தது. இடையறாத குண்டுமழைக்கிடையில் வாழும் ஒவ்வொரு நாளும் மரணத்தை வெற்றி கொண்ட நாள் என்றே கருதுகிறாள். அடுத்தநாள் என்பது நிச்சயமற்றிருந்த நிலையில் நாளை நடக்கப்போவது பற்றி கவலைப்படுவதைவிட இன்று முடிந்தமட்டிலும் வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவிட்டிருந்ததால், வருவது எதுவோ அதற்கு காத்திருப்பதே உசிதம் என்ற எளிய எல்லையை தனக்கானதாய் வரித்துக் கொண்டிருந்தாள். அதற்காக அவள் தன் முன்னே நிகழ்ந்தவற்றை எல்லாம் உணர்வுத் துடிப்பற்ற கண்ணாடி போல் பளபளக்கும் கண்களால் வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்தாள் என்று குறுக்கிப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை.

எதுவும் செய்யவியலாத கையறு நிலையிலுள்ள மக்கள் சூழலையும் அதற்கு காரணமானவர்களையும் பகடி செய்து கடக்க முயற்சிப்பது உலகளாவிய நியதிபோலும். அனோனிமா அதைத்தான் செய்கிறாள். தங்களில் இன்னும் (ரஷ்ய ராணுவத்தினரால்) கன்னி கழிக்கப்படாதவளாய் இருப்பது யார் என்று பெண்களுக்குள் நடக்கும் விவாதங்கள் அவளுக்கு சிரிப்பையே வரவழைக்கிறது. கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருத்தி 24முறை வல்லுறவுக்காளானாள் என்ற பத்திரிகைச் செய்தியைக் கேள்விப்பட்டதும், இதையெல்லாம் அருகிலிருந்து யார்தான் கிரமமாக எண்ணுகின்றார்களோ என்று கேலி செய்கிறாள்.

பேரக்குழந்தைகளைக் கொண்ட மூதாட்டியைக்கூட வேட்டை யாடும் வக்கிரம் தலைவிரித்தாடிய நிலையில் மாதவிலக்கடைந்தவள் போல பஞ்சுத் தக்கையை எப்போதும் பிறப்புறுப்பில் அடைத்துக்கொண்டு திரிவது, சமையலறையின் மேற்கூரைக்கும் சீலிங்குக்கும் இடைப்பட்ட பொந்தில் இரவும் பகலும் ஒளிந்து கிடந்து கன்னியாகவே நீடிக்க முயற்சிப்பது போன்ற தற்காப்பு முயற்சிகளால் பயனேதும் கிட்டப்போவதில்லை என்பதே அனோனிமாவின் கணிப்பு. உண்மையும்கூட அது தான். இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால் நீ எத்தனை முறை (வல்லுறவுக்காளானாய்)... என்று பரஸ்பரம் விசாரித்து ஆறுதல்படுத்திக் கொள்ளுமளவுக்கு நிலை மட்டுமீறி போய்க் கொண்டிருந்தது. அனோனிமாவும் தப்பவில்லை.

பெர்லினுக்குள் நிலைகொள்ளும் ரஷ்யப்படைகள் மக்களின் வீடுகளை ராணுவக்குடியிருப்புகளாக ஆக்கிரமித்ததிலிருந்தே எல்லாப் பிரச்னைகளும் தொடங்கியதாக அனோனிமா பழிபோட வரவில்லை. அல்லது, பாசிசத்தை வீழ்த்தி மனித குலத்தை காப்பாற்றிய செஞ்சேனையின் வரலாற்றுப் பாத்திரத்தை அவதூறுகளால் நிரப்பி சிறுமைப்படுத்தவும் அவள் முயற்சிக்கவில்லை. தொடக்கத்தில் கேள்விப்பட்டிருந்ததைவிடவும் நற்தன்மை கொண்டவர்களாக, சினேகப்பூர்வமாக உரையாடக் கூடியவர்களாகவே ரஷ்யப்படையினரைக் காண்கிறாள். அத்துமீறி நடக்கத் துணிகிறவர்களை எச்சரித்தும் மிரட்டியும் பெர்லின் பெண்களைப் பாதுகாத்து அனுப்பியவர்களும் ரஷ்ய ராணுவத்தில் இருப்பதை அவள் கவனமாக பதிவு செய்திருக்கிறாள். பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது என்பதற் காக ஸ்டாலின் விதித்திருந்த ஆணை திரும்பத்திரும்ப நினைவூட்டப்படுகிறது. ஆனால் தம் வீட்டுப்பெண்களுக்கு ஜெர்மனி ராணுவம் இழைத்தக் கொடுமைகளுக்கு பழிதீர்த்தேயாக வேண்டும் என்ற வன்மத்தில் அந்த ஆணை தொடர்ந்து மீறப்பட்டுக் கொண்டேயிருந்தது. அனோனிமாவை மூவர் சூறையாடிக் கொண்டிருக்கும்போது அங்குவந்த ரஷ்ய ராணுவப் பெண்ணொருத்தி ஒரு கேளிக்கையை கண்டுகளிப்பதுபோல் ரசித்துப் போகுமளவுக்கு பழியுணர்ச்சி தளும்பிக் கொண்டிருந்தது அவர்களிடம்.

ஒவ்வொரு வீட்டின் பின்புறக்கதவையும் இரவுபகல் பாராமல் இடித்துத் திறந்து உள்ளே நுழையும் முயற்சிகள் தொடர்கதையாகிப் போனது. அவமானம், வெட்கம், பாலியல் பலாத்காரம், அருவருப்பு என்பவையெல்லாம் பொருளற்ற வெறுஞ்சொற்களாக இழிந்துகிடந்தன. அவள் விரைத்துக் கிடந்தாள். மனரீதியான இறுக்கம் உடல் இறுக்கத்தையும் கொண்டு வந்து சேர்த்ததாக ஓரிடத்தில் குமுறுகிறாள்.

திரும்பத்திரும்ப தன்மீது கூட்டங்கூட்டமாக வந்து மொய்க்கிறவர்களைப் பார்த்து பதறிப்போன அனோனிமா எல்லோரும் வேண்டாம், ஒரு ஆள் - நீ மட்டும் என்று இரந்து நிற்கும் நிலைக்குத் தாழ வேண்டியிருக்கிறது. அவளது வேண்டுதலுக்கு இரங்குவார் யாருமில்லை அங்கு. அடுத்தடுத்த நாட்களும் இதேநிலைதான். ராணுவ பூட்சின் அடியில் ஒட்டியிருக்கும் அழுக்கு போலாகிவிட்ட அவளிடம் கர்ப்பந்தரித்து விடுவாயோ என்று ஒருத்தி கேட்ட போது பலர் நடமாடும் பாதையில் புல் முளைக்காது...  என்று பதிலிறுத்து தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறாள். ஆனாலும் ராணுவத்தினரின் வல்லுறவால் தங்கிய கர்ப்பத்தை கலைப்பதற்கும் பால்வினை நோய் களுக்கு சிகிச்சையளிக்கும் தனியாக வைத்தியசாலைகளை நிறுவத்தான் வேண்டியிருந்தது அங்கு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வன்புணர்வுக்கு ஆளாகி கர்ப்பந்தரித்தவர்கள் எல்லைப்புறங்களிலும் இருநாட்டின் தலைநகரங்களிலும் மனநிலை சிதைந்து அனாதைகளாக உழன்று திரிந்ததை நினைவூட்டும் கொடூரங்கள் அனோனிமாவிலும் துருத்திக் கொண்டு பதற்றமடையவைக்கின்றன.

பாதுகாப்பற்ற இரையாக இனி நீடிக்கமுடியாது எனப் புரிந்துகொண்ட அனோனிமா பலம் பொருந்திய ஓநாயை அடக்கிப் பழக்கப்படுத்தி மற்றைய ஓநாய்களை விரட்டியடிக்கும் தற் காப்பு உத்தியைக் கையாள்கிறாள். இதற்காக தன்னிடம் வரும் ரஷ்ய ராணுவத்தினரில் உயர் அதிகாரத்தில் இருக்கும் லெப்டினன்ட், மேஜர் போன்றவர்களுக்கு மட்டுமே உரிமையுள்ளவளாக அவள் தன்னை மாற்றிக் கொள்கிறாள். அதிகாரமிக்கவர்களுக்கு அணுக்கமானவள் என்பதால் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து அவளால் தப்பித்துக் கொள்ள முடிகிறது. ஒரு அதிகாரி வேறிடத்திற்கு பெயர்ந்து சென்று விடுகிறபோது வேறொரு புதிய மேஜரை தன்  பாதுகாப்புக்காகவும் உணவுத் தேவைக்காகவும் எதிர்பார்க்க வேண்டியவளாகிறாள்.

அனோனிமாவைப்போலவே ஒவ்வொரு பெண்ணும் சூழலுக்குப் பணிந்து பிழைத்திருக்க விதிக்கப்பட்டவர்களாயிருந்தனர். அமைதிக்காலத்தில் யாரோ ஒரு பொறுக்கி ஒரு பெண்ணை வன்புணர்வு செய்திருந்தால் ஆர்ப்பாட்டம்- காவல் நிலையத்தில் புகார்- கைது- விசாரணை- தண்டனை என்று என்னென்னவோ நடந்திருக்கும். ஆனால் போர்க்காலம் என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு.... ம்... எல்லா அத்துமீறல்களும் அட்டூழியங்களும் போரின் ஒருபகுதியென கணக்குத் தீர்ப்பதைத்தான் உலகம் கண்டது. சண்டைக்கு சிங்காரமில்லை என்று நம்மூரில் சொல்வதைப்போல எல்லா கொலைகளும் வன்புணர்வுகளும் கருச்சிதைப்புகளும் பாலியல் வக்கிரங்களும் கொள்ளையடிப்புகளும் யுத்தமென்றால் இதெல்லாம் நடக்கும் தானே என்று உதட்டைப் பிதுக்கி கடந்துபோக உலகம் பழக்கியிருக்கிறது. ஆனால் அனோனிமா இந்த பொதுப்புத்திக்கு எதிர்த்திசையில் மறித்து நிற்கிறாள். ஏனெனில் அவள் யுத்தத்தின் பார்வையாளராகவோ பங்கெடுப்பாளராகவோ இருந்திருக்கவில்லை. யுத்தம் அவள்மீதேதான் நடந்து முடிந்திருக்கிறது. கைப்பற்றப்படும் நாடுகளின் பெண்களது யோனிக்குள்  நுழைந்த வெளியேறும் ஆணுறுப்புகளின் எண்ணிக்கையினால் அளவிடப்படுகிற யுத்தங்களின் வெற்றியை பரிகாசம் செய்தபடி மருகிக்கிடக்கும் கோடானகோடி பெண்களின் ஒற்றைப் படிமமாக அவள் வரலாற்றின் நெடுகிலும் காட்சியளிக்கிறாள்.

தூயஇனம், கலப்பில்லாத ரத்தம், இனமானம், ஆளப்பிறந்தவர் கள் என்று முன்பு அலட்டிக் கொண்டிருந்த ஜெர்மானிய ஆண் களுக்கு தம்வீட்டுப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை யாருக்கோ நடப்பதுபோல அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பதன்றி வேறொரு வாய்ப்பும் அங்கு இருந்திருக்கவில்லை. பெண்கள் குழந்தை பெற்றுத்தள்ளும் வேலையை மட்டுமே செய்துகொண்டிருந்தால் போதும், தேவைப்பட்டால் அதற்காக தமது படையினரில் வலுவாக உள்ளவர்களை பொலிகாளையாக அனுப்பிவைக்கத் தயார் என்ற ஹிட்லரின் தளபதிகளது ஆணவத்தை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாதிருந்த அவர் கள் அப்போதே தம்வீட்டுப் பெண்களை ஏறிட்டுப் பார்ப்பதற் கான யோக்யதாம்சத்தை இழந்துவிட்டிருந்தார்கள்.

ஆனாலும் இவ்வளவுக்குப் பிறகும் தம்வீட்டுப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளானதை, தற்காத்துக் கொள்ளத் தெரியாததால் பெண்கள் தமக்குத்தாமே வருவித்துக்கொண்ட கேடாகத்தான் அவர்களால் பார்க்க முடிந்ததேயன்றி யுத்தத்தின் தண்டனையாக பார்க்க முடியவில்லை. அந்த தண்ட னையை வலிந்து ரஷ்யாவுக்குப் போய் இழுத்துவந்த ஹிட்லரின் குற்றமாகப் பார்க்க முடியாதளவுக்கு ஜெர்மானிய ஆண்கள் அவரவர் பங்கிற்கு கொஞ்சங்கொஞ்சம் ஹிட்லராக இருந்தனர். அனோனிமாவின் காதலன் கெயர்ட்டும் இதற்கு விதிவிலக்கானவனல்ல. எப்பேர்ப்பட்ட நிலையிலும் தற்காத்து - புனிதம்(?) கெடாமல் தனக்காக காத்திருக்க வேண்டிய அனோனிமா இப்படி ரஷ்ய ராணுவத்தினரிடம் சிக்கி சீரழிந்திருப்பதை அறிந்து அவளை விட்டு வெளியேறிப் போகிறான் அந்த மூடன். மானஸ்தி என்று அவன் வைத்திருக்கும் எல்லா மதிப்பீடுகளையும் புறந்தள்ளி அடுத்த நொடியின் வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறாள் அனோனிமா.

அனோனிமா இப்படி தன்பாடுகளை மட்டுமே புலம்பியவிக்கி றவளாக இல்லை என்பதுதான் அவளை ஒரு முன்மாதிரிப் பெண்ணாக நம்மை உணரவைக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் எதுவும் பொதுவிலில்லை என்பதே அவள் பார்வையாய் இருக்கிறது. எதிரிப்படையினர் வந்தால் குடித்து மயங்கி பல வீனமாகிச் சாகட்டும் என்பதற்காக மதுவடிச்சாலைகளை அழிக்காமல் விட்டுச் செல்கிறது ஜெர்மனி ராணுவம். இது ஆண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை என்கிறாள் அனோ னிமா.உண்மையில் அவ்வாறு விட்டுச் செல்லப்படும் மதுவைக் குடித்து மூர்க்கமேறி வன்முறை இயந்திரமாக பெண்களின் மீது பாய்வதற்கே வழிவகுக்கிறது என்பது இந்த ஆண்களுக்குப் புரிவதேயில்லை என்று குற்றம்சாட்டுகிறாள். பிரிதொரு இடத்தில் உணவுத் தட்டுப்பாடு பற்றி பேசுகிறாள். கணவன் சாப்பிட்ட பிறகு எஞ்சியதை சாப்பிடுகிற நம்மூர் பதிவிரதாத்தனம் அங்கும் வேறு வடிவிலிருக்கிறதோ என்னவோ அனோனிமா எரிச்சலடைந்து இப்படிச் சொல்கிறாள்- கர்ப்பத்திலிருக்கும் குழந்தை தமக்கான போஷாக்கை தாயிடமிருந்தே பெறுகிறது... தந்தையைப் பற்றி அது அறிந்திருப்பதில்லை. ஆனாலும் பாருங்கள் அந்த நாடு தந்தையர் நாடு என்றே ஆரவாரத்தோடு சொல்லப்பட்டு வந்தது.

எஸ்டேட் தொழிலாளர்களை இழிவாக விளித்து கட்டளை பிறப்பிக்கவும்,  அவர்கள் எதைக் கேட்டாலும் முரட்டடியாக மறுப்பதற்கும் தேவையான சொற்களைக் கொண்ட கூலித்தமிழ் கையேடு ஒன்றை வெள்ளைக்கார துரைமார்களுக்கு  புலவர் பெருமக்கள் தொகுத்தளித்தனர். தோற்கடிக்கப்பட்ட வர்களை கட்டளைகள் வழியாகவே கையாளும் இந்த மனப்பாங்கு நுட்பமானது. ரஷ்ய ராணுவத்தினருக்கும் வழங்கப்படும் டொச்மொழிக் கையேட்டில் உள்ள பதங்கள் அவ்வளவும் மக்களை நோக்கி பிறப்பிப்பதற்குரிய ராணுவக்கட்டளைகள். மக்களின் இரைஞ்சுதல்களையும் தேவைகளையும் விளங்க வைப்பதற்கான ஒரு சொல்லும் அதிலில்லை. ஆயுதத்தின் ஒருபகுதியாக அங்கு மொழியும் செயல்படுவதை மிகுந்த எள்ளலுடன் அம்பலப்படுத்துகிறாள் அனோனிமா.

இப்படியாக அனோனிமாவின் குறிப்புகள் பாவனையான நமது நிம்மதியைச் சிதறடிக்கிறது. முகம் காட்ட விரும்பாத அவளது முகத்தைத் தேடி கண்டடையும்போது அது நம்வீட்டுப் பெண்ணொருத்தியின் முகமாகவும் இருப்பதற்கான சாத்தியங்களை உணரச் செய்கிறது. கற்பு, ஒழுக்கம், புனிதம் பற்றிய கவரிமான் கப்ஸாவில் திளைத்திருக்கும் நம் வீட்டிலும் மனதிலும் அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படவுள்ள இடம் எது என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆண்மை, வீரம் போன்ற கற்பிதங்ககளின் உள்ளீ டற்ற பொக்கைத்தனங்களை இரக்கமற்ற மொழியில் குத்திக் காட்டுகிறது. கண்ணுக்குள் பெண்ணை வைத்து காத்து வளர்க்கத் துடிக்கும் ஆணின் கட்டுப்பெட்டித்தனம் மீது காறி உமிழ்கிறது. தன்னளவில் சுயமாய் வாழ்வதற்கான பெண்ணின் விழைவுகளை முன்மொழிகிறது.  மான அவமான மயக்கங் களில் சிக்கி வாழ்வைத் தொலைக்கிற கோழைத்தனத்திலிருந்து விடுபட்டு ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து பார்ர்ப்பதற்கான வேட்கையை மூட்டுகிறது.

5

தோசையைக்கூட துப்பாக்கியால் சுடுவதுதான் புரட்சி என்று பிதற்றுகிற இந்த காலத்தில்   போர், ஆயுதம் மற்றும் அதிகாரம் குறித்து நடைபெற வேண்டியதொரு விவாதத்திற்கான சிறு பங்களிப்பாக அனோனிமாவின்  தன்வரலாறு தமிழில் வெளி வரவுள்ளது. வெற்று பரபரப்புக்காகவோ வேறு இழிவான அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்ல என்பதை அனோனிமாவை முழுமையாக வாசிக்கிற ஒருவர் உணரமுடியும்.  மானுட விடுதலை, சுதந்திரம், முழுவளர்ச்சி, முழு வாழ்க்கை ஆகியவற்றிற்கு தடையாக வரும் எல்லாவற்றையும் கேள்வி கேட்க ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும்.. என்பார் மனித உரிமைப்போராளி டாக்டர்.கே.பாலகோபால். மிக அடிப்படை யான இந்த ஜனநாயக மதிப்பீட்டை உயர்த்திப் பிடிப்பதற்கான வழிகளைத் திறந்து வைப்பதாக இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காகவே அனோனிமாவை உடனடியாய் வெளிக்கொண்டு வருவது அவசியமென நம்புகிறேன்.

-   தேவா மொழிபெயர்ப்பில்,  பூபாளம் புத்தகப்பண்ணை வெளியீடாக வந்துள்ள  "அனொனிமா" நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை. -

நன்றி: 'தந்துகி'
.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்