கனடா அரசியலில் தமிழர்களின் பங்களிப்பு! - குரு அரவிந்தன் -
1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து, இலங்கைத் தமிழர்கள் பலர் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தபோது, அதிகமானவர்கள் கனடா நாட்டுக்குப் புலம் பெயர்ந்தார்கள். ஒன்ராறியோ மாகாணத்தில்தான் அதிக தமிழர்கள் வாழ்வதால், இவர்கள் முதலில் தங்கள் இருப்பை உறுதி செய்தபின், பல்வேறு சமூகச் செயற்பாடுகளிலும் தங்களை உட்படுத்திக் கொண்டனர். எந்த நாடாக இருந்தாலும், இறுதி முடிவு எடுக்கும் நிலை அந்த நாட்டு அரசைச் சார்ந்திருப்பதால், அரசியலில் ஈடுபாடு கொண்ட சிலர் தேர்தல் மூலம் பதவிகளுக்காகப் போட்டி போட முன்வந்தனர். பிறர் நலன் கருதிப் போட்டி போடுவதாகப் பிரச்சாரம் செய்தால்தான் ஜனநாயக நாட்டில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புண்டு. பதவிக்கு வந்தபின் அரசியல் வாதிகள் எப்படி மாறுவார்கள் என்பது சந்தர்ப்ப, சூழ்நிலையைப் பொறுத்தது. கனடாவில் கோவிட் பேரிடர் காரணமாக முக்கிய பிரச்சனைகளாக சுகாதாரவசதி, வாழ்க்கைச் செலவு, வருமானவரி, பொருளாதாரம், வீட்டுவசதி, முதியோர் பிரச்சனை, குடியேற்றம், கல்வி, வேலைவாய்ப்பின்மை, மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பொதுவான பிரச்சனைகளை மக்கள் இப்போது எதிர் கொள்கின்றார்கள்.
அரசியல்சட்ட முடியாட்சி முறையை அடிப்படையாக கொண்ட கனடா நாட்டின் தலைவராக 1952ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார். கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு நாடாகும். கனடா மூன்று நிலை அரசுகளைக் கொண்டது. அவையாவன முதலாவது நடுவண் அரசு, இரண்டாவது மாகாண, ஆட்சிப் நிலப்பரப்பு அரசுகள், முன்றாவது நகராட்சி, ஊர் அரசுகள் ஆகும். இதைவிட கல்வி பற்றி முடிவெடுக்கும் கல்விச் சபைகளும் இருக்கின்றன. அதன் அங்கத்தவர்கள் தெரிவுக்கும் அவ்வப்பகுதிகளில் தேர்தல் உண்டு. அடிப்படைக் கல்வியும் உயர்கல்வியும் அரச, தனியார் துறைகளால் வழங்கப்படுகின்றன. மேல்நிலைப் பல்கலைக்கழக படிப்புக்களை அரசே செயல்படுத்துகின்றது. கல்விச்சபைகள் தமிழ் மொழியை ஒரு பாடமாக அங்கீகரித்து இருக்கின்றன. சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் தமிழ் மொழியையும் ஒரு பாடமாக விரும்பியவர்கள் எடுக்கலாம். இதைவிட பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்குத் தேவையான ‘கிறடிட்’ எடுப்பதற்கும் தமிழ் மொழியை இங்கே ஒரு பாடமாக எடுக்கமுடியும்.