டாக்டர் ஜி.ஜெயராமன் (13.05.1934 – 25-09.2012)
நிறுவனர்-தலைவர், வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND) [ஓய்வுபெற்ற பேராசிரியர், ஆங்கிலத்துறை, கிறித்துவக்கல்லூரி, தாம்பரம், சென்னை.
அதிராத குரல், நிதானம் தவறாத அணுகுமுறை, எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் பாங்கு, பார்வையற்றவர்களுடைய உரிமைகளுக்காகவும், நலவாழ்வுக்காகவும் ஓயாமல் உழைக்கும் ஆர்வம், மன உறுதி, பார்வையுள்ளவர்கள் பார்வையற்றவர்களுக்கு எதிரி என்று பாவிக்காத மனத்தெளிவும், புரிதலும் கொண்ட பண்பு, அறிவைப் பெருக்கிக்கொள்வதில் சலிக்காத தேடலும் ஆர்வமும், எல்லோரிடத்தும் அன்பு பாராட்டும் மனம் – இன்னும் எத்தனையெத்தனை மனித மாண்புகள் உண்டோ அத்தனைக்கும் சொந்தக்காரராக சொல்லத்தக்க எங்கள் அன்புக்குரிய ஜெயராமன் சார் இன்று இல்லை. வயிற்றில் சிறு கட்டி வந்திருப்பதாகத் தெரியவந்து மருத்துவமனையில் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டவர் வீடுவந்த பின் திரவ உணவையே உட்கொண்டுவந்தார். இந்த மாதம் மறுபடியும் வயிற்றில் உபாதை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வார காலம் இருந்தவர் கடந்த 25ஆம் தேதி இரவு அமரராகிவிட்டார்.