
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரின் (FeTNA) மாநாடு, ரொறன்ரோவில் நிகழ்ந்திருந்தபோது, அதில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அதற்காக மொழிபெயர்ப்பு வேலைக்கூடாக என் சினேகிதிகளில் ஒருவராக மாறியிருந்த வசந்திக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது நிகழ்ந்து, 13 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நியூஜேர்சியில் நிகழ்ந்திருந்த அவர்களின் 39வது மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. வழமைபோல இந்த மாநாடும் ஜூலை இரண்டாம், மூன்றாம், நான்காம் திகதிகளில் நிகழ்ந்திருந்தது.
மறைமலை அடிகள் அவர்களையும், இராஜராஜ சோழனையும் முதன்மைப்படுத்தியிருந்த நிகழ்ந்த இம்மாநாட்டில், ‘சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும்’ என்ற நிகழ்ச்சியுடன் என் முதல் நாள் ஆரம்பமானது. (துவக்கமா, தொடக்கமா என்ற ஆய்வுக்குள் செல்வதற்கு நான் விரும்பவில்லை.) நிகழ்ச்சியை ஆரம்பித்துப் பேசிய சுபா காரைக்குடி அவர்களினதும், தொகுத்தளித்திருந்த அருள்ஜோதி சுப்பிரமணியம் அவர்களினதும் தமிழும், சொற்கோர்வைகளும் மிகவும் அழகானவையாக இருந்தன. புதுமைப் பித்தனின் கதைகளைப் பற்றிப் பேசிய பெருந்தேவி அவர்களின் பேச்சு, அந்தக் கதைகளை மீளவும் வாசிக்கவேண்டுமென்ற தூண்டலைத் தரும் சிறப்பான பேச்சாக அமைந்திருந்தது. நகைச்சுவை பற்றிப் பேசிய சாம்ராஜ் அவர்கள் குறிப்பிட்டிருந்த உதாரணங்கள் நகைச்சுவையானவையாக எனக்கிருக்காததால், இலக்கியத் தோட்ட நிகழ்வொன்றில் அவர் பேசிய பேச்சை ரசித்ததுபோல, அதை என்னால் ரசிக்க முடியவில்லை. ஈழத்து எழுத்தாளர்கள் ஏன் போரைப்பற்றி மீளமீள எழுதுகிறார்கள் என்பது பற்றி தமிழ்நதி அவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசினார். (நான் அங்கிருந்ததாலோ அல்லது என் எழுத்துகளை வாசிக்காததாலோ அப்படி எழுதுபவர்களின் பெயர்களில் என் பெயரையும் சேர்த்துக்கொண்டார். போரின் கொடுமையை நேரில் பார்க்காதபடியாலும், வேறு சில காரணங்களாலும் நான் போரைப் பற்றி எழுதுவதில்லை என்பதையும் இதில் சொல்லவேண்டும்.) அத்துடன் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் என்ற பிரிவில், ஈழத்திலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்திருப்பவர்களின் படைப்புகளும் அடங்குவதே சரியானது என்றார். ரொறன்ரோவில் பெற்றுக்கொள்ள முடியாமலிருந்த தமிழ்நதியின் இரு நூல்களை நியூஜேர்சியில் வைத்துப் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.