தெப்பக் குளத்தின் தென்புறத்தில்,
திண்டில் அரச மரநிழலில்,
செப்பற் கடங்கா அருள்சுரக்கும்,
சிவனார் உமையாள் முதற்குமரர்,
தொப்பை வயிற்றார் : துதிக்கை யார்,
தூங்கா மல்தினம் கண்விழித்து,
குப்பைக் குணத்தார் செயல்கண்டு,
குமுறு கின்றார் குழம்புகின்றார் !
“ஆற்றங் கரையோ குளக்கரையோ,
அதிலோர் அரச மரநிழலோ,
ஏற்றம் பெறவே இனிதுநின் றால்,
என்னை ஏனதில் இருத்துகின்றார்?
வேற்று மதத்தார் கோவிலெல்லாம்,
விண்புகழ் சேர்க்கும் மேன்மைபெற,
நாற்றம் பிடித்த இடத்திலெல்லாம்,
நமையேன் வைத்து நசிக்கின்றார் ?
காலைப் பொழுதில் அபிஷேகம் : பின்,
கடமைக் கெனவொரு சிறுபூஜை !
மாலைப் பொழுதிலும் இதுதொடரும்,
மதிப்பாய் தினமும் இருவேளை !
வேலை என்று இதைத்தொடர்ந்து,
வெறுப்பை உளத்தில் ஏற்றுகின்றார் !
நாலு தலையார் நம்மாமர்,
நமக்கென ஏனிதை எழுதிவைத்தார் ?