கம்பராமாயணத்தில் ஜனகரின் மாட்சி! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
முன்னுரைகம்பர் இயற்றிய இராமாயணத்தில் கூறப்படும் கதாப்பாத்திரங்களுள் முக்கியமானவர்களுள் ஒருவர் ஜனகர். இவர் மிதிலாபுரியின் மன்னர். சீதையைக் கண்டு எடுத்து வளர்த்தவராவார். மாவீரர். குடிமக்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.பெரு வேள்விகள் செய்தவர். கம்பராமாயணத்தில் ஜனகரின் மாட்சி குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கம்பராமாயணத்தில் ஜனகர்
ஜனகர் மிதிலையின் மன்னர். சீதையைத் தன் மகளாக எடுத்து வளர்த்தவர். நாட்டு மக்களைத் தன் கண் போல் காப்பவர். இவருக்குத் துணையாக தேவர்களே தம் படைகளை அனுப்பி வைப்பர். அத்தகைய ஆற்றல் மிக்கவர். இராமன் வில்லை வளைத்ததைக் கண்ட ஜனகர் மிக்க மகிழ்ச்சி பொங்க நாட்டு மக்களுக்கு தேவையான பெருஞ்செல்வத்தை வாரிச் செல்லக் கூறினான்.மன்னன் ஜனகனின் ஆணைப்படி அவனது பெருஞ் செல்வத்தை மிதிலைவாழ் மக்கள் வாரிச்சென்றார்கள்.
“வெண்நிற மேகம் மேன்மேல்விரி கடல்பருகுமா போல்
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார்“
(கார்முகப்படலம் 653)
கம்பர் ஜனகனை அறிமுகப்படுத்தும்போது ' மருதம் சூழ் மிதிலையர் கோன்' என்கிறார். நிலவளம், நீர்வளம் முதலிய பல வளங்களை உடையது மருதநிலப்பகுதி.
மிதிலையின் சிறப்பு
விசுவாமித்திரர், இராம இலட்சுமணனுடன் மிதிலை நகர வீதியில் வரும் போது நகரின் சிறப்புகள் பேசப்படுகின்றன. நடன மங்கையர் நடனமாடும் பொன்னாலான நடன சாலைகளை அவர்கள் கண்டார்கள். குற்றம் உடைய பிறப்புகளைப் போல மேலும் கீழுமாய் போவதும் வருவதுமாகிய தன்மையுடைய குற்றமற்ற பிறப்புகளைப் போல மேலும் கீழுமாய் போவதும் வருவதுமாகிய தன்மையுடைய பாக்கு மரங்களிலே பிணைக்கப்பட்டுள்ள ஊஞ்சலிலே, பெண்கள் தம்மைச் சுற்றிலும் ஆரவாரத்தோடு மேலெழுந்த வண்டுகள் ஒலித்து நிற்க, ஆடவர்களின் மனதோடு ஆடுவதை அவர்கள் கண்டார்கள். அளவில்லாத இரத்தினங்கள், பொன்முத்துக்கள் கவரிமானின் வால், காடுகளில் உண்டாகும் வகிர்க் கட்டைகள், மயில் தோகைகள், யானை தந்தங்கள் ஆகியவற்றை வயல்களுக்கு வரப்புகளை அமைத்து முடிக்கும் உழவர்கள் குவித்து வைக்குமாறு இரு கரைகளிலும் பரவச் செல்கின்ற காவிரி நதியைப் போன்ற கடைவீதிகளை அவர்கள் கண்டார்கள். மகளிர் வீணை வாசிப்பதைக் கண்டார்கள்.