பெண்மனதின் அரூப யுத்தம் 'அம்மாவின் ரகசியம்'
மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் கூட தம் இலட்சியப் பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவதும் இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் போக்குகளினூடு, மனிதர்கள் தம் வாழ்வின் போக்குகள் மாறிச் சிதையும் வினோதங்களை கண்டபடியே தாம் அடைய முடிந்திடா இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும் சரி, புரட்சியும் சரி வீழ்ச்சியடையும் மனிதர்களின் வாழ்க்கைகளை தம் பிரச்சாரங்களிற்காகவே பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கின்றன. படைப்பாளிகளே சாதாரணர்களின் வீழ்ச்சிகளை மானுட அக்கறையுடன் பதிந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். 'அம்மாவின் ரகசியம்' எனும் இக் குறுநாவல் இலங்கையிலுள்ள 'உடவளவ' எனும் கிராமத்தில் வாழ்ந்திருந்த முத்துலதா எனும் பெண்ணின் வாழ்க்கை பெறும் மாற்றங்களை தன் சொற்களில் அரங்கேற்றுகிறது. 1970 களிலும் 1980 களிலும் இலங்கை அரச அதிகாரங்களிற்கு எதிராக புரட்சி செய்த தென்னிலங்கையை சார்ந்த புரட்சி அமைப்பான 'ஜனதா விமுக்தி பெரமுன'விற்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளின் பின்ணனியில் கதையின் ஆரம்பப் பகுதி கூறப்படுகிறது.

சுப்ரபாரதிமணியனின் மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 250 தொடும்.ஆரம்ப காலக் கதைகள் வெகு யதார்த்தமான அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றின சித்தரிப்புகளாய் அமைந்திருந்தன, அப்பா என்ற ஆளுமையும் கிராமச் சூழலும், சேவற்கட்டு வாழ்க்கையும் குறிப்பிடதக்கதான குடும்ப நிகழ்வுகளும் சிறுகதைகளாயிருந்தன. அவற்றையெல்லாம் அவரின் அனுபவக் கதைகளாகக் கொள்ளலாம். அனுபவ விஸ்தரிப்பே கதைகள் என்ற வரையறையை விட்டு வெளியே வந்த போது இவருக்குத் தென்பட்ட உலகம் பரந்திருந்தது. அந்த பரந்த உலகத்தை கூர்ந்து அவதானித்து கதைகளுக்குள் கொண்டு வந்த போது நிறைய எழுத ஆரம்பித்தார். செகந்திராபாத் வாழ்க்கையை சிறுகதைகளாக ஒரு தமிழன் அந்நிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது அவன் அந்நியமாக்கப்படுகிற சூழலும், மதக்கலவரங்களால் மனிதர்கள் சிதறுண்டு கிடப்பதும், அந்த பிரதேசத்திற்குரிய விசேச மனிதர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். .
அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் , இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார். பல்பரிமாணங்களிலும் அறிவியல் புனைகதைகளை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழ் மகன், தி.தா. நாராயணன், நளினி சாஸ்த்ரிகள், ஆர். எம். நௌஸாத், கே.பாலமுருகன், வ.ந. கிரிதரன் முயன்றிருக்கிறார்கள். கி.பி.2700 இல் முப்பரிமாண உருவத்திலுள்ள ஒருவனை, நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்தில் கொண்டு சென்று 180 பாகை உருவ மாற்றத்தைக் கொண்டு வந்து அவனை மரண தண்டனையிலிருந்து மேல் முறையீடு செய்யச் சொல்லிச் செல்கிறது ஒரு அண்டவெளி உயிரினம். இது “ நான் அவனில்லை “ என்ற கிரிதரன் ( கனடா) அவர்களின் கதை.. கொஞ்சம் விலாவரியாக இருந்தாலும் வித்யாசமாக இருந்தது.
பூங்காவனத்தின் 14 ஆவது இதழ் தற்பொழுது வாசகர் கைகளில் கிடைத்துள்ளது. காலாண்டுச் சஞ்சிகையாக வெளிவரும் பூங்காவனம், தனது ஒவ்வொரு இதழிலும் மூத்த பெண் எழுத்தாளர்களின் முன்னட்டைப் படத்ததைத் தாங்கி வெளிவருவதோடு அவர்களது இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை நேர்காணல் மூலமாக பெற்று, சஞ்சிகையின் ஆசிரியர் ரிம்ஸா முஹம்மதும், இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னாவும் வாசகர்களுக்கு இலக்கிய விருந்து படைத்து வருகின்றனர். இம்முறை சிங்கள மொழியில் இலக்கியம் செய்து அதனைத் தமிழ் மொழிக்குப் பரிசளித்து வரும், அநேகம் பேர் அறிந்திராத மூத்த இலக்கியப் படைப்பாளி திருமதி. கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களது புகைப்படத்தை பூங்காவனத்தின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்திருக்கிறது.
இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது–2011’ என்ற பரிசைப் பெற்ற நுணாலிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘வியக்க வைக்கும் பிரபஞ்சம்’ என்ற அறிவியல் நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. வியக்க வைக்கும் பிரபஞ்சம்! இது நாம் அனைவரும் ஒப்பும் ஓர் உண்மை. வியப்பு என்பது அறிவினால் அளவிட முடியாது எனும் உணர்வும், உணர்வினால் உணர்த்திட முடியாது எனும் அறிவும் ஒருசேரத் திரண்ட திகைப்பு எனலாம். இந்நூலில், கதிரவன் மண்டலம் அன்றும் இன்றும், பிரபஞ்சம், விண்மீன்கள், சூரியன், நிலாக்கள், ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, வௌ;வாய், வியாழன், சனி, விண்மம் (யுறேனஸ்), சேண்மம் (நெப்டியூன்), சேணாகம் (புளுட்டோ), பிரபஞ்சத்துக்கும் அப்பால், வான் கங்கை, நான்கு வேறுபட்ட சூரியன்களின் ஒளி பெற்றுப் பவனி வரும் ஒரு புதிய கோள் ஆகியவை பற்றிப் பேசப்படுகின்றன. இவைகள் அனைத்தும் வான்வெளித் தொடர்பு பற்றிய செய்திகளாகும். மேலும் இவைகள் யாவும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தனவாகும். சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் முதல் ஆறு கோள்களாகிய புதன், சுக்கிரன் (வெள்ளி), பூமி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்கள் அமைந்துள்ளன. மற்றைய மூன்று கோள்களாகிய யுறேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்களின்றி ஆங்கிலச் சொற்கள்தான் பாவனையில் இதுவரை இருந்துள்ளன. இவற்றிற்கான தமிழ்ப் பெயர்களை முறையே விண்மம், சேண்மம், சேணாகம் என்று பாவனைப்படுத்தி முதல் அடி எடுத்து வைத்துள்ளார் ஆசிரியர்.
ஈழத்து கவிதை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்களில் ஒருவராகத் தெரிபவர் வானம்பாடி என அன்புடன் அழைக்கப்படும் வதிரி.சி.ரவீந்திரன் ஆகும். 25/10/1953இல் சாவகச்சேரியில் பிறந்த இவர் வதிரியையும், பின்னர் கொழும்பையும் வாழ்விடமாகவும் கொண்டிருப்பதனால் இவரின் சிந்தனைத் தளம் விரிவடைய பலருடன் நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவரின் கவிதை முயற்சி பூம்பொழிலில் எழுதியதுடன் ஆரம்பமாகியது எனலாம். கவிதை,சிறுகதை, கட்டுரை, நாடகம், நூல்விமர்சனம் என தன் திறமையை வெளிப்படுத்தி நின்றாலும் கவிதை மூலமே அறியப்பட்டவர். சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரியிலும், வதிரி.வடக்கு மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையிலும், உய்ர வகுப்பை கரவெடி தேவரியாளி இந்துக் கல்லூரியிலும் பயின்றார். இளமையிலேயே வாசிக்கும் பழக்கத்தினை கொண்டிருந்தவரின் அறிவுப் பசிக்குத் தீனி போடுபவர்களாக பலர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக இவருக்கு வாய்த்த ஆசிரியர்களும், நண்பர்களும் தான்.தேவரையாளி இந்துக் கல்லூரியின் பெருமை இலக்கியத்தும் உண்டு. அங்கு படித்த காலத்தில் தான் எழுத்தாளர். திரு.தெணியான், கவிஞரும், நாடகாசிரியருமான கலாநிதி.காரை.எஸ்.சுந்தரம்பிள்ளை ஆகியோரின் நெறிப்படுத்தல் இவருக்குக் கிடைத்ததும் வாய்ப்பாக அமைந்தது. நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் மேலோங்க பல நாடகங்களில் நடித்தும் உள்ளார். கலாநிதி.காரை.சுந்தரம்பிள்ளை அவர்களினதும்,திரு.இளவரசு ஆழ்வாப்பிள்ளையினதும் நாடக இயக்கம் நடிப்பில் ஜொலிக்க உதவியது.நாடகப் பயிற்சிப் பட்டறையின் அனுபவம் இன்று வரை நாடக விமர்சகராகவும்,தேசிய நாடக சபை உறுப்பினராகவும் இயங்க முடிந்திருக்கிறது.
ஜீவநதியின் 28 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கிறது ப. விஷ்ணுவர்த்தினி எழுதிய நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி. 93 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் 12 சிறுகதைகள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன. அருள் திரு இராசேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியோடு, வி. ஜீவகுமாரனின் முன்னுரையும் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன எனலாம். இது நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே 2010 இல் மனதில் உறுதி வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி போரின் கொடுமைகள், மக்கள் அதனால் பட்ட அவதிகள், யுத்தம் அழித்துச் சென்ற செல்வங்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டிருப்பதானது, போர் மக்களின் மனதில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை நன்கு உணரக்கூடியதாக இருக்கின்றது. எத்தனை ஆயிரம் உயிர்கள் இந்த போரின் போது இறந்தன? எத்தனை நபர்கள் காணாமல் போயுள்ளனர்? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடையே இல்லாத சூழலில் இந்தத் தொகுதியானது சிலருக்கு, சிறந்த ஆறுதலாகக்கூட இருக்கலாம் என்ற அளவுக்கு அதில் சித்தரிக்கப்பட்டுள்ள விடயங்கள் மனதைக் கவர்கின்றன.
அண்மையில் திடீரென்று சுவாசுகாங் நூலகத்தில் நுழைந்தேன். முதலில் ஆங்கிலப்பகுதிக்குச் சென்றேன். இதய நோய்வராமல் தடுப்பதுபற்றிய ஆங்கில மருத்துவ நூலைப்படித்துவிட்டு தமிழ்ப்பகுதிக்கு வந்து நான் எடுத்த நுல்கள் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதிய 'சமஸ்காரா' என்ற புதினம், தமயந்தி எழுதிய 'வாக்குமூலம்' என்கிற சிறுகதைத்தொகுப்பு. தமயந்தியின் அக்கக்கா குருவிகள் பற்றி தம்பி நெப்போலியன் என்னுடன் பேசியது நினைவுக்கு வந்தது. தமயந்தி தன்முனைப்பும், சாதிக்கத்துடிக்கும் ஆர்வமும், முற்போக்கு எண்ணமும்கொண்ட பெண்ணாக நான் முடிவு செய்திருந்தேன். பண்பலை வானொலியில் பணியாற்றினார் அல்லது பணியாற்றுகிறார் என்ற தகவல் நூலைப்படித்தபோது தெரிந்தது. எதோ ஒரு வார இதழில் பணியாற்றியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பின்னணியோடுதான் அவருடைய சிறுகதைத்தொகுப்பிற்குள் நுழைந்தேன். சிறுகதைகள் பக்கங்கள்கூடி சிறுகதையாக இல்லாதநிலையில் அது எத்தகைய கதையாக இருந்தாலும் கரைந்து படிப்பதற்கு மனம் இசைவதில்லை. இவருடைய கதைகள் அளவில் சிறுகதையாகவே அமைந்தது நான் ஆர்வமாகப் படிப்பதற்குக் காரணம். அப்படி கையிலெடுத்து படித்தபொழுது எல்லா கதைகளையும் இயல்பாக படித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. கதை சொல்வது யார்? கதைப்பாத்திரங்கள் யார் யார்? என்று நினைவில் நிறுத்திக்கொண்டு படிப்பதில் சில இடங்களில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது.. ஆனாலும் கதையைச்சொல்லிச்செல்லும் முறையைக் கவனத்தில்கொள்ளக்கருதி படிக்கத்தொடங்கினேன். தொடக்கம்முதல் முடிவுவரை கதையில் வரும் சில சொற்றொடர்களை அடுக்கிப்பார்த்தால் அது ஒரு கவிதையாக மாறும் என்பது என் முடிவு.
திருப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது நொய்யல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜீவ நதியும், அதன் கரையில் உருவாகி வெற்றிலைக்கும், தாழம்பூவுக்கும், விதவிதமான கீரை காய்கறி வகைகளுக்கும் பெயர் பெற்று விளங்கிய சின்னஞ்சிறிய திருப்பூர் நகரமும், விடுதலைப் போர்க்கொடி கீழே விழாமல் தன் இன்னுயிரில் தாங்கிய திருப்பூர் குமரனும் நினைவுக்கு வருவார். மக்களைக் காந்தமாய்க் கவரும் விதவிதமான பின்னலாடைகள் நினைவுக்கு வரும். புதிதாய் முளைத்தெழும் வண்ண வண்ணக்கட்டிடங்களும் நினைவுக்கு வரும். இம்மாதிரியான கவர்ச்சிமிக்க எண்ணத் திரைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் உள்ளே தெரிவதென்ன? சாயச் சாக்கடையாகச் சிறுத்துக் கொண்டிருக்கும் நொய்யல் நதி. சாயப்பட்டறைக் கழிவுகளால் விஷமாகிக் கொண்டிருக்கும் தெருக்கள். மனிதனின் மொத்த வாழ்க்கையையே சூதாட்டம் ஆக்கி, மனித மதிப்புகளை வெளிறி வண்ணமிழக்கச் செய்யும் பனியன் தொழில்-இந்தச் சூதாட்டத்தில் கணம்தோறும் வெட்டுப்பட்டுக் கல்லறைக்குப் போகும் ராஜா, ராணி, யானை, குதிரைகள், சேவகர்கள்: இவைகளை மாற்றி மாற்றிக் காட்சிகளாகப் பக்கம் பக்கமாக வரைந்து காட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன் தன் சாயத்திரை நாவலில்.
1957 இல் எழுத ஆரம்பித்தவர் திரு நீர்வை பொன்னையன் அவர்கள். இவரது முதல் சிறுகதை பாசம் என்பதாகும். இக் கதையானது ஈழநாடு வாரப் பதிப்பில் பிரசுரமாகியுள்ளது. அதனையடுத்து மேடும் பள்ளமும் என்ற கதை கலைச் செல்வி இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. தொடர்ந்து தமிழன், வீரகேசரி, தேசாபிமானி, வசந்தம், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவர் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். 1957 இல் எழுத ஆரம்பித்த திரு நீர்வை பொன்னையன் அவர்கள் 2012 வரையான 65 வருட காலப் பகுதிகளில் 91 சிறுகதைகளை எழுதியுள்ளார். 1961 இல் வெளியிடப்பட்ட இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் என்பதாகும். உதயம், பாதை, வேட்கை, ஜென்மம், நிமிர்வு, காலவெள்ளம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை இவர் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். நினைவுகள் அழிவதில்லை என்ற இந்த சிறுகதைத் தொகுதியானது இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வெளிவந்துள்ள திரு நீர்வை பொன்னையன் அவர்களின் ஒன்பதாவது சிறுகதைத் தொகுதியாகும்.
பூங்காவனம் இலக்கிய வட்டத்தின், கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனம் 13 ஆவது இதழ் பூத்து தற்போது வாசகர்கள் கைகளில் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. ஷஅன்னையும் பிதாவும் முன்னரி தெய்வம்| என ஒளவையார் தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லும் போது குறிப்பிடுகின்றார். உண்மையில் சகலவற்றிலும் தாய்க்கும், தந்தைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். பொருளாதாரத்தின் பலம் அவர் கையில்தான் இருக்கிறது. அவரது உழைப்பு இன்றேல் குடும்பத்தின் வாழ்வு நிலை வழுக்கி வீழ்ந்துவிடும். அன்னையர் தினத்தைப் போல தந்தையருக்கும் தினம் ஒன்று இருக்கிறது என்பதனை வாசகர்களுக்கு நினைவூட்டி அவர்களைக் கன்னியப்படுத்த வேண்டும் என்பதை சஞ்சிகை ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்கிறார். பூங்காவனத்தின் உள்ளே நான்கு சிறுகதைகள், எட்டுக் கவிதைகள், இரண்டு கட்டுரைகள், இரண்டு நூல் மதிப்புரைகள் என்பவற்றோடு வாசகர் கடிதமும், நூலகப் பூங்காவும் வழமை போல் இடம் பிடித்துள்ளன. செல்விகள் ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இருவரும் ஆரவாரம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியச் சேவை புரிந்து வரும் திருமதி பவானி தேவதாஸ் அவர்களை நேர்கண்டு அவர் மூலமாக பல இலக்கியத் தகவல்ளைத் தந்து இருக்கிறார்கள். திருமதி. பவானி தேவதாஸ் கண்டியில் பிறந்து வளர்ந்து விஞ்ஞான ஆசிரியையாகி கல்விச் சேவை செய்தவர். ஸிந்து கன்னியா என்ற பெயரில் இவருக்கு ஒரே ஒரு மகள் மாத்திரம் இருக்கிறார்.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் 'ஹேர்ண்' நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர அடக்குமுறைகள் நிலவிய காலங்களில், அந்த அடக்குமுறைகள் எல்லைகளைக் கடந்து புலம்பெயர்ந்த தேசங்களிற்கும் கடத்தப்பட்ட காலங்களில், இலக்கியச் சந்திப்பாளர்கள் தாயகத்தில் நடந்துகொண்டிருந்த யுத்தத்திற்கும் அனைத்து அடக்குமுறைகளிற்கும் அதிகாரங்களிற்கும் எதிரான தங்களது குரலை சுயாதீனமாக, யாருக்கும் பணியாத உறுதியுடன் தொடர்ச்சியாக ஒலித்துக்ண்டிருந்தார்கள். யுத்தத்திற்குப் பின்னும் இந்த எதிர்க் குரலை இலக்கியச் சந்திப்புத் தன்னுடன் வைத்தேயிருக்கிறது. ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை இந்த எதிர்க்குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். சிறுபத்திரிகைகளில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் தீவிர இலக்கிய எழுத்தாளர்களையும் மாற்று அரசியற் செயற்பாட்டாளர்களையும்; மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், பெரியாரியம், பின்நவீனத்துவம், உடலரசியல் போன்ற சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் சுதந்திரக் களமாக இலக்கியச் சந்திப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. யுத்தம் முடிந்த பின்பும் யுத்தத்தின் சுவடுகள் நம்முடனேயே இருக்கின்றன. இலங்கையில் பேச்சு - எழுத்துச் சுதந்திரம் இன்னும் அரசாங்கத்தாலும் பிற ஆயுதக் குழுக்களாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டேயிருக்கின்றது. அதேவேளையில் யுத்த காலத்தின் கடுமையான கெடுபிடிகள் சற்றே தளர்ந்து ஒரு இடைவெளி இலங்கையில் உருவாகியுமிருக்கிறது. இந்த இடைவெளியே இலக்கியச் சந்திப்புத் தொடரை இலங்கைக்கு நகர்த்தியிருக்கிறது.
”எனது நீண்டகால மருத்துவ பணியில் நான் பெற்ற அனுபவங்கள் பல்லாயிரம் அவற்றின் சில துளிகளின் வெளிப்பாடாகவே இந்த கருணை நதி கருக் கொண்டது” கருணை நதி குறுநாவலின் முகவுரையில் அதன் ஆசிரியர் மிதாயா கானவி (மிதிலா) இவ்வாறு குறிப்பிடுகின்றார். ”மனித வாழ்வின் வாழ்வியல் அனுபவங்களே இலக்கியமாகிறது” அந்த வகையில் கருணை நதி மருத்துவ தாதியாக கடமையாற்றும் மிதாயாகானவியின் மருத்துவ துறைசார்ந்த அனுபவங்களை உணர்வூட்டும் காதல் கதையொன்றுடன் பேசுகிறது. ஈழத்தமிழ் மக்கள் நெருக்கடியானதும் துன்பகரமானதுமான பாதையை கடந்து வந்திருக்கிறார்கள் முள்ளி வாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் பேரழிவாக பதிவாகியிருக்கிறது. இந்த அனர்த்தங்களோடு இணைந்து பயணிக்கிறது கருணை நதி இதுவே இந் நாவலை கவனத்துக்குரியதாக்குகிறது. இலங்கையில் நிகழ்ந்த போர் அவலங்கள் பல்வேறு வகையில் பதிவு செய்யப்பட்டிருக்கினறன. அந்தவகை இலக்கிய பதிவாக வெளிவந்த கருணை நதி தமிழர் துயரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதைவிட போர்ச்சூழலில் நின்று மக்கள் துயர் துடைத்த மருத்ததுவ பணியாளர்களின் கருணையை மறக்க முடியாது. காதலின் ஏக்கமும் தேடலுமே கதையின் கருவென விரிந்தாலும் மருத்துவ பணியின் மனிதநேய அணுகுமுறை கருணை நதியாக கதையெங்கும் பரவுகிறது. உண்மையை எழுதுதலே சிறந்த இலக்கியமாகிறது .இங்கும் வாழ்வின் யதார்த்தமே நாவலின் வெற்றியை தீர்மானித்திருக்கிறது.
இன்றையதினம் லண்டனில் வாழும் ஈழத்துத் தமிழறிஞர் திரு. கா.விசயரத்தினம் அவர்களது இரண்டு நூல்களை அறிமுகம் செய்யவிருக்கிறேன். தமிழ் இலக்கணத்தில் கிறிஸ்துவுக்கு முன் 3ம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியமும், கி.பி. 13ம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலும் இன்றளவும் போற்றுதற்குரியனவாகப் பயன்பெறுகின்றன. தமிழ் மொழிக்கு இலக்கண வரம்பை வழங்கிய முதல் நூலாக தொல்காப்பியம் கருதப்படுகின்றது. அகத்திய மாமுனிவரால் ஆக்கப்பட்ட அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை அடியொற்றியே அவரது தலைமைச் சீடரான தொல்காப்பியரால் தொல்காப்பியம் என்ற நூல் எழுதப்பட்டது என்பது வரலாறு. முதலாம் தமிழ்ச்சங்கம் இருந்த பிரதேசம் கடல்கோளினால் முன்னர் அழிக்கப்பட்டபோது அகத்தியமும், அக்காலத்தைய தமிழ் நூல்களும் இல்லாது போயின என்பதும் வரலாறு. அகத்தியம் என்ற பண்டைய நூல் எம்மிடையே இல்லாத இன்றைய நிலையில் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியமே இன்று கைக்கெட்டிய முதலாவது தமிழ் இலக்கண நூலாக எம்மிடையே வாழ்கின்றது.

வரலாறு எழுதுதல் எனும் செயல்பாடு கடந்த காலம் பற்றியதாயினும் அது எப்போதுமே எழுதுபவன் வாழும் நிகழ்காலம் குறித்ததாகவே இருக்கிறது. வாசுதேவன் தனது சமகால மனநெருக்கடியிலிருந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பிரெஞ்சுப் புரட்சி குறித்த அவரது வரலாற்று நூலை முன்வைத்து ரொபேஷ்பியர் முதல் பிரபாகரன் வரையிலான ஆயுதப் பேராட்டத்திற்குத் தலைமையேற்ற ஆளுமைகளின் நம்பிக்கைகள், நடைமுறைகள், அதீதங்கள் என ஒருவர் உரசிப் பார்த்துக் கொள்ளமுடியும். வாசுதேவனின் நூலுக்கு அறிமுகம் எழுதுகிற இந்த இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கு 225 ஆண்டுகள் நிறைகிறது. 1989 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறு ஆண்டு நிறைவு விழா பிரான்சில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தபோது இவ்வாறானதொரு நூல் எழுதும் ஆதர்ஷம் தனக்கு ஏற்பட்டது என்கிறார் வாசுதேவன். வாசுதேவனுக்கு நிச்சயமாக இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி எதிர்கொண்ட கருத்தியல் மற்றும் நடைமுறைக் கேள்விகள் அனைத்தையும் எதிர்கொண்ட ஒரு விடுதலைப் போராட்டமாக அவரது பூர்வீக நிலம் சார்ந்த ஈழவிடுதலைப் போராட்டம் இருந்தது என்பதுதான் அந்தக் காரணம். பிரெஞ்சுப் புரட்சி குறித்துப் பேசும், நிறைந்த தமிழ்ப் புதுச்சொல்லாக்கங்களும் கவித்துவ மொழியும் கொண்ட இந்த நூலில் 'போராளிகளின் தற்கொடை, மாவீரர்' போன்ற சொற்கள் வாசுதேவனிடமிருந்து இயல்பாக வந்து விழுகின்றன.
[ 13-10-2004 திகதி அன்று காவலூர் இராஜதுரையால் எழுதப்பட்ட இக்கட்டுரை ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றது. - பதிவுகள்] இலங்கையில் 1980-1983 வரையிலான காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நெடுங்கதை.-வண்ணாத்திக்குளம் இதனால் இந்நூலை சமகால வரலாற்று நவீனம் எனக் கொள்ளத்தகும். 1952இல் உத்தியோகத்தின் நிமித்தம் கொழும்பு வந்த நான் 2000ஆம் ஆண்டுவரை கொழும்பிலே வாழ்க்கை நடத்தவேண்டியதாயிற்று. 1956முதல் 1983 வரை நடைபெற்ற எல்லா கலவரங்களின் போதும் கொழும்பிலேயே குடும்பத்துடன் இருந்தேன். சுமார் 35 வருடகாலம் கொள்ளுப்பிட்டியில் பின்னர் 15 வருடகாலம் நாவலயில். இது தவிர இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் உத்தியோகம் பார்த்த எட்டு வருட காலத்தில் இலங்கையின் பலபாகங்களுக்கும் குமண, தந்திரிமலை மகியங்கனை ஆகிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன் எனவே ‘குடா நாட்டிற்கு வெளியே வாழத்தலைப்பட்ட போதுதான் தமிழினம் தவிர்ந்த ஏனைய இனமக்களும் எவ்வாறு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது,’ என்று நடேசன் தமது என்னுரையில் கூறுவதை முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளக்தோன்றுகிறது. அதிலும் 1956ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டத்தின் சிங்கள் வாரிசுகள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு சிங்களம் தவிர வேற்று மொழி தெரியாது இருக்கிறது. சிங்கள ஊடகங்கள் அரசியல்வாதிகளின் கைகளில் இருந்தன. எனவே பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் சிங்கள மக்கள் மத்தியிலே இனத்துவேசத்தை நாளும் பொழுதும் வளர்க்க வாய்ப்புகள் இலேசாக கிடைத்தன. ஆகவே ஆட்டுவித்தால் ஆடாதவர் யார் எனும் பாங்கில் பெரும்பான்மை இனமக்கள் இன்றுவரை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
கலாபூஷணம் பாலமுனை பாறூக்கின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... என்ற நவீன குறுங்காவிய நூல் அண்மையில் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே பதம் (1987) கவிதைத் தொகுதி, சந்தனப் பொய்கை (2009) கவிதைத் தொகுதி, கொந்தளிப்பு (2010) குறுங்காவியம், தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம் ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரச சாஹித்திய மண்டல சான்றிதழ் பெற்ற நூல் கொந்தளிப்பு குறுங்காவியம் ஆகும். அதுபோல் இலங்கை அரச சாஹித்திய மண்டல விருது, கொடகே சாஹித்திய மகாகவி உருத்திரமூர்த்தி விருது, இலங்கை இலக்கியப் பேரவை (யாழ்ப்பாணம்) சான்றிதழ் ஆகியவந்றை தனதாக்கிக் கொண்ட நூல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியம் ஆகும். இனவாதிகளின் வெறியாட்டத்தில் எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டு பலியாகிப்போன அப்பாவிகளுக்கே எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. என்ற இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் காரணமாக முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையே இருந்த உறவுநிலை, அதனால் ஏற்பட்ட விரிசல், மனமுறிவுகள், இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு, இடர்பாடுகள், விளைவுகள், ஒற்றுமை வாழ்வுக்கான சமாதான முயற்சி போன்றவற்றைப் பற்றிப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்திருக்கிறது.
இலங்கையின் (ஈழத்து இலக்கிய வானில்) தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு கலை இலக்கிய வரலாற்றில் இன்று நிலைக்கும் பெண் கவிஞர்களை (அதிலும் முஸ்லீம் பெண் கவிஞர்களை )விரல் விட்டு எண்ணலாம். அந்த வகையில் மீன் பாடும் தேன்னாடாம் கிழக்கிலங்கையின் கவி மணம் வீசும் பூந்தோட்டமான கிண்ணியாவில் முளைத்து தென்றலாய் சர்வதேச மட்டத்தில் கவிதைகளின் இதமான தடவலாய் தடவிக் கொண்டிருப்பவர்தான் இந்த பாயிஸா அலி. அவர் பிறந்த மண் தமிழ் கவிதை வளம் நிறைந்த மண். கவியூற்று கசியும் நிலம். மரபுக் கவிதை மா மன்னர்கள் நிறைந்த கவிக் குடும்பத்தில் பிறந்த இவர் நவீன கவிதை பிரசவத்தில் கால் பதிப்பது சிறப்பு. தன் கணவருக்கு தன் நூலை சமர்ப்பணமும் செய்து மகிழ்ச்சியும் திருப்தியும் பெறுகின்றார்.
நவீன காலத்தில் உலக அளவிலான நெருக்கடிகளுக்கு இடையில் மனிதர்கள் தமக்குள் தகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனிதர்களில் இப்பொழுது யாரும் தலைவர்களாக இல்லை. நாயகர்களாக இல்லை. தம் வாழ்க்கையைத் தாமே படைத்துக் கொள்கிற அல்லது தீர்மானித்துக் கொள்கிறவர்களை நாயகர்கள் என்று சொல்லலாம். நாயகர்கள் என்பவர்கள் தம்மைச் சார்ந்த உலகச் சூழலில் நீதியை நிலைநாட்டுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இப்படி நாயகர்கள் என்று யாரையும் சொல்வதற்கு இல்லை. தலைவர்கள் என தம்மை நியமித்துக் கொண்டவர்கள் நம் சமூகத்தை, சமூக நீதியை அழிப்பதன் மூலம் தம்மை தலைவர்களாகக்காட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வில்லன்கள் என்று சொல்லுவதுதான் தகும். இப்படி இவர்களை நம்மால் சொல்லவும் முடியாது. இப்படிச் சொல்வதன் மூலம் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக நேரும். ஆகவே நம் காலத்து நாவல்களில் நாயகர்கள் என எவரும் இல்லை. நாவல்களில் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குள் சிதைவுக்குள்ளான மனிதர்கள். இவர்களுக்குள் மையம் இல்லை. முழுமை இல்லை. தொடர்ச்சியான லட்சியங்களோடு இவர்களால் வாழ முடியவில்லை. இவர்கள் வாழ்வுக்கான வழிதேடி அலைகிறார்கள். பிறந்த பூமியில் இவர்களால் வாழ முடியவில்லை. வயிற்றுப் பிழைப்பேகூட இவர்களுக்கான வாழ்க்கையாகிவிட்டது. நீத, நேர்மை என்று இவர்களால் பேச முடியாது. உறவுகள் என்று சொந்தங்கள் என்று இவர்கள் கொண்டாட முடியாது. இயற்கையோடு இவர்களுக்கு வாழ்வு இல்லை. கலைத்தரம், ரசனை என்று இவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ள இயலாது. யாரையாவது நம்பி, அவனுக்கு அடிமையாகி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்ற லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. கற்பைக் காத்துகொள்ள முடியுமா? குழந்தைகள், குடும்பம் என்று கனவு காண முடியுமா?
‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு , வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் , அந்தத் தமிழன் இலங்கைத் தமிழனாகவே வாழத் தொடங்கி விட்ட நிர்பந்தம், வாக்குரிமை நிராகரிக்கப் பட்டு , மாறுகின்ற அரசியல் சூழலில் பாமரனின் வாழ்வு அலைவுறும் அவலம், நிலம் நிராகரிக்கப் படுகின்றபோது அரசு மனித நிராகரிப்புகளும் சேர்ந்து கொள்ள சிதைவுறும் குடும்பங்கள் உறவுகள் , இந்திய மண்ணுக்கு தூக்கி எறியப்பட்டவனாக வந்து சேருகின்ற அவலம், இந்திய தமிழகம் அவனுக்கு தந்த வாழ்வுதான் என்ன? இவையே நாவலின் களமாக இருக்கின்றன. இன்றைக்கெல்லாம் நாவல்கள் மூன்று அடிப்படைகளில் தான் வெளி வருகின்றன: தகவல்களின் அடிப்படையில் வியப் பூட்டுவது; பிரதேச மொழியைப் பதிவு செய்வது; இதுவரை அறியப் படாத சம்பவங்கள் என்ற முன்னெடுப்பில் சம்பந்தம் இல்லாத சம்பவங்களால் பக்கங்களை நிரப்புவது. இந்த மூன்று உத்திகளையும் கையிலெடுத்து, அதை போலிச்சடங்குகளாக்கி நாவலுக்கான சுவையை கலைத்தன்மையை இழந்து போன நாவல்களே இன்று அதிகம். அல்லது செய்நேர்த்தி மிகுந்து உண்மைகளை தொலைத்து விட்ட எழுத்துகளுக்கும் இடையில் நல்ல எழுத்தை , கலையும் உண்மையும் கூடிய எழுத்துக்களைத் தேர்வதே வாசகனின் இன்றைய சவால். தகவல்களை பின்னில் விட்டு மனிதனை முன்னிறுத்தி இந்நாவல் செயல்பட்டிருக்கின்றது. வாசகனை அந்நியப் படுத்தாது கூட இழுத்துச் செல்லுகின்ற மொழி, கதையோட்டம் சரியாக இருந்தால் எந்த பிரதேச மொழியும் புரிதலுக்கானதே, என சொல்லாமல் செய்து விட்ட நாவலிது. கதையோட்டத்திற்கு தேவையான சம்பவங்களால் ,தன்னை தகவமைத்துக் கொண்ட நாவலாகவும் இருக்கின்றது.
வைகறைப் பொழுதினில்
2013 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மலர்ந்திருக்கும் பூங்காவனத்தின் 12 ஆவது இதழ் வாழ்த்துவோர், வீழ்த்துவோரின் செயற்பாடுகளைத் தாண்டி வாசிப்பின் மகத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான தர்காநகரைச் சேர்ந்த திருமதி. சுலைமா சமி இக்பாலின் முன் அட்டைப் படத்துடன் தனது படைப்புக்களைத் தந்திருக்கிறது. இதழின் உள்ளே திருமதி. சுலைமா சமி இக்பால் அவர்கள் 1977 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் எழுத்துலகில் நுழைந்ததில் இருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கும் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். களுத்துறை மாவட்டத்தின் தர்காநகர் மீரிப்பன்னையைப் பிறப்பிடமாகவும், மாவனல்லை கிருங்கதெனியவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தர்காநகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி பயின்று ஆசிரியராகி அதே பாடசாலையில் பல வருடங்கள் கற்பித்து, தான் கற்ற பள்ளிக்கூடத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமியச் சஞ்சிகைகளில் எழுதியவர். தினகரன், தினக்குரல், வீரகேசரி, விடிவெள்ளி போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதி வருகிறார். 1984 முதல் சுமார் பத்தாண்டு காலப் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஷநெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிசுக்கு| பிரதித் தயாரிப்பாளராக இருந்து பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார்.
ஈழத்துக் கவிதை உலகில் தமிழ் பேசும் முஸ்லிம் கவிஞர்களின் பங்களிப்பு மகத்தானது.மரபு,நவீனம் என தங்கள் கவிதைகளை சிறப்புறவே நமக்குத் தந்துள்ளனர். அன்பு ஜவகர்ஷா, அன்பு முகைதீன், பஸீல்காரியப்பர், மருதூர் வாணன், அண்ணல், இக்பால்(தர்காநகர்)மேமன்கவி, இப்னுஅஸ்மத், கலைக்கமல், கவின்கமல், சோலைக்கிளி, உ.நிசார், பைசால், ரியாஸ் குரானாகெக்கிராவை. சஹானா, வசீம் அக்ரம், நாச்சியார்தீவு பர்வீன், கே.எம்.எம்.இக்பால்(கிண்ணியா)ஒலுவில் அமுதன், ஒட்டமாவடி அஸ்ரப், ஜின்னாசெரிப்புத்தீன், புரட்சிக்காமால், கலைமகள் ஹிதாயா, நளீம், நற்பிட்டிமுனை பளீல், அனார், ரிஷான் செரிப், பஹீமா ஜெகான்,ழ்ரஷ்மி, பௌசர், இப்படி பட்டியல் மிக மிக நீண்டது. அவ் வகையில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது நபீல் எனும் கவிஞனின் இந் நூல். உயிர் எழுத்துப் பதிப்பகம் அழகுற எழுபது பக்கங்களில் அச்சிட்டுள்ளது. ஏற்கனவே'காலமில்லாக் காலம்' எனும் கவிதை நூலை தந்தவர். அபரிமிதமான நம்பிக்கைகளை அந் நூலின் மூலம்விதைத்தவர். அவர்களும் யுத்த ரணங்களைச் சுமந்தவர்கள். இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர்கள். பிரிக்க முடியாத படி அவலங்களுடனும், நெருக்கடிகளுக்குள்ளும் வாழ்பவர்கள். ஒரு இனத்தின் விடுதலை இவர்களையும் இணைத்தது தான். அதுவே முழுமையானதுமாகும்.

'காத்திருப்பு' என்ற இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு படைப்பாகும். அது பேசும் பொருள் காரணமாக இங்கு அவதானிப்பைப் பெறுகிறது. பல நாவல்களையும் குறுநாவல்களையும் தந்தது மட்டுமின்றி, சிறுகதை, விமர்சனம், மேடைப் பேச்சு எனப் பரந்த படைப்பாளுமை வீச்சுக் கொண்டவர் தெணியான். இந்தப் படைப்பு ஒரு வித்தியாசமான படைப்பனுபவமாக அவருக்கு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. படைப்புலகில் தனது வழமையான பாதைகளில் நடந்து சலிப்புற்று புதிய பாதைகளை அவாவும் கலைஞனின் உள்ளார்ந்த தேடலை உணர்த்துகிறது எனலாம். ஏனெனில் இது ஒரு பாலியல் நாவல். பாலியல் நாவல்கள் எமக்குப் புதியன அல்ல. பதின்மங்களில் நான் படித்த எஸ்.பொ வின் எழுத்துக்கள் சில கிளுகிளுப்பூட்டின. கணேசலிங்கன், டானியல் போன்றோரும் பாலியல் பிரள்வுகளை அங்காங்கே தொட்டுச் சென்றுள்ளார்கள். சட்டநாதனின் பல சிறுகதைகள் அற்புதமானவை. பெண்களின் உணர்வுகளை, பாலியல் பிரச்சனைகளை அழகாகாத் தொட்டுள்ளார். கலைப் பிரக்ஞையுடனும், மொழி மீதான அக்கறையோடும் எழுதுபவர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் மிக நாசுக்காகவும் அழகாகவும் கையாண்டவர் தி.ஜானகிராமன் இவரின் மோகமுள், அம்மா வந்தாள் இரண்டும் மறக்க முடியாதவை. அதேபோல ஜெயகாந்தனின் ரிஷிமூலம் குறிப்பிட்டுக் கூற வேண்டிய படைப்பாகும். கவித்துவ மொழி நடை அழகும், ஆன்மீகத் தேடலும் கொண்ட லா.சா.ரா காதலும் பாலியலும் இழையோடத் தந்த 'அபிதா' தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. இவர்கள் அனைவருமே பாலியல் உறவுகளையும், பிறழ்வுகளையும் யதார்த்தமாக எடுத்துச் சொன்னவர்களாவர். உண்மையில் அவர்கள் ஏதோ நடக்காத காரியத்தைப் புதிதாகச் சொன்னவர்கள் அல்ல. சமூகத்தில் ஆங்காங்கே மறைவாக நடக்கும் விசயங்களை, வெளிப்படையாக இலக்கியத்தில் கலை நயத்தோடு சொன்னார்கள்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









