ஆசி.கந்தராஜாவின் 'அகதியின் பேர்ளின் வாசல்' - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் ஆசி.கந்தராஜாவின் 'அகதியின் பேர்லின் வாசல்' படித்தேன். நிச்சயமாகப் புகலிடத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகளில் ஒன்றாக இதனைக் கூறலாம். இந்த நாவலின் களங்கள் , நான் இதுவரை வாசித்த புகலிட நாவல்களில் வாசிக்காத களங்கள். எழுபதுகளின் இறுதியில் , ஜே.ஆர்.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அறிவித்து, பிரிகேடியர் வீரதுங்காவை யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாக அனுப்பி, அவ்வருடத்தின் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்கும்படி கட்டளையிட்டதிலிருந்து இலங்கைத்தமிழர்கள் மேல் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்பம், செல்வம் கொல்லப்பட்டதுடன் ஆரம்பமாகிய படுகொலைகள் தொடர் ஆரம்பித்தன.
அக்காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் அதிக அளவில் மேற்கு ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கத்தொடங்கினார்கள். பூங்காக்கள் சிலவற்றில் பியர் போத்தலுடன் காணப்பட்ட தமிழ் அகதிகளைப்பற்றிய செய்திகளை ஊடகங்கள் சில பிரசுரித்தன.நினைவுக்கு வருகின்றது. அக்காலகட்டத்தில் ருஷ்யாவின் 'ஏரோஃபுளெட்'டில் அகதிகள் கிழக்கு ஜேர்மனியூடாக மேற்கு ஜேர்மனிக்குச் சென்றதை அனைவரும் அறிந்திருந்தனர். இந்நாவல் கிழக்கு ஜேர்மனியூடு ஏன் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகப் படையெடுத்தார்கள் என்பதை விபரமாக விபரிக்கின்றது. அக்காலத்தில் உலகில் நிலவிய குளிர்யுத்தச் (Cold War)சூழல் காரணமாகக் கிழக்கு ஜேர்மனிக்குள் இருந்த பேர்லின் நகர் இரண்டாகக் கிழக்கு பேர்லின், மேற்கு பேர்லின் என்று பிளவுண்டிருந்த சூழல் எவ்விதம் இலங்கைத் தமிழ் அகதிகள் மேற்கு ஜேர்மனிக்குள் நுழைய வழி வகுத்தது என்பதை நாவல் கூறுகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் மேற்கு நாடுகளுக்கும் , சோவியத் குடியரசுக்குமிடையில் உருவான 'பொட்ஸ்டம்' (Potsdam) ஒப்பந்தம் எவ்விதம் இவ்விதச் சுழலை உருவாக்கியது என்பதை அனைவருக்கும் புரிய வைக்கின்றது.