'திருக்கைலாய ஞான உலா'வில் செய்திப் பரிமாற்றப் புலப்பாடு - முனைவர். கு.செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி -
சொற்கள் அற்ற தொடர் அமைப்பே தகவல்தொடர்பியல் கூறாக அமைகின்றது. இதில் தன்னுடைய கருத்துக்கள், எண்ணங்கள், மனநிலை, அறிவு, நடத்தை போன்றவற்றை மற்றவரிடம் தெரிவிக்க இச்செய்தி பரிமாற்ற புலப்பாட்டு முறைமைகளைக் கையாளுகின்றோம். மேலும் உடலலைசவுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரலொலி போன்றவற்றின் மூலம் நேரடியாகவோ, தனியாகவோ (அல்லது) கூட்டமாகவோ செய்திகள் பரிமாற்றப்படுகின்றன. இது குறியீட்டு அடிப்படையில் படமாகவோ, சொற்களாகவோ, உடலசைவாகவோ இடம்பெறும். அடுத்தவரின் மனதைப் பாதிக்கச் செய்யும் செயல்முறைகள் இங்கு மிகுதிபட அமைகின்றன. ஆதியில்மனிதன் சீழ்க்கை ஒலி எழுப்புதல், கூவியழைத்தல், புகை எழுப்புதல், பறையடித்தல், மணியடித்தல், தீயம்புகளை வானில் எறிதல் போன்றவற்றின் வாயிலாகத் தனது கருத்தை எடுத்தியம்பினான். காலமாற்றத்தால் தகவல் தொடர்பியல் வழி இணையத்தின் வழி செய்திகள் விரைவில் பரிமாற்றப்பட்டு வருகின்றது. ‘திருக்கைலாய ஞான உலாவில்’ இடம்பெறும் தலைவியின் மனநிலை செய்திப் பரிமாற்ற அடிப்படையில் ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
கொடி –கருத்துப் புலப்பாடு:
ஆரம்பக் காலத்தில் ஓவியங்கள், சைகைகள் மூலம் செய்தி ஒலிபரப்பப் பட்டன. நாளடைவில் கொடிகள், படங்கள் முதலியன கொண்டு செய்திகள் பரிமாற்றம் செய்தனர். மன்னன் தனது வெற்றிச் சின்னமாகக் கொடிகளைக் கோட்டையில் ஏற்றினான். பலவண்ண நிறங்களில் கொடிகள் இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றன. காமக்கடவுகாளகிய மன்மதன் ஐந்து விதமான அம்புகளும், மலர்களும் மற்றும் கொடிப்படைகளும் கொண்டு இருப்பது வழக்கமாகும். அதாவது தனது முதுகில் இடப்புறத்தில் அம்புகளை ஏந்தி இடது கையில் கரும்புவில்லைப் பற்றி, சங்கு போன்ற முன்கைகளால் மலர்க்கணைகளை வீசிவரும் காட்சி திருக்கைலாய ஞான உலாவில் பதிவாகி உள்ளது. இதனை,