சமுத்திரன் கூறியதும் கூற மறந்ததும் கூறியவற்றில் குறிப்பிடத் தவறியதும் 'சமுத்திரன் எழுத்துகள் தொகுதி -03 - கலை இலக்கியம் சமூகம் அரசியல் -விமர்சனப் பார்வை' நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! - வாகீசன் -
சமுத்திரனின் 'சமுத்திரன் எழுத்துகள் தொகுதி -03 - கலை இலக்கியம் சமூகம் அரசியல் -விமர்சனப் பார்வை' நூல் பார்வைக்குக் கிட்டியது. சமுத்திரன் எழுத்துகள் என்ற நான்கு நூல்களின் தொகுப்பாக சமூக-இயல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூற்தொகுதி ஒன்றின் மூன்றாவது நூலாக இது வெளி வந்திருக்கின்றது. 4 தொகுப்புக்களாக இந்த நூல்கள் வெளிவந்திருந்த போதிலும், கடந்த காலங்களில் எனக்கு கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளங்களில் பயணிப்பதற்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த படியினால் இந்த மூன்றாவது நூலே எனது தெரிவில் முதலாவதாக விளங்கியது.
சமுத்திரன் எழுத்துக்கள் சிறு வயது முதலே எனக்கு அறிமுகமாயிருந்தது. ஆயினும் எனக்குள் அவை அதிக பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனால் பிறிதொரு சமயம், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஏ.ஜே.கனகரட்னாவின் 'மார்க்சியமும் இலக்கியமும்' நூல் எனது கைக்குக் கிடைத்தது. அதில் ரெஜி சிறிவர்த்தனவின் 'உருவம், உள்ளடக்கம், மார்க்சிய விமர்சனம்' என்ற கட்டுரை இடம்பெற்றிருந்தது. இது 'லங்கா கார்டியன்' இல் சமுத்திரன் எழுதிய கட்டுரை ஒன்றிற்கு எதிர்வினையாக எழுதிய கட்டுரையாகும். அந்தக் காட்டமான கட்டுரையை வாசித்தபோது அந்த விவாதத்தினை கிளப்பிய சமுத்திரனின் கட்டுரையினை வாசிக்கும் ஆர்வம் மேலிட்டது. ஆனால் இதுவரை அந்தக் கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ரெஜி சிறிவர்த்தனவின் எதிர்வினைக்கு சமுத்திரன் எழுதிய பதிலாக அன்றைய 'சமர்' இதழ் ஒன்றில் 'கலை இலக்கியத்தில் உள்ளடக்க உருவ உறவும் மார்க்சீய விமர்சனமும்' என்ற கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது. அந்தக் கட்டுரையின் கனதியில் இருந்தும், படைப்புக்களில் உருவ உள்ளடக்கம் குறித்து தர்க்க ரீதியாக அவர் வெளிப்படுத்திய கருத்துக்களில் இருந்தும் அவருடைய ஆளுமையின் வீச்சினை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பின்பு என் பார்வைக்குக் கிட்டிய அவரது கட்டுரைகள் எதனையும் நான் தவறவிட்டிருக்கவில்லை.