கவிஞர் கதிரேசர்பிள்ளை நூற்றாண்டு நிகழ்வும், 'கதிரேசர் கவிதைகள்' நூல் அறிமுகவிழாவும்!


சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்லிங்டன் வீதியில் உள்ள ஈஸ்ட்ரவுன் விருந்தினர் மண்டபத்தில் மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மன்றத்தின் தலைவர் திரு அஜந்தன் மகேந்திரனும் அவரின் துணைவியாரும் மங்கள விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து கனடா தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றன. அதன்பின் சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்தவர்களுக்காக ஒரு நிமிடம் அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து பாமதி ராம்தாஸ் அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.
தொடர்ந்து மன்றத்தின் ‘கலைச்சங்கமம் - 2023’ என்ற ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. மருதநிலத்தின மாண்புகள் என்ற தலைப்பில் சண்டிலிப்பாயின் வரலாறு பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய கட்டுரை ஒன்றும் இதில் இடம் பெற்றிருந்தது. சண்டிலிப்பாய்க்குப் பெருமை சேர்க்கும் வழுக்கை ஆறு, கூவல் தெப்பக்குளம், கல்வளை அந்தாதி, கண்ணகி அம்மன் கோயில் போன்றவை பற்றிய விபரங்களும் இந்த மலரில் இடம் பெற்றிருக்கின்றன.
- தெளிவாகப் பார்ப்பதற்கு இங்கு அழுத்தவும். Zoom link

இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினை தீவிரம் பெற்ற 1980களில் , இலங்கை தமிழ்ச் சூழலின் கல்வி, அரசியல், சமூகம், இலக்கியத் தளங்களில் முன்னணியில் இருந்த ஆளுமைகளிலொருவராக மு. நித்தியானந்தன் இருந்தார். அந்தப் பெயர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக அப்போது இருந்தது. அன்றைய சூழலில் இந்த பல்தளங்களில் நடந்த பல முக்கிய பணிகளுக்கு நேரடியாகவும் , பகுதியாகவும் அவரது பங்களிப்பும் உழைப்பும் தலையீடும் இருந்து வந்திருக்கின்றன. அன்றைய சமகாலத்து முக்கிய ஆளுமைகளுடனும் அரசியல், சமூக, கலை இலக்கியப் போக்குகளுடனும் உறவும் உரையாடலும் செயற்பாடும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்த பெரும் ஆளுமை உருவாக்கம் அறிவாலும், தொடர்ச்சியான வாசிப்பாலும் தேடலாலும் , செயற்பாடுகளாலுமே சாத்தியமாகியது. அத்தகைய முக்கிய இருப்பு , இப்போதைய அவரது எழுபத்தைந்தாவது அகவை வரையும் தொடர்வது எல்லோருக்கும் வாய்த்துவிடும் பெறு அல்ல.
அவரைப்பற்றி எழுதுவதாக இருந்தால், ஒரு விரிவான நூலே எழுதி விட முடியும். அதற்கான விடயப்பரப்பும் பங்களிப்புக்குமுரிய வரலாறும் நம் கண்முன்னே உள்ளது. அந்தளவிலான விரிந்த இயக்கப் பரப்பு அவருடையது. தமிழ்கூறும் அறிவுலகம் தெரிந்து வைத்திருக்கும் , மதிக்கும் ஒரு ஆளுமை பற்றி விரிவாக எழுத இந்த பகுதி அதற்கு இடம் வழங்காது! எதைச் சொல்வது எதைத் தவிர்ப்பது என்கிற தெரிவு , அவரைப் பற்றி எழுதுவோருக்கு முன்னிருப்பது தவிர்க்க முடியாததே!
A Long Watch: War, Captivity and Return in Sri Lanka by Commodore Ajith Boyagoda, as told to Sunila Galappatti, is published by Hurst - தமிழ்பதிப்பு ( நீண்ட காத்திருப்பு ) - வடலி வெளியீட்டகம்- தமிழில் தந்தவர் - தோழர் தேவா - நேற்று அவரும் மரணித்தார்.
நீண்டகாலமாக எழுத வேண்டுமன நினைத்திருந்த ஒரு குறிப்பை, அந்தக் குறிப்புக்கு காரணமாக இருந்த நூலை தமிழில் தந்த தோழர் தேவா மரணித்த போதும் விரிவாக எழுத முடியவில்லையே என்கிற நிலையில் , தோழர் தேவாவின் பணி பற்றியும் , தமிழ்பதிப்பாக வந்த “நீண்ட காத்திருப்பு ” பற்றியும் ஒரு சில வரிகளாவது எழுத வேண்டும் என்பதால் அவசரமாக இதனை பகிர்கிறேன். இத்துடன் தோழர் தேவாவைப் பற்றிப் பேச, பகிர்ந்து கொள்ள ஒரு ZOOM நிகழ்வையும் ஒழுங்கு செய்துள்ளோம் , இதுவே நாம் செய்யும் அஞ்சலி ! எம்மால் இப்போது செய்ய முடிந்தது. விரிவாக எதிர்வரும் 2 ஏப்ரல் - ஞாயிறு அன்று அவரது பல்துறை சார்ந்த பங்களிப்பினை அனைவரும் இந்த ZOOM வழியான நிகழ்வில் பேசுவோம்.
மன்னாரில் பிறந்து, திருக்கோணமலையில் தொழில் செய்து, சுவிட்சலாந்த்தில் வாழ்ந்து , புகலிட நாட்டில் இருந்த அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் உதறித் தள்ளி , சொந்த மண்ணில் , அம்மக்களுடன் வாழ்ந்து , மரணிக்கும் திடசங்கற்பத்தில் இருந்தவர் அவர் என்பதே , அவரது இலக்கை, வாழ்வை, அவரது ஒரு பக்கத்தினை புரிந்து கொள்ள அவர் நமக்குத் தந்த நடைமுறை செயல் வாழ்வின் சாட்சியமாகும்.

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா அண்மையில் பாடசாலை அதிபர் எம்.எம்.எம். நௌப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை சமூகம் சார்பாக கல்பிட்டி சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம். சுஹைப் ஆசிரியர் அவர்கள், அப்பாடசாலையின் ஆசிரியர் ஏ.டப்ளியு.எம். ரிஸ்வான் அவர்களின் மூலம் பொன்னாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டார். அருகில் ஆசிரியர் எம். நிசாம் அவர்களையும் படத்தில் காணலாம்.
- தெளிவுக்குப் படத்தை அழுத்திப் பார்க்கவும். -

இலங்கையில் புற்றுநோய்ச் சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன், அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மருத்துவர் சியாமளா நடேசன், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 26 ஆம் திகதி கண்டி, ரீஜன்னர் விடுதியில் நடைபெற்றது. குறிப்பிட்ட புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இணையத்தளத்தை, மகப்பேற்று மருத்துவ நிபுணர் இந்தர்ஜித் சமரசிங்க தொடக்கி வைத்தார். பேராதனை மருத்துவ, பல் மருத்துவ, மற்றும் மிருக மருத்துவ பீட முதல்வர்களுடன் பல புற்றுநோய்ச் சிகிச்சை மருத்துவர்களும் இந்நிகழ்ச்சியில் சமுகமளித்திருந்திருந்தனர்.

அமெரிக்கா கனடா வாழ் தமிழ் அன்பர்களே! ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு இனிய செய்தியோடு வருகிறோம். பேரவை பெருமையுடன் வழங்கும் "வணக்கம் வட அமெரிக்கா-இயல்" உங்களுக்காக ! கவிதைப்போட்டி, சிறுகதை போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி. போட்டிகள் அனைத்தும் வயதிற்கு ஏற்ப நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.
காந்தள் (5 முதல் 8 வயது வரை)
முல்லை (9 முதல் 12 வயது வரை )
தாமரை (13 முதல் 7 வயது வரை )
தாழை (18 வயதிற்கு மேற்பட்டோர் )
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பிரபல ஆளுமைகளுடன் பயிற்சிப் பட்டறையை பேரவை ஏற்பாடு செய்யும். நீங்கள் இந்த செய்தியை உங்கள் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் அறிவிப்பு செய்தாலே போதுமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பதிவு செய்து விடுவார்கள். உங்கள் சங்கத்தில் எந்த போட்டிகளையும் நடத்த.. இப்போட்டிகளை மாநில அளவில் (முதல், இரண்டாம்) சுற்றுகளாகவும், இறுதிச் சுற்றை பேரவை விழாவிலும் பேரவையின் "வணக்கம் வடஅமெரிக்கா" குழு மூலம் நடத்தவிருக்கிறோம். விழாவில் வெற்றி பெறுபவருக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும் போட்டிகள் குறித்த விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் அறிந்து கொள்ள, போட்டிகளில் பதிவு செய்ய இந்த இணைப்பை பயன்படுத்துங்கள். https://forms.gle/ FEh5vEPCpV4NAqoR7 (பதிவு செய்வதற்கான இறுதி நாள் FEB 28 2023.)

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கவிஞர் அம்பியின் 94 ஆவது பிறந்த தினம் ( 17-02-2023 ) மெய்நிகர் அரங்கு! அம்பியின் சொல்லாத கதைகள் மின்னூல் வெளியீடு!
அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் மூத்த எழுத்தாளர் – கவிஞர் அம்பி எழுதிய சொல்லாத கதைகள் தொடர், அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு இணைய இதழ்களில் முன்னர் வெளியானது. தற்போது இந்தத் தொடர் மின்னூல் வடிவத்தில் வெளியாகவிருக்கிறது. இதன் வெளியீட்டு அரங்கும், கவிஞர் அம்பியின் 94 ஆவது பிறந்த தின நிகழ்வும் இம்மாதம் 17 ஆம் திகதி ( 17-02-2023 ) வெள்ளிக்கிழமை மெய்நிகரில் நடைபெறும்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட ஆண்டில் இலங்கையில் வெளியான சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு முதலான ஐந்து துறைகளில் வெளியான நூல்கள், அவற்றை எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தன. அதன்பிரகாரம் கிடைக்கப்பெற்ற நூல்களை தேர்ந்த இலக்கிய வாசகர்கள் படித்து, பரிந்துரை செய்தவற்றிலிருந்து இறுதிக்கட்டத் தேர்வில் சிறந்த நூல்களாக தெரிவானவற்றுக்கு பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இம்முறை சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் மூன்று நூல்கள் போட்டியில் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நாவல், மொழிபெயர்ப்பு துறைகளில் இம்முறை எந்த நூலும் பரிசுக்குரியதாக தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
போட்டி முடிவுகளும் பரிசுத் தொகையும்
வேப்பமரமும் பவளம் ஆச்சியும் ( சிறுகதை )
விவேகானந்தனூர் சதீஸ் எழுதியது - பரிசு - ரூபா ஐம்பதினாயிரம்
கடவுள் என்பது துரோகியாயிருத்தல் ( கவிதை )
சி. கருணாகரன் எழுதியது. பரிசு ரூபா ஐம்பதினாயிரம்.
மன்னார் மாதோட்டப் புலவர்கள் – கலைஞர்கள் ( கட்டுரை )
அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் எழுதியது.
பரிசு - ரூபா ஐம்பதினாயிரம்.
பரிசு பெற்றவர்களுக்கான பரிசுத் தொகையும் சான்றிதழ்களும், 2023 பெப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் . பரிசுத்தொகை – இலங்கை நாணயத்தில் தலா 50 ஆயிரம் ரூபா. (50,000/= ரூபா )

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஆவூரான் சந்திரனுக்கு இந்த ஆண்டு மணிவிழாக் காலம். இவர் எழுதிய சின்னான் ( குறுநாவல் ) வெளியீடு, ஜனவரி 28 ஆம் திகதி ( 28-01-2023 ) சனிக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் பேர்விக் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் நடைபெறும். முகவரி: 112, High Street, Berwick, Vic – 3806