
- டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG -
1
சாலையோரம் நடந்த சென்று கொண்டிருந்தான். ஒரு பதினாறு வயசு இருக்கும். பனி. அதிகாலை வேளையில் கொட்டி, வானம் இருண்டு போய் கிடந்தது. காரை நிறுத்தினேன். ஏற, உதவி செய்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறானாம். ஸ்டொக்ஹோம் செல்ல வேண்டும். நடந்தால், பஸ் காசும் மிஞ்சும். குறுக்கு வழியாக ஏறினால் நோர்வூட்டிலிருந்து பத்து நிமிசம்தான் எடுக்கும். விவரித்தான்: “அடியான அடி. எல்லோருமாய் சேர்ந்து தான்”. பஸ்ஸில் வரும் போது நடந்த அச் சம்பவம். “தூங்கும் போது, பக்கத்து சீட்டில், கையை விட்டு, - பதினஞ்சாயிரம். அப்படியே அடித்திருக்கிறான். அவனை அடியாய் அடித்து, நாவலபிட்டியில் இறக்கி விட்டார்கள்…”
“நீங்கள் அடிக்கவில்லையா? ”
“செத்துப் போனால்.”
காரை, மாதா கோவிலின் அருகே நிறுத்தினேன்: “இத்துடன் எமது கார் பயணம் முடிவடைகிறது.”
“நீங்கள் …” இழுத்தான். நானும்த்தான் நடக்கப் போகின்றேன். கிலர்ன்கன் வரைக்கும்.
“எதற்காக”
“நடைக்காக”.
“கிலன்கர்ன் சென்று திரும்பி விடுவீர்களா?.”
“ஆம்” என்றேன்.
“அப்படி எனில் சேர்ந்தே நடக்கலாம்”.
நானும் அவனுடன் இணைந்து நடந்தேன்.
வலப்புறமாய், ஏரி, கோபித்தப்படி உம்மென்று இருந்தது.
அதன் ஆழத்தையும் அமைதியையும் யார் படம் பிடிக்க கூடும். அமைதியை வேண்டுமானால்…
ஆனால் ஆழத்தை…
“காலை அஞ்சரை மணிக்கு தட்டுகளை கழுவத் தொடங்கனும். இரவு பன்னெண்டு மணிவரை.”
“சரிபட்டு வரல… ரெண்டே ரெண்டு கிழமை. அண்ணனே சொன்னார் ‘நீ போ… போறதுத்தான் உனக்கு நல்லது’ அஞ்சாயிரம் தந்து பஸ்ஸிலும் ஏற்றிவிட்டான்…”
“துக்கமாக இருக்கிறது. இடைநடுவே வேலையை விட்டுவிட்டு வந்ததற்காய்” என்று வேதனைப்பட்டான். “வயது என்ன என்றேன்”, “பதினெட்டு”. ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என யோசனை தெரிவித்தேன். மோட்டார் திருத்துவது – சமைப்பது – ஏதோ ஒன்று. ஆனால், அதனை திறம் பட செய்ய தெரிந்து கொள்ள வேண்டும் என தேற்றினேன். ஒரு பிளேன்டீ குடித்தாக வேண்டும் என்றான், எதிர்பட்ட மூடியிருந்த கடையொன்றை பார்த்துவிட்டு. பணம் இருக்கின்றதா என்றேன். அஞ்சாயிரம் என்றான் பையன்.
இடை நடுவே, பெரியண்ணனுடன் தினமும் மாட்டுக்கு புல் அறுப்பவன், தனது வண்டியை, வழமைப் போல் பாதையோரமாக தள்ளி வருவதைக் கண்டேன். என்னை கண்டவுடன், வழமை போல் தலையிலிருந்த தொப்பியை வலக்கரத்தால் அகற்றிய படி தள்ளுவதை நிறுத்தினான். “எப்படி, கன்னுகுட்டி” என்று விசாரித்தேன்.
“நல்லா இருக்கு சார்”.
அவரது மாடு, நேற்றுத் தான், கன்று ஒன்றை ஈன்று இருந்தது. “ஆறரைக்கு துவங்கியது. முடிய இரவு பண்னெண்டு மணி.”
“குட்டி – காளையா, பசுவா” என்றேன். “தெரியவில்லை” என்றான். ஒரு கணம் விக்கித்து தடுமாறி போனேன். மாலை ஆறு மணி தொடக்கம், இரவு பண்னெண்டு மணி வரை மாட்டுடன் இருந்துள்ளான். போட்டது காளையா பொட்டையா என்று தெரியவில்லை. தெய்வமே – எத்தகு மனிதர்கள், பசுவின் வேதனையில் தன்னையும் மூழ்கடித்து… காளையா பொட்டையா என்று கூட பாராமல், மாட்டின் வேதனையுடன் இவர்களை இணைத்தது யார்? யார் உன்னை இங்கு கொண்டுவந்து இருத்தியது? தேவர்களா! இல்லையெனில் இந்த அமைப்புமுறைத்தானா – இப்படி பல்வேறு சிந்தனைகள் என்னை அலைக்கழிக்க, கேள்வி கேட்டதற்காக கூசி போனேன். “பெரியண்ணன் எங்கே”. “படுத்து இருக்கிறார். அசதி. சரி, தூங்கட்டும் என்று வண்டியை தனியாக தள்ளி வந்து விட்டேன். தூங்கி எழும்பி வருவார் அவர்”. “பெரியவர் தானே” என்றான், வண்டியை தள்ள தொடங்கிய படி. கிலர்ன்கனிலிருந்து திரும்பும் போது பெரியண்ணன் எனக்காக நிற்பதைக் கண்டேன்.