மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! – பகுதி 3 - ஜோதிகுமார் -
1
உலகமே நடு நடுங்கிய, அமெரிக்காவின், தேசிய செயலாளர், அந்தனி பிளிங்கன் (2021-2025), ரஷ்ய வெளிநாட்டமைச்சர் லெப்ரோவை, சந்திக்கக் கோரியபோது, லெப்ரோவ் அதனை மறுத்து விட்டார் என்ற செய்திகள் வெளிவந்திருந்தன. உலகத்தைத் திகில்கொள்ளச் செய்த விடயம் இது. கிட்டத்தட்ட முதல் தடவையாக, இவ்வித மறுப்பானது, இவ்விரு நாடுகளுக்குமிடையே எழுவதாய் இருந்தது. “காசா-உக்ரைன்” படுகொலைகளுக்குத் தலைமை பொறுப்பு வகித்தவர் அந்தனி பிளிங்கன் என நியுயோர்க் டைம்ஸ் கோடிட்டிருந்தது (18.01.2025).
பிரதம மந்திரிகளை, தான் நினைத்தாற்போல் தனது பிரமாண்ட விமானம்தாங்கிக் கப்பல்களுக்குள் தள்ளி, அவர்களை அப்படியே முக்கி எடுத்து, பயமுறுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்த அமெரிக்காவின் வரலாற்றில், இப்படி ஒரு அவமானமா என விமர்சகர்கள் போர்க்கொடி உயர்த்தி நின்றனர். ஆனால், லெப்ரோவும் இதனுடன் நிறுத்தினார் இல்லை: “அணுவாயுத பிரயோகிப்புக்கான, சிவப்புப் பொத்தானை அழுத்த வேண்டிய தருணத்தில் நாம் யாருடனும் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை” என அவர் கூறியது ஒருபுறம் முகத்தில் அறைந்தது போல் இருந்தாலும், மறுபுறம், உக்ரைன் போரின் அல்லது உலக முகத்தின் மாறுதல்களை இது எமக்கு எடுத்துரைப்பதாக இருந்தது. (21.09.2024).
2
இதேதினங்களில்தான், ரஷ்ய ராணுவமானது, உக்ரைனிய போர்முனையில் பெருமளவு வெற்றி பெற்று முன்னேறியும் இருந்தது. இந்நாளிலிருந்து, கிட்டத்தட்ட, நான்கு மாதங்களுக்குள்ளாகவே, (மூன்று வருட காலப் போரில்) 97,000 உக்ரைனிய போர் வீரர்களை, கர்க்ஸ் பகுதியில் வைத்து, கொன்றொழித்து இருக்கின்றோம் என புட்டினும் அறிவிக்க நேர்ந்தது. மறுபுறம், ரஷ்யாவுக்கு எதிராக, பொருளாதார தடையானது, மேற்படி தினங்களில் (Sanctions) முற்றாகச் செயலிழந்த நிலையும் தோன்ற தொடங்கியிருந்தது. அதாவது, ஒருபக்கம் பொருளாதார தடையின் எடுபடாமை. மறுபக்கம் போர்முனையில் உக்ரைனும் நேட்டோவும், அடைந்த படுதோல்வி.