பேராசிரியர் பசுபதி அவர்கள் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்! - வ.ந.கி -
பேராசிரியர் பசுபதி அவர்களை நான் ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அவர் என் முகநூல் நண்பர்களிலொருவர். அவ்வப்போது என் பதிவுகளுக்கும் வந்து கருத்துகளை, தகவல்களைத் தெரிவிப்பார். நானும் அவரது வலைப்பதிவான , 'பார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் 'பதிபசுகள்' தளத்தை அவ்வப்போது மேய்வதுண்டு. அவற்றிலிருந்து எனக்குப் பிடித்த இலக்கிய ஆளுமைகள், அவர்கள்தம் படைப்புகள் பற்றிய விபரங்களை என் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. அண்மையில் கூட எழுத்தாளர் தி.ஜானகிராமனின் 'மோகமுள்' ஓவியங்கள் சிலவற்றை , சுதேசமித்திரனில் வெளியானவை, கீழுள்ளவாறு பகிர்ந்திருக்கின்றேன்.
- தி.ஜானகிராமனின் புகழ்பெற்ற நாவலான 'மோகமுள்' 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் தொடராக வெளியானது. அத்தொடரில் வெளியான ஓவியங்கள் சிலவற்றைப் பேராசிரியர் பசுபதி அவர்கள் தனது வலைப்பதிவான 'பசுபதிவுகள்' வலைப்பதிவில் பதிவுசெய்துள்ளார். அவற்றை இங்கு நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன். 'பசுபதிவுகள' வலைப்பதிவு - https://s-pasupathy.blogspot.com -