முருகபூபதியின் சினிமா : பார்த்ததும் கேட்டதும் - எழுத்தாளனின் பார்வையில் சினிமா - ஒரு கண்ணோட்டம்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
ஐம்பது தசாப்தங்களுக்கும் மேல் எழுத்துலகில் தடம்பதித்துள்ள எழுத்தாளர் முருகபூபதியின் முப்பதாவது நூல் "சினிமா: பார்த்ததும் கேட்டதும்". ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ள 128 பக்கங்கள் கொண்டிருக்கும் இந்த நூல், இலங்கை, இந்திய மற்றும் உலக சினிமாக்களை விமர்சிப்பதுடன் மட்டுமல்லாமல், சினிமா உலகில் எம்மை மகிழ்வித்த, மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் அவர்களில் சிலருக்கும் தனக்கும் நிகழ்ந்த சந்திப்புகளையும் உரையாடல்களையும் சுவாரசியமாக முருகபூபதி விபரிக்கிறார்.
இந்நூலுக்கு அட்டைப்படம் வடிவமைக்க என்னிடம் தட்டச்சுப் பிரதியை நூலாசிரியர் தந்தபோது, அதைப் படித்ததும் இந்நூல் வழமையான 'சினிமாப் புத்தகம்' அல்ல என புரிந்துகொண்டேன். வர்த்தக சுழலில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் தற்கால தமிழ் சினிமாவுக்கும் முன்னர் ஒரு பொற்காலம் இருந்தது என்பதை பல கட்டுரைகள் துல்லியமாக விபரிப்பதை இந்நூலில் கண்டுகொண்டேன். சினிமாவைப் பற்றி நாம் எத்தனையோ செய்திகளையும் கட்டுரைகளையும் அச்சு ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் படித்திருக்கிறோம். எனவே வாசகர்களாகிய நீங்கள் இந்த கட்டுரைத் தொகுப்பு நூல் எந்த வகையில் வேறுபடுகிறது - ஏன் இதை படிக்க வேண்டும்? என வினவலாம். ஒரு எழுத்தாளனின் பார்வை, ஒரு சாமானிய திரைப்பட ரசிகனின் பார்வையில் இருந்து எப்படி வேறுபடுகிறது ? என்பதை இந்நூலின் பக்கங்களைப் புரட்டி வாசிக்கும்போது உங்களுக்கு புரியும்.