சிறுகதை : பாடம் - கே.எஸ்.சுதாகர் -
சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது.
சூரியகுமாரின் அக்காவும் அத்தானும் மகள் ஆரபியும் நான்கு நாட்கள் முன்பதாகவே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அக்கா தான் வீட்டிற்கு மூத்தவள். அதற்கடுத்து வரிசைக்கிரமமாக ஐந்து ஆண்கள். சூரியகுமார் கடைக்குட்டி.
அப்பா துரை சாய்வனைக்கதிரைக்குள் ஒருக்களித்துச் சரிந்தபடி எல்லாவற்றையும் அவதானித்தபடி இருக்கின்றார். அவரால் முன்னையைப்போல ஓடியாடி வேலைகள் செய்ய முடிவதில்லை. அவர் தனது மகளுக்கும், மூத்த மருமகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து இன்று மனம் மறுகுகின்றார். மூத்தவள் இன்று எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாகக் கணவருடன் குடும்பம் நடத்துகின்றாள் என எண்ணுகின்றார்.
மறந்துவிடக்கூடிய சாதாரண நிகழ்வா அது! அவரின் மனம் அங்கே தாவுகின்றது.
•
பள்ளியால் வந்த மகள் புத்தகப்பொதியைத் தொப்பென்று போட்டுவிட்டு, வீட்டு வளவிற்குள் வேலிக்கரையோரமாக ஓடுகின்றாள். அவளது அவசரத்தை அவதானித்த அப்பா, வீட்டைவிட்டு வெளியேறி வீதிக்கு வந்து எட்டிப் பார்க்கின்றார். வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் கிடுகுவேலியுடன் கதை பேசியபடி நிற்கின்றான். துரையைக் கண்டவுடன் வேலிக்குள் எதையோ மறைத்துவிட்டு மாயமாக அந்த இடத்தைவிட்டு நழுவிவிட்டான். வேலிக்குள் சொருகியிருந்த கடிதத்தை எடுத்து வந்தார் துரை. மகளைக் கூப்பிட்டார்.