அலை மோதும் காதலே..! - குரு அரவிந்தன் -
வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகாரில் பாதை தெளிவாகத் தெரியவில்லை. பனிமூட்டத்தில் போகிறபாதை தெளிவாகத் தெரியாவிட்டாலும் செல்லவேண்டிய இடத்தை அடைவதில் சுகி குறியாக இருந்தாள்.
மனசு தவிப்பதைவிட இந்தக் குளிரிலும் உடம்பு தகிப்பதே பெரிய வேதனையாக இருந்தது. எப்படியும் மனதில் இருப்பதை சுபாவிடம் கொட்டிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடுதான் அக்காவின் வீடு தேடி வந்திருந்தாள்.
‘ஏன்டி இத்தனை நாளாய் ஊமையாய் இருந்தாய்?’ சுபா தங்கையை அதட்டினாள்.
கட்டிலில் உட்கார்ந்திருந்த சுகி கண்களைத் துடைத்துக் கொண்டு அக்காவை நிமிர்ந்து பார்த்தாள்.
‘எப்படி அக்கா இதை வெளியே சொல்லுறது?’
‘இப்பமட்டும் என்னவாம், வெளிக்கிட்டு என்னோட வா, போவம்.’
‘எங்கேயக்கா..?’
‘டாக்டரிட்டைதான்!’
‘வேண்டாமக்கா, நான் எங்கேயும் வரவில்லை.’
‘குடும்ப வைத்தியரிட்டைப் போனியா?’
‘போனேன்..!’
‘என்னவாம்?’
‘எல்லாம் செக் பண்ணிப் பாத்தாச்சு!’ சுகி விம்மினாள்.
‘என்ன சொன்னவர் எண்டு சொல்லிப்போட்டு அழேன்’
அவள் சற்று நேரம் மௌனம் காத்தாள். இதற்கு என்ன பதில் சொல்வது? எப்படிச் சொல்வது?
‘உன்னிலை ஏதாவது பிழையா?’ என்றாள் சுபா
அவள் பதில் சொல்லாமல் தலை குனிந்திருந்தாள்.
‘பலோப்பின் குழாயில ஏதாவது தடையா..?.’
‘இல்லை’ என்று மறுத்தாள்.
‘கருப்பையில் ஏதாவது கோளாறா?’
அதற்கும் மறுத்தாள்.
‘நல்ல ஆரோக்கியமாகத் தானே இருக்கிறாய், அப்போ என்னதான் பிரச்சனை என்று சொல்லித் தொலையேன்’ சுபா பொறுமை இழந்து கத்தினாள்.