ஆய்வு: குழந்தைகளுக்கான நம்பிக்கை மருத்துவத்தில் தோஷம் நோய் - முனைவர் த. ரெஜித்குமார், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேதாரண்யம். -
முன்னுரை
குழந்தைகளுக்கு நோய் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதல் காரணம் தாயும் தந்தையும் ஆவர். மனப்பொருத்தமுடைய ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியுடன் கூடுகின்ற காலத்தில் குழந்தைபேறு கிடைக்கும்போது பலப்பல வியாதிகள் பெற்றோர்கள் செய்கின்ற தவறினால் தோன்றக் கூடும். பெற்றோருக்கு மேகம், சூலை, வெட்டை போன்ற நோய்கள் இருக்குமாயின் உடனே அந்நோய்களைக் குணமாக்கி விட வேண்டும். அந்நோய்களைக் கொண்ட தாய் கருக்கொண்டால் குழந்தைக்குச் சிவப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொடிய சிவப்பு எனப்படும் சிவப்பாகிய சன்னி நோய் குழந்தைக்கு ஏற்பட்டால் குழந்தை இறந்துவிடவும் வாய்ப்பு உள்ளது. மேலும், மனக்கவலை, சத்தான உணவுப் பொருட்கள் இன்மை, அழுகை, உடலுறவு, பயணங்கள் அவற்றின் மூலம் தாய்க்குச் சூடு ஏற்பட்டு உடல் பாதிக்கப்பட்டால் குழந்தைக்குப் பலவித நோய்கள் உண்டாகின்றன. குழந்தைகளுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் சில மருத்துவமும் செய்கின்ற மரபு நாட்டுப்புற மக்களிடையே காணப்படுகிறது. இக்கட்டுரையானது நாட்டுப்புற குழந்தை மருத்துவத்தில் கையாளக்கூடிய நம்பிக்கை மருத்துவ முறைகளில் ஒன்றான தோச நோய் குறித்து எடுத்துரைப்பதாக அமைகிறது.
குழந்தை நோய்களைக் கண்டறியும் முறை
நாட்டுப்புற மக்கள் இயல்பாக குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்டிருப்பதை அனுபவத்தின் வாயிலாக கூறுகின்ற மரபு உள்ளது. அவை,
1. இயல்பாய் இருக்கும் குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தால் உடல் உபாதைகள் ஏதோ நிகழ்ந்திருப்பதை உணரலாம்.
2. குழந்தையின் நெற்றிப்பொட்டைத் தொட்டுப் பார்க்கும்பொழுது அதிக உஷ்ணமாக இருக்கும்.
3. குழந்தையைத் தூக்கும்பொழுது இயல்பைவிட சற்று கனமாக இருக்கும்.
4. குழந்தையின் அடிவயிற்றைத் தொட்டுப் பார்க்கும்பொழுது சிறிது கடினமாக இருக்கும்.
5. சிறுநீர், மலம் நிறம் மாறி இருக்கும்.
6. நாக்கில் வெள்ளை நிறத்தில் மாவு படிந்து காணப்படும்.
7. மூக்கடைப்பு இருக்கும்.
8. உடல் களைப்பு காணப்படும்.
என்பனவற்றைக் கூறுகின்றனர்.