ஸ்ரீரஞ்சனியின் 'ஒன்றே வேறே' சிறுகதைத் தொகுப்பு - ஒரு நோக்கு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
சரளமான மொழிநடை என்பது ஒரு எழுத்தாளருக்கு வரமாக அமைவது. தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் வல்லமை பலரிடம் காணப்பட்டாலும், அகம் சார்ந்த உணர்வுகளை மென்மையுடனும், புறம் சார்ந்த தோற்றங்களை அழகியலுடனும், சமூகம் சார்ந்த அறங்களை ஓர்மத்துடனும் வெளிப்படுத்தும் திறன் சிலரிடம் அதீதமாகக் காணப்படும். அவர்களுள் ஒருவர் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி.
அண்மையில் வெளிவந்த 'ஒன்றே வேறே' சிறுகதைத் தொகுப்பு இதற்கு தெளிவான உதாரணமாக அமைகிறது. சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக்கு பொருத்தமானதும், ஊகங்களுக்கு வித்திடுவதுமான வித்தியாசமான அட்டைப்படம். வாசிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் கைக்கடக்கமான அழகிய வடிவமைப்புடன் கூடிய இத்தொகுப்பு மட்டக்களப்பு 'மகுடம்' பதிப்பகத்தின் வெளியீடாகும். பாராட்டுகள்.
'ஒன்றே வேறே' என்னும் தலைப்பும் பொருள் பொதிந்தது . அட்டைப்படத்தில், குறியீட்டுப் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஆண் பெண் இருபாலார் போல, உலகீய வாழ்வில் ஒருமித்தே வாழினும், நீட்டப்பட்ட தனிக்கரங்கள் போல தமக்கென சுயமும் தனித்தன்மையும் கொண்டவர்கள் எனப் பொருள் கொள்ளலாம். எழுத்தாளர்கள் சமூகத்தில் காணும் விடயம் ஒன்றேயாயினும், அவரவர் படைப்பு முறைமையினால் வாசகருக்கு உணர்த்தப்படும் விதம் வேறானது எனவும், பிரச்சனைகள் எல்லோருக்கும் பொதுவானவையாக இருப்பினும், அதை அவரவர் எதிர் கொள்ளும் விதத்தில் வேறானவை எனவும் பொருள் கொள்ளலாம். ஆழமான தலைப்பு. சிறப்பு.