நனவிடை தோய்தல்: யாழ் இந்துக் கல்லூரியும் , அதனைப் பாதித்த கட்டடக்கலைக் கூறுகளும்! - வ.ந.கிரிதரன் -
- யாழ் இந்துக்கல்லூரி(கனடா) நடத்திய கலையரசி2023 மலருக்காக எழுதிய கட்டுரை.
நான் கல்வி கற்ற மூன்று கல்வி நிலையங்கள்; ஆரம்பக் கல்வி ,வகுப்பு ஏழு வரை - வவுனியா மகா வித்தியாயலம். எட்டு தொடக்கம் க.பொ.த (உயர்தரம்) வரை - யாழ் இந்துக்கல்லூரி. பட்டப்படிப்பு, கட்டடக்கலை - மொறட்டுவைப்பல்கலைக்கழகம். இவற்றை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. இவை பற்றிய நினைவுகள் எப்போதும் என்னுள்ளத்தில் பசுமையாக இருந்து வரும். இவற்றில் யாழ் இந்துக்கல்லூரியில் படித்தது என் பதின்ம வயதுகளில். நான் யாழ் இந்துவில் படித்த காலத்தில் நண்பர்களுடன் நகரில் சுற்றித்திரிவதில் அதிக ஆர்வம் மிக்கவனாகவிருந்ததால் பல பங்கு பற்றியிருக்க வேண்டிய நிகழ்வுகளில் பங்கு பற்றவில்லை. அதனை இப்பொழுது உணர முடிகின்றது. 'இந்து இளைஞன்' போன்ற யாழ் இந்துவின் பிரசுரங்கள் பலவற்றை இப்பொழுது பார்க்கும்போது ஒன்றை மட்டும் உணர முடிகின்றது. அங்கு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் ஈழநாடு, கண்மணி, சிரித்திரன் போன்றவற்றில் எழுதிக்கொண்டிருந்தேன். குறிப்பாக ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலரில் எழுதிக்கொண்டிருந்தேன். வாரமலரில் சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். ஆனால் யாழ் இந்துக்கல்லூரி வெளியிட்ட சஞ்சிகையில் எதனையும் எழுதவில்லை. இதற்கு இன்னுமொரு காரணம் எமக்குத் தமிழ் படிப்பித்த எவரும் இவ்விதமான சஞ்சிகைக்கு நீங்களும் எழுதுங்கள் என்று கூறியதுமில்லை. சஞ்சிகையினை அறிமுகப்படுத்தியதுமில்லை. அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். தமிழ் ஆசிரியர்கள் இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்களை இவ்விடயத்தில் அதிகம் தூண்ட வேண்டும். அது நல்ல ஆரோக்கிய விளைவுகளைத்தரும்.