நான் சந்தித்த ஆளுமைகள் : பேராசிரியர் ஆஷ்லி ஹல்பே (Ashley Halpe) & பிரிஜட் ஹல்பே (Bridget Halpe) (பகுதி இரண்டு) - ஜோதிகுமார் -
7அவர்களது ஒடுங்கிய சாப்பாட்டு மேசையில் மூவரும் நெருக்கமாய் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம்.
‘நுளம்பு தைலத்தை’ நீட்டி தேய்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு சிறிய குப்பியை என்னிடம் நீட்டினார்.
“கண்களைத் திறக்க முடியவில்லை...’’ என்று கூறியப்படி கண்களை இரு கரங்களாலும் அழுந்த தேய்த்து கொண்டே. அவள் வந்தாள.; “பித்தோவன், வேரியேசன் ஒஃப் பிரமத்தியூஸ் (Variation
Of Prometheus) என்று ஒரு ராகத்தை இசைத்துள்ளாரே...” கதை, அங்குமிங்கும் சுற்றி இறுதியில் அனிவத்த மாதா கோவிலில் வந்து நின்றது.
“அதை நீங்கள் பார்க்கத்தான் வேண்டும். எனது வீட்டு உதவியாள் என்னிடமிருந்து எதை எதையோ எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டாள். நீங்கள் இருவரும்தான் என் பெற்றோர்கள் என்று கூறுவாள். அப்படித்தான் நானும் பார்த்து வந்தேன். அவள் எடுத்துக்கொண்டு மறைந்ததும், யாருமில்லை. மாதாவிடம் சென்றுத்தான் முறையிட்டேன். மாதாவே, எனது நிலைமையை பார்த்தாயா என்றேன். இரண்டு நாட்களில் எங்கேயோ இருந்து வந்து சேர்ந்துவிட்டாள்”.
“எனது மகனுக்குத்தான் என்னை காட்ட முடியாது... நான் இல்லாவிடின் இவன்...”
“காலையிலிருந்து, ஒரே வேலை... பிறகு இரண்டு மணிக்கு பாடசாலை கூட்டம்... ஆறுமணிக்குத்தான் வீடு திரும்பினேன்... பிறகு அதிலிருந்து இப்போது ஏழு மணிவரை - கற்பித்தல். ம்... நான் செய்த பாவங்களுக்கெல்லாம் தான் இப்போது அனுபவிக்கின்றேன்...”.
“கண்ணை தேய்காதீர்கள்...”
“ம்... ம்... இப்போது நுளம்பு சரியாகிவிட்டது”
“நீங்கள் சாப்பிடுங்கள்... அவர் சாப்பிட மாட்டார்... அவரது பற்கள் அவருக்கு பிரச்சனை... இனி இந்த பற்கள் சரிவராது... இதை வீசிவிட்டு புதிதாக இம்ப்ளான்ட் செய்ய வேண்டியுள்ளது... கண்டியிலேயே பிரசித்தமான பல் நிபுணர் கூறியுள்ளார், எனக்கு இம்ப்ளான்ட் செய்யலாம், கட்டணமின்றி என. எனக்கு தேவையில்லை... நான் கட்டியுள்ள பற்களே, நன்றாக இருக்கின்றன... அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை... ஆனால் கூறிவிட்டேன்... எனக்கு பதிலாக எனது கணவருக்கு இதை செய்துவிடுங்கள் என்று... இதுதான் நான் இந்த குழந்தைக்கு இம்முறை அளிக்கும் பிறந்த நாள் பரிசு. இரண்டு இலட்சம் செலவாகுமாம்... ஆனால், அந்த டாக்டரின் பிள்ளைகளுக்கு நான் படிப்பிப்பதால், அவர் கட்டணமில்லை என்கின்றார்”.
“இனி படுப்பதற்கும் முன் அனைத்தையும் கழுவி, இந்த குழந்தையும் தூங்கப்போட்டு... பிறகு வேதம் ஓதி வணங்கி – அப்பாப்பா, எத்தனையை செய்வது...”.