சென்னை புத்தகத் திருவிழா – 2022! - குரு அரவிந்தன் -
புத்தகத் திருவிழா என்றதும் பழைய ஞாபகங்கள் சில காட்சியாய் மனதில் ஓடின. எங்க மாணவப் பருவத்தில் இலக்கிய ஆர்வமுள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் சிறிய நூலகம் கட்டாயம் இருக்கும். அது அறை முழுவதும் பரப்பப்பட்டும் இருக்கும், அல்லது ஒரு அலுமாரிக்குள் அடங்கியதாகவும் இருக்கும். பாடசாலைகளிலும், சனசமூக நிலையங்களிலும் நூலகங்கள் இருந்தன. வீடு தேடியும் இதழ்கள் வரும். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு எங்கள் அடையாளங்களை அழிக்க முற்பட்ட சம்பவங்களும் அவ்வப்போது நினைவில் வந்து போகும். வாசிப்பு என்பது எங்கள் பெற்றோர்கள் எங்களுக்குத் தந்த கொடைகளில் ஒன்றாகும்.
சின்ன வயதில் இருந்தே சிறுவர் இலக்கியத்தில் இருந்து சிறந்த புத்தகங்களை தேர்ந்தெடுத்துத் தந்ததால் நாங்களும் வாசிப்புக்கு அடிமையாகி விட்டிருந்தோம். அம்புலிமாமா, கண்ணன், மஞ்சரி, கல்கண்டு போன்ற புத்தகங்கள் கிடைத்தன. வளர்ந்ததும் எங்களுக்குப் பிடித்தமான நூல்களை நாங்களே தெரிவு செய்து வாசித்தோம். இன்று தமிழ் உலகறிந்த ஒரு எழுத்தாளனாக என்னை மாற்றியது வாசிப்பு மூலம் எனக்குக் கிடைத்த அனுபவமும் எனது வாசகர்களும்தான். இம்முறையும் சென்னை புத்தகக் காட்சியில் எனது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காட்சி, கனடிய எழுத்தாளரான எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கடைசியாக நடந்த சென்னை புத்தகக் காட்சியில் ‘என்ன சொல்லப் போகிறாய்?’, ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ ஆகிய இரண்டு நாவல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தன.