இசையும் அரசியலும் - இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடன் ஒரு நேர்காணல்! (பகுதி 2) - நேர்காணலைக் கண்டவர் - ஜோதிகுமார் -
- இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடனான (Mohammed Iqbal) இந் நேர்காணல் ‘பதிவுகள்’ இணைய இதழுக்காக எழுத்தாளரும், சமூக,அரசியல் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரினால் நடாத்தப்பட்டது. மொஹமெட் இக்பால் அவர்கள், இலங்கையின் அதிமுக்கிய இசை வல்லுநர்களில் ஒருவர். தனது பல்கலைக்கழக நாட்களில் விக்டர் ஹாரா (Victor Hara) இசைக்குழு என்ற இசைக்குழுவை நடத்தியவர். இன்றுவரை இதே இசைக்குழு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. ‘கிட்டார்’ இசைகருவியை இசைப்பதிலும், பாடுவதிலும் வல்லுநராக திகழும் திரு. மொஹமெட் இக்பாலின் பங்களிப்பு, இசை உலகில் குறிப்பிடத்தக்கது. இது போன்றே இந்நாட்டின் அரசியலிலும் இவரது இசையின் அதிர்வுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. - பதிவுகள்.காம் -
கேள்வி: சென்றமுறை 1815இன், கண்டிய ஒப்பந்தம் பற்றி கதைக்க நேரிட்டது. நீங்கள் உங்கள் பாடலில் போற்றியுள்ள, கெப்பட்டிபொல மொனரவிலவும், மேற்படி கண்டிய ஒப்பந்தத்துக்கு, ஒரு பங்குதாரியாகி கையொப்பமிட்டிருந்தாலும், ஆங்கிலேயர் அவ் ஒப்பந்தத்தை மதியாது, தங்கள் நலனை மாத்திரம் முன்னகர்த்தி, இந்நாட்டு மக்களின் நலனை காட்டிக் கொடுத்த போது, கெப்படிபொல இந்நாட்டின் முதலாவது சுதந்திர போராட்டத்தை தொடங்கினார் என்றும், அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 40,000 மக்களை கொன்று குவித்தே, அச்சுதந்திர போராட்டத்தை ஆங்கிலேயர் இந்நாட்டில் அடக்கினர் எனவும் நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆங்கிலேயர் இப்படி தாங்கள் செய்து கொண்ட கண்டிய ஒப்பந்தத்தை, தாங்களே மதிக்காததை இட்டு நீங்கள் என்ன கூறுவீர்கள்? ஏனெனில், முக்கியமாக, மேலோட்டமாக பார்க்குமிடத்து, ஆங்கிலேயர்கள்தாம் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் அல்லது நாகரிகத்தின் பிரதிநிதிகள் என்று பொதுவில் நம்பப்பட்டும் கூறப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றது. கூறப்படுகின்றது?