சிறுகதை: இருக்கிறன் - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ஆறுமுகத்தாற்றை முகம் பெருத்த யோசனையில் ஆழ்ந்திருந்தது. தலையை பக்கவாட்டில் குலுக்கிக் கொண்டார். எதுவும் தோன்றவில்லை. மேலும் கீழுமாகப் பார்த்து யோசித்தார். அதுவும் சரிவரவில்லை.ஒழுகும் மூக்கைப் துடைப்பதற்கு என்று கைகாவலாக வாயில் கவ்வும் கை லேஞ்சியையும் வழமை போல கவ்விக் கொண்டார். அவனிட்டையாவது கேட்டுப் பாப்பம்.
''டேய் தர்மா...தர்மா'' என்று அதட்டலாகக் கூப்பிட்டார். வேலையில் இருந்த செருக்கு இன்னும் மறையவில்லை.
கழிவறையில் இருந்து அவனும் அதே தொனியில் பதில் சொன்னான்.
''கொஞ்சங் இருக்க மாத்தையா. இந்தா வாறேங். இப்பதா வந்தது. நா கக்கூஸ் போ வாணாமா'' ?
''சரி சரி இருந்திட்டு வடிவா கையை கழுவிக் கொண்டு வந்து சேரு''என்று நக்கலாய் சொன்னவர் சிந்தனையைத் தொடர்ந்தார்.
அங்கை என்னை கூட்டிக் கொண்டு போவினமோ மாட்டினமோ. என்னட்டை ஊர் புதினங்கள் சொல்லவும், எங்கையும் கூட்டிக் கொண்டு போகவும் யார் இருக்கினம். எல்லாருக்கும் அவரவற்றை வேலை. இந்தக் கலி காலத்திலை அவையையும் குறை சொல்ல ஏலாது. ஓடியாடி நாலு காசு பாத்தாத் தானே இங்கத்த விலைவாசியிலை சீவிக்கலாம். எனக்கு ஏலுமான காலத்திலை அவைக்கு இவைக்கெண்டு எல்லாருக்கும் தானே ஓடித் திரிஞ்சனான். எத்தினை கியூவிலை நிண்டு சொந்த பந்தங்களுக்கு தேவையானதை செய்து குடுத்திருப்பன். எல்லாற்றை அன்பும் நான் ஓடித் திரியுற மட்டும்தான் போல. இப்ப என்னைக் கூட்டிக் கொண்டு போக கெஞ்ச வேண்டி இருக்கு.