தற்கொலை - தடுப்பதற்கான முயற்சி! - ஶ்ரீரஞ்சனி -
செப்ரெம்பர் 10, சர்வதேச தற்கொலைகள் தடுப்பு தினம்!
தப்பித்தலுடன் தொடர்பான ஒரு செயற்பாடே தற்கொலை எனலாம். தற்கொலை என்பது அந்த நேரத்திலான ஒரு முடிவாக இருப்பது மிகவும் அரிதாகும். பத்துப் பேரில் எட்டு பேர் தற்கொலை செய்துகொள்வதற்கான எண்ணம் இருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிகளைச் சிலருக்கோ அல்லது பலருக்கோ காட்டியிருப்பார்கள் என்கிறது ஆய்வு.மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்,தற்கொலை என்பது மனக்கிளர்ச்சியிலான ஒரு செயலாகத் தோன்றலாம், ஆனால் அது எழுந்தமானமானதொரு நிகழ்வல்ல, அது ஒரு செயல்முறை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தற்கொலையைப் பற்றிப் பேசுவதற்குப் பொதுவில் நாங்கள் எவருமே விரும்புவதில்லை. அத்துடன், எங்களுக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் அந்த முடிவுக்கு ஒருபோதும் வரமாட்டார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஆனால், எங்களுக்குத் தெரிந்தவர்களும் தற்கொலையைத் தெரிவு செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இருப்பினும், தற்கொலை ஒரு களங்கம் என்ற உணர்வு அல்லது அது அவமானம் தரும் ஒரு செயல் என்ற கருத்துப்பாடு எங்களைச் சங்கடப்படுத்துவதால் அதைப் பற்றி நாங்கள் அதிகம் கலந்துரையாடுவதில்லை. அதனால், ஒருவர் உணரும் வலி பற்றியோ அல்லது அவருக்குத் தேவையான உதவி பற்றியோ வெளிப்படையாகப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.
தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென ஒருவர் முடிவெடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உண்மையில், அந்தக் காரணங்கள் பற்றிய ஒருவரின் உணர்வுகள்தான், அந்தக் காரணங்களைவிட மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. குறித்த வலியைத் தொடர்ந்து தாங்கமுடியாது அல்லது நிச்சயமற்ற வாழ்வைத் தொடரமுடியாது என்பதின் அடிப்படையில் எழும் நம்பிக்கையின்மை, கையலாகதன்மை மற்றும் விரக்தி போன்ற தீவிரமான உணர்வுகளால் தற்கொலைதான் தீர்வென முடிவெடுப்பவர்கள் ஆட்கொள்ளப்படுகிறார்கள். வேறு சிலருக்கு சில வகையான மனநோய்களின் தாக்கம் தற்கொலை செய்வதற்கான தூண்டல்களைக் கொடுக்கக்கூடும். அப்படியான தூண்டல்களை குரல்களாக அவர்கள் கேட்கக்கூடும், அல்லது விம்பங்களாகப் பார்க்கக்கூடும்.