முதல் சந்திப்பு: கணினி தொழில் நுட்பத்தை புறக்கணித்து, கையால் எழுதிவரும் சிங்கப்பூர் படைப்பாளி இராம. கண்ணபிரான்! - முருகபூபதி -
பெரும்பாலான எழுத்தாளர்கள் நவீன கணினி தொழில் நுட்பத்தையே பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். ஆனால், அந்தப்பக்கமே செல்லாமல், மின்னஞ்சல் பாவனையும் இல்லாமல், தொடர்ந்தும் கையால் எழுதி, தபாலில் அனுப்பிக்கொண்டிருக்கும் எண்பது வயதை நெருங்கும் ஒரு படைப்பாளியை இந்தப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்!
உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளும் இல்லை. தமிழர்க்கென்று தனியாக ஒரு நாடும் இல்லையென தமிழ்த்தேசியவாதிகள் அடிக்கடி சொல்வதுண்டு. அவ்வாறு சொல்வதற்கு முக்கிய காரணமே, கல் தோன்றி, மண்தோன்றாக் காலத்துக்கு முந்திய இனமே தமிழ் இனம் என்ற வாய்ப்பாடுதான்.
சமகாலத்தில் உலகெங்கும் மனிதர்கள் அகதிகளாக தங்களுக்கென ஒரு வாழ்விடம் தேடி ஓடிக்கொண்டிருக்கையில், தமிழர்களுக்காக மாத்திரம் ஒரு நாடு வேண்டுமா..? என்றும் யோசிக்கத் தூண்டுகிறது.
இந்தப்பதிவில் வரும் இராம. கண்ணபிரான் தனது பத்து வயது பராயத்தில் தமிழ்நாட்டிலிருந்து கப்பல் மார்க்கமாக சிங்கப்பூர் வந்தவர். அங்கேயே ஆரம்பக்கல்வியை கற்று, தமிழ் ஆசிரியராகி, சிங்கப்பூர் எழுத்தாளர் என்ற பெருமையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.