தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (12) - காலவெளிக் கூம்புக்குள் ஒரு கும்மாளம்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 12 - காலவெளிக் கூம்புக்குள் ஒரு கும்மாளம்!
"கண்ணம்மா நீ ஓர் அலையடி"
"கண்ணா நான் அலையா?"
"கண்ணம்மா நீ ஒரு துகளடி"
"நான் துகளா கண்ணா?"
'கண்ணம்மா நீ ஓர் அலை. நீ ஒரு துகள். அலை-துகள் நீ கண்ணம்மா."
"கண்ணா, ஓரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான். நான், நீ, நாம் காணும் இந்த வான், இந்த கடல், இப்பிரபஞ்சம் எல்லாமே அலை-துகள்தான். சக்தி-பொருள்தான். இல்லையா கண்ணா?"
"கண்ணம்மா, சரியாச் சொன்னாய். நீ சரியாகவே இருப்பைப் புரிந்து வைத்திருக்கிறாயடி."
"உண்மைதான் கண்ணா. உன்னுடன் சேர்ந்து என் கவனமும் அறிவியலின் பக்கம் திரும்பி விட்டது. "
"பெரிய இப்பெருவெளிப்பிரபஞ்சமும் சரி, நுண்ணிய குவாண்ட உலகும் சரி கண்ணா பொருள்-சக்தியின் பிரதிபலிப்புத்தான். சக்தியின் நடனம்தான் நாம் காணும் இந்தபொருட் பிரபஞ்சம் கண்ணா."
"சக்தியின் நடனம். அற்புதமான சிந்தனை கண்ணம்மா. அடிப்படைத்துகளின் நடனமே இந்தப்பொருட் பிரபஞ்சம் கண்ணம்மா."
"கண்ணா, உண்மையில் காட்சிகளை உள்ளடக்கியதொரு திரைச்சித்திரமே இப்பிரபஞ்சம். இல்லையா கண்ணா?"
இவ்விதம் கூறிய மனோரஞ்சிதத்தைக் காதல் பொங்க நோக்கினேன்.
"நாம் வாழும் இப்பிரபஞ்சம் உண்மையில் திரைப்படமொன்றின் ஃபிலில் சுருள்போன்றதுதான் கண்ணம்மா."
"ஃபிலிம் சுருள் பல சட்டங்களை உள்ளடக்கியதுதான். அதைப்போல்தானே இப்பிரபஞ்சமும் காட்சிகளைக் கொண்டது கண்ணா?"
"கண்ணம்மா, மிக எளிமையாக, இலகுவாகக் காட்சிகளால் ஆனது இப்பிரபஞ்சம் என்று கூறிவிட்டாய். ஆனால் அதன் பின்னால் நவீன அறிவியலின் அற்புதமானதொரு கோட்பாடுள்ளது கண்ணம்மா."
"காட்சிகளுக்குப் பின் கோட்பாடா? அது என்ன கண்ணா?"