மூத்த எழுத்தாளர், பாரதி இயல் ஆய்வாளர் தொ. மு. சி. ரகுநாதன் நூற்றாண்டையொட்டி ஒரு நினைவுப்பதிவு! டிசம்பர் 31 நினைவுதினம்! - முருகபூபதி -
பெரும்பாலான எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களை எனது எழுத்துலக பிரவேசத்தின் பின்னர்தான் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றேன். இந்த சந்திப்புகளுக்கு தற்போது அரைநூற்றாண்டு காலமாகிறது. மேலதிக தகவல் நான் 1972 இல்தான் எழுத்து துறைக்குள் வந்தேன். அதற்கு முன்னர் இரண்டு தமிழக பிரபல எழுத்தாளர்களை முதல் முதலில் எனது ஐந்து வயதிலும், பத்துவயதிலும்தான் பார்த்திருக்கின்றேன். அவர்கள்தான் இலக்கிய சகோதரர்கள் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான். தொ.மு. சிதம்பர ரகுநாதன். மூத்தவர் தமிழ்நாடு பாளையங்கோட்டையில் மாவட்ட ஆட்சித் தலைவராகவிருந்த ஐ. ஏ. எஸ். அதிகாரி. கல்கி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் இரசிகமணி டி. கே. சி. ஆகியோரின் நெருங்கிய நண்பர். இவரது பெயரில் திருநெல்வேலியில் ஒரு வீதியும் இருக்கிறது. இந்த வீதியில் எமது உறவினர்கள் வசிக்கிறார்கள். அத்துடன் ஆனந்தவிகடன், கல்கி முதலான இதழ்களில் இந்திய திருத்தலங்கள் பற்றிய தொடர்களை எழுதியவர்.
இவர் இலங்கை வந்த சமயத்தில் காரைநகர் சிவன்கோயிலுக்கு ஈழத்து சிதம்பரம் என்ற பெயரையும் சூட்டினார். காங்கிரஸ் கட்சியிலிருந்த காந்தீயவாதி. இவரது தம்பிதான் தொ.மு. சிதம்பர ரகுநாதன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பில் 1956 ஆம் ஆண்டு நாடெங்கும் நடந்த பாரதி விழாக்களில் கலந்துகொண்ட எழுத்தாளர், பேச்சாளர். முதலில் காங்கிரஸ் தொண்டராகவிருந்தவர். பின்னர் இடதுசாரிச் சிந்தனையாளராக மாறியதுடன், சோவியத் இலக்கிய மேதை மாக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலையும் தமிழுக்கு மொழிபெயர்த்தார். இதனை பெரும்பாலான முற்போக்கு எழுத்தாளர்கள் படித்துவிட்டே தங்கள் இலக்கியப் பயணத்தை தொடர்ந்திருப்பார்கள்.