பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு. - குரு அரவிந்தன். -
பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய ஆழ்ந்த இலக்கிய அறிவு கொண்ட மனிதராக அவரை என்னால் இனம் காணமுடிந்தது. அதன்பின் அவரை அடிக்கடி ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் சந்திப்பதுண்டு, அவரது உரைகளையும் கேட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, அவரோடு ஒருநாள் உரையாடியபோது, அவர் தன்னை எனது வாசகன் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தார்.
ரொறன்ரோவில் நடந்த ஒரு நிகழ்வில், சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன் அவர்கள் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த எனது குறுநாவலான ‘நீர்மூழ்கி’ பற்றிக் குறிப்பிட்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கான வாசகர்களை உருவாக்கியிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். சிற்றுண்டி நேரத்தின் போது இவர் என்னிடம் நேரே வந்து கைகொடுத்து தன்னை அறிமுகப்படுத்தி, நீங்கள் தான் அந்தக் கதையின் ஆசிரியர் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். விகடன் பவழவிழா ஆண்டு மலரில் உங்கள் ‘விகடனும் நானும்’ என்ற கட்டுரையை வாசித்திருந்தேன், அதன்பின் தான் ஆர்வம் காரணமாக இந்த நீர்மூழ்கிக் கதையை வாசித்தேன் என்றார். கதையின் முக்கியமான இடங்களை அப்படியே எடுத்துச் சொன்னார். 2001 ஆம் ஆண்டு விகடனில் வெளிவந்த கதையை எப்படி நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன்.