சீமான் பத்திநாதனின் மூன்று நாவல்களை முன்வைத்தொரு பார்வை - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ஒரு எழுத்தாளரை பெயராலும் பெற்ற புகழாலும் அறிந்தபின் அவரது படைப்பினை வாசிப்பதைவிட , படைப்பினை வாசித்தபின் உருவாகும் ரசனையால் படைப்பாளி யார் என தேடி அறிதலே அப்படைப்புக்கு மகிமை தரும். இதனை அண்மையில் உணர்த்திய நாவல் சீமான் பத்திநாதன் பர்ணாந்து அவர்களின் 'குஞ்சரம் ஊர்ந்தோர் ' . இந்நாவலை வாசிக்கும் வரை எனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவரது எந்தப் படைப்பையும் வாசித்ததும் இல்லை. ஏன் பெயரைக் கூட அறிந்தது இல்லை. இந் நாவலின் வடிவில் எழுத்தால் மட்டுமே அறிமுகமானவர். ஆனால் வாசிக்க கையில் எடுத்தது முதல் இறுதிவரை சோர்வில்லாது வாசிக்க வைக்கும் இயல்பான கதையோட்டம்,எளிமையான நடை, வேஷங்கள் அற்ற நிஜமான மனிதர்கள் எழுத்தாளர் யாரென்று தேட வைத்தன.
இவரது படைப்புகளில் வங்காலை பிரதேசத்தின் மண்மணமும், கடல் சார்ந்த மனிதர்களின் வாழ்வியலும், பிரதேச வழக்கும், கலைவடிவங்களும்முன் அறிந்திராத காட்சிப் புலத்தை கண்முன்னே கொண்டு நிறுத்தின. வாசித்த நாள் முதலாக ரசித்ததை எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் அறிமுகமில்லாத அந்தக் களமும், காலமும், கருப்பொருளும் பற்றிய எனது தெளிவின்மையால் எண்ணம் உடனடியாகக் கைகூடவில்லை.
இதன் பின் சீமான் அவர்களது 'திசையறியாப் பயணங்கள்', 'தோற்றுப் போனவர்கள்' ஆகிய நாவல்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது படைப்புகளில் பொதுப் பண்புகள் சில மனதில் ஆழப் பதிந்தன. வாசகர் மத்தியில் அதிகம் கவனம் பெறாத கடல் சார்ந்த பரதவ சமூகத்தினரின் அன்றாட வாழ்வியல் சோகங்கள்; பல வஞ்சனைகள், சில நட்புகள் தியாகங்கள்; நடைமுறை யதார்தங்களுடன் இயல்பாக வெளிப்படுத்தப் படும் பெண்கள்; மதம் இம்மக்களின் வாழ்வியலில் செலுத்தும் பங்கு ஆகியன.