முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் சிங்கள மக்களும் இணைவு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்துவோம்! - வ.ந.கிரிதரன் -
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவாக...
முள்ளிவாய்க்கால் நினைவுகள்
மீண்டும் எமைத் துரத்துகின்றன.
அன்று மக்கள் எழுப்பிய ஓலங்கள்
இன்றும் காதுகளில் ஒலிக்கின்றன.
துயரங்களைக் காவி வரும்
யுத்தங்கள் அற்றவொரு உலகை
யாசித்து நிற்க
எம்மை அவை தூண்டுகின்றன.
எம்மை அவை எச்சரிக்கின்றன.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை ஏந்துவோம்!
முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கான
முள்ளிவாய்க்கால் வலிகளுக்கான,
முள்ளிவாய்க்கால் நீதியினை வேண்டுவோம்!
பெயரடை மற்றும் தமிழின் புணர்ச்சி விதிகள்: சில சிந்தனைகள்! - மதுரன் தமிழவேள் (தவ சஜிதரன்) -
சின்னக் கலைவாணர் X சின்ன கலைவாணர்: எது சரி? சின்னத்தாய் வல்லொற்றொலி விடுத்துச் சின்னதாய் ஆவாளா? கவிஞர் மகுடேசுவரனின் கட்டுரையை முன்வைத்துச் சில இலக்கணச் சிந்தனைகள்!
அண்மையில் தினமலர் இதழில் கவிஞர் மகுடேசுவரன் ஓர் இலக்கண விளக்கக் கட்டுரை எழுதியிருந்தார். ‘சின்னக் கலைவாணர்’ போன்ற சொற்றொடர்களில் வல்லொற்று மிகல் ஆகாது; சின்ன கலைவாணர் என்றே எழுத வேண்டும் என்பது அச் சிறுகட்டுரையின் சாரம்.
அதனை முகநூலிலும் பகிர்ந்திருந்தார்.
மறைந்த நடிகர் விவேக் பெயரில் அவர் வாழ்ந்த தெருவுக்குத் தமிழக அரசு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என்று பெயர் சூட்டியிருக்கிறது. இது பிழை என்பதைச் சுட்டிக்காட்டியே கவிஞர் கட்டுரை வரைந்திருந்தார்.
பொதுவெளியில் இடம்பெறும் தமிழ்ப்பிழைகளைச் சுட்டித் திருத்துவது; அவற்றின் இலக்கண வரம்புகளை எடுத்துரைப்பது என்றவாறு கவிஞர் செய்துவரும் அருந்தமிழ்த் தொண்டின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரை அது.
அதன்கண் அவர் விளக்கும் பெயரெச்சம் பற்றிய பொதுவான இலக்கண விதி பற்றி ஐயுற ஏதுமில்லை.
பெரிய, கரிய, சிறிய, அரிய, வறிய, நல்ல, வல்ல முதலான அகர ஈறு கொண்ட பெயரெச்சங்களை அடுத்து வருஞ்சொல், வல்லின எழுத்தில் தொடங்கும்போது ஒற்று மிகாது என்பதே அந்த விதி.
‘நல்ல தமிழ்’ என்றெழுதுவதே நல்ல தமிழ். அல்லாமல் நல்லத் தமிழ் என்றெழுதின் அது பொல்லாத்தமிழ். ஐயமில்லை.
ஆனால் இந்த விளக்கத்தின் முடிவாகச் ‘சின்னக் கலைவாணர்’ என்பதைச் ‘சின்ன கலைவாணர்’ என்றே எழுத வேண்டும் – ‘சின்ன’ என்ற பெயரெச்சத்தை அடுத்து ‘க்’ என்ற வல்லின ஒற்று அங்கு வரலாகாது – என்று அவர் சொல்கிறபோது இயல்பான மொழி பழகிய மனது ஏனோ தயக்கம் கொள்கிறது.
தமிழ் விக்கி பற்றி....
எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது விஷ்ணுபுரம் குழுவினர் இணைந்து உருவாக்கிய தமிழ் விக்கி தளத்தைப் பார்த்தேன். இதனையொரு தகவல் சார்ந்த இணைய இதழாகத்தான் பார்க்க முடியுமே தவிர விக்கிபீடியாவின் தமிழ் வடிவமாக ஒருபோதுமே பார்க்க முடியாது என்பதை இதனைப்பற்றிய அறிமுகக் குறிப்புகளிலிருந்து உணர முடிகின்றது.
இத்தளத்தில் 'வாசகர்களே திருத்தவும் பங்களிக்கவும் வாய்ப்புள்ள பொதுத்தளம் ஆயினும் மூத்த படைப்பாளிகளும் கல்வித்துறை ஆய்வாளர்களும் அடங்கிய ஆசிரியர் குழுவால் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனைக்குழுவின் ஒப்புதலுடன்தான் திருத்தங்களும் பதிவுகளும் வெளியிடப்படும்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றே இத்தளத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் தடைக்கல்லாக நிற்கப்போகின்றது.
தற்போது நடைமுறையிலிருக்கும் விக்கிபீடியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமே யாரும் தமக்குத் தெரிந்த வற்றை எழுதலாம், தவறுகளை யாரும் திருத்தலாம் என்னும் நடைமுறைதான். அதனால்தான் பலர் உலகின் பல பாகங்களிலிருந்தும் பங்களிக்கின்றார்கள். இவர்களின் நடைமுறையின்படி இவ்விதமான செயற்பாடு இருக்காது. இதழொன்றை நடத்துவதைப்போல் நடத்த எண்ணியிருக்கின்றார்கள். முதலில் ஆலோசனைக்குழுவில் உள்ளவர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் அல்லர். தாம் அறிந்ததன் அடிப்படையில், தமக்குச் சார்பாக சரியென்று படுவதை மட்டுமே வெளியிடுவார்கள். இந்நிலையில் இக்குழு சார்பானவர்கள் அல்லது அவர்கள் ஏற்றுக்கொண்டவர்கள் பற்றிய தகவல்களே மிக அதிகமாக இடம் பெறும். விக்கிபீடியாவின் வெற்றிக்குக் காரணமான அதன் அடிப்படை அம்சங்களையெல்லாம் மறுக்கும் 'தமிழ் விக்கி' என்னும் தளத்தின் பெயரில் விக்கி என்னும் சொற்பதம் இருப்பதே பொருத்தமற்றது.
இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்! - குரு அரவிந்தன், தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம். -
பெரும் புலவர் முகமட் ஹன்ஸீர் அவர்கள் மே மாதம் 5 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு கனடாவில் இறையடி சேர்ந்தார். கனடா தமிழ் இலக்கிய உலகிற்கு இவரது மறைவு பெரும் இழப்பாகும். சிறந்த கல்வியாளரான இவர் மதங்களைக் கடந்து கனடாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். கனடாவில் இருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகை ஆசிரியராகக் கடமையாற்றிய போது, மரபுக் கவிதையை வளர்ப்பதற்காக அந்தப் பத்திரிகையில் அதற்காக ஒரு பக்கத்தை ஒதுக்கியிருந்தார். புலம்பெயர்ந்து கனடா வந்த இவர், கவிதை எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
சிறந்த எழுத்தாளராக, கவிஞராக, பேச்சாளராக இருந்த இவர் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் ஆகியவற்றின் அங்கத்தவராகவும், கவிஞர் கழகத்தின் செயலாளராகவும் கடமையாறியவர். 'யமலோக நீதிமன்றம்,' 'திருவள்ளுவர் வரலாற்று ஆய்வும் திருவள்ளுவர் திருக் காவியமும்,' 'திரை இசை மெட்டில் புதிய பாடல்கள்' போன்ற பத்திற்கும் மேற்பட்ட பல நூல்களைக் கனடாவில் வெளியிட்டவர். கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அவருடைய இலக்கிய ஆளுமைக்காக அவரை நாங்கள் பல தடவைகள் கௌரவித்திருந்தோம்.
நீண்ட காலமாகவே எல்லாரோடும் நட்பாகப் பழகி வந்தார். 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் வெளியிட்ட போது, வெளியீட்டுரை நிகழ்த்திய இவரிடம் இருந்து முதற் பிரதியை நான் பெற்றுக் கொண்டேன். 2017 ஆம் ஆண்டு அகணி சுரேசின் ‘இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்’ என்ற நுல் வெளியீட்டின் போது மிகவும் சிறப்பாக நயவுரை வழங்கி இருந்தார். எனது நூல்கள் வெளியிடப்பட்ட போதும் அதில் கலந்து சிறப்பித்தது மட்டுமல்ல, முரசொலியிலும் அதைப்பற்றி எழுதியிருந்தார்.
இரங்கலுரை: மகாஜனா தந்த மயிலங்கூடல் நடராஜன்! - குரு அரவிந்தன், தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.-
பிள்ளையினார் நடராஜன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி பிறந்த இவர், 2022 மே மாதம் 12 ஆம் திகதி எம்மைவிட்டுப் பிரிந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் கீரிமலைக்கு அருகே உள்ள மயிலங்கூடல் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனாவார். திருமணமானபின் நாயன்மார்காட்டில் வசித்து வந்தார். ஆரம்ப கல்வியை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பெற்றார். மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவனாகவும், அதன்பின் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தாலும், இவர் எல்லோராலும் அறியப்பட்ட சிறந்த இலக்கிய ஆளுமை கொண்டவராக இருந்தார். காங்கேசன் என்ற புனைப் பெயரில் பல ஆக்கங்களை வெளியிட்டிருக்கின்றார். நான் தமிழ் மன்றச் செயலாளராக இருந்த போது மகாஜனன் இதழின் தொகுப்பாசிரியராக இவர் இருந்தார். கல்லூரியில் சின்னப்பா இல்லத்தின் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார். அதன்பின் யாழ். இந்துக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றிருந்தார்.
இலக்கியத் தொடர்பு காரணமாக இவர் நன்கு அறிமுகமானவராக இருந்தார். ‘ஈழத்தமிழர்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை 2012 ஆம் ஆண்டு யூன் மாதம் மைலங்கூடல் பி. நடராஜன் என்ற பெயரில் இவர் வெளியிட்ட போது எனக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். இந்த நூலுக்காகப் பழைய ஆவணங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து மிகவும் பெறுமதி மிக்க நூலாக உருவாக்கி இருந்தார். யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவலிங்கராஜா இந்த நூலை வெளியிட்டு வைத்தார். அடுத்த தலைமுறையினருக்கான பல அரிய விடயங்கள் இந்த நூலில் அடங்கி இருக்கின்றன. பரணி பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்திருந்தது. பல்லாயிரம் மைல்கள் கடந்து போகமுடியாவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தேன்.
அதன் பின் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் சிறுவர் கவிதைகள் அடங்கிய ‘குழந்தைக் கவிதைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு ஒன்றையும் மகாஜனக் கல்லூரியின் சார்பில் தொகுத்து வெளியிட்டிருந்தார். அப்பொழுதும் என்னோடு தொடர்பு கொண்டு எனது சிறுவர் கவிதைகளைக் கேட்டு வாங்கி, அந்த நூலில் தொகுத்துப் பிரசுரித்திருந்தார். எனது 4 பாடல்களை அத்தொகுப்பில் இடம்பெறச் செய்தார். இவர் சிறுவர் பாடல்கள் அடங்கிய தனது இரண்டு நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். பாவலர் துரையப்பாபிள்ளையின் சிந்தனைச் சோலையை மீள்பதிவு செய்தது மட்டுமல்ல, ‘பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு மலர்’ சிறப்பாக வெளிவருவதற்கும் இவர் முக்கிய காரணமாக இருந்து செயற்பட்டார்.
செவ்வியலிசை - பாரதிகள் ஐவர்!
- இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத் தவற விட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஓர் ஆவணப்பதிவாக இங்கு பதிவு செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
சிவகாமி, யாழினி இணைந்து எழுதிய `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’ - கே.எஸ்.சுதாகர் -
இந்தப் புத்தகம் `மறுயுகம்’ வெளியீடாக (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 2019 ஆம் ஆண்டு வந்திருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் விடுதலை வேண்டி, விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த சிவகாமி, யாழினி ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’. எல்லாளன் ராஜசிங்கம்.(ரஞ்சித்), மக்கள்நல மருத்துவ சங்கத்தலைவர் இசிதோர் பெர்னாண்டோ (புதுக்குடியிருப்பு) ஆகிய இருவரும் நூலுக்கு முன்னரை எழுதியிருக்கின்றார்கள்.
1984 இல், இந்தியாவில், ரெலோவில் (TELO)---தமிழ் ஈழ விடுதலை இயக்கம்--- ஏற்பட்ட உட்கட்சிப்பிளவு காரணமாக 13 ஆண்களும் 30 பெண்களும் இயக்கத்திலிருந்து விலகிக் கொள்கின்றார்கள். அந்த நேரத்தில் எல்லாளன் ராஜசிங்கம், சிவகாமியைச் சந்திக்கின்றார். அது முதல் கொண்டு, சிவகாமியைப் பற்றிய தகவல்களை இங்கே பதிவு செய்கின்றார் அவர். தோழர் தோழிகளுக்கிடையேயான தொடர்புகள் தடைப்பட்டமையும், 2016 ஆம் ஆண்டில் எல்லாளன் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்புகள்’ புத்தகம் வெளிவந்த பின்னர் மீண்டும் தொடர்புகள் துளிர்விட்டதையும் எல்லாளன் தனது முன்னுரையில் பதிவு செய்கின்றார். சிவகாமி இயக்கத்திலிருந்து விடுபட்டதன் பிற்பாடு, அவரை இசிதோர் பெர்னாண்டோ அறிந்து கொள்கின்றார். 1983 இனக்கலவரத்தின் பிற்பாடு, மருந்து உட்பட அத்தியாவசியமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது - இசிதோர் பெர்னாண்டோவும் வேறு சிலருமாகச் சேர்ந்து மருந்தகம் (பார்மஷி) ஒன்றைத் திறக்கின்றார்கள். இந்த மருந்தகத்தை நிர்வகிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டவர் தான் சிவகாமி என்கின்றார் இசிதோர் பெர்னாண்டோ . எமது இன விடுதலைப் போராட்டத்தில் பல பெண்கள் இணைந்து போராடியிருக்கின்றார்கள். ஆனால் அவர்களைப்பற்றிய பதிவுகள் பெரிதாக வந்ததில்லை. அவர்கள் தாங்களாக முன்வந்து எழுதினால் தான் உண்டு என்ற நிலைமை. இங்கே சிவகாமி, யாழினி இருவரும் – போராட்டம் பற்றியும், உட்கட்சிப் பூசலில் ஏற்பட்ட அநீதி அவலங்களைப் பற்றியும் சிலவற்றைச் சொல்லியிருக்கின்றார்கள். புத்தகத்தின் பெரும்பகுதியை சிவகாமிதான் எழுதியிருக்கின்றார்.
கலாநிதி அகிலன் கதிர்காமரின் உரையும், அண்மித்த இலங்கை நெருக்கடிகளும்! - ஜோதிகுமார் -
இன்றைய, இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, தற்போதைய எதிர்ப்பலைகளுக்கு எதிராக அவசர கால சட்டத்தை அமுல்படுத்தும் மாபெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு இட்டு சென்றுள்ளது. எதிர்ப்பலைகள், அவசரகால சட்டம், ராணுவமயம், சுடுவதற்கான உத்தரவு – என தொடர்ந்த அரசியல் சுவாத்தியம் - இப்போது ரணிலின் பதவியேற்புடன் தன் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. இம்முதற்கட்டம் எவ்வழியில் தன் இரண்டாம் கட்டத்தை எய்தும் என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது. இந்நெருக்கடியானது, கடந்த காலத்தின் 1953 இன் பொருளாதார நெருக்கடியுடனும் அதையொட்டி எழுந்த 1953 இன் ஹர்த்தாலுடனும் ஒப்பிட்டு கதைக்கப்பட்டாலும், சாராம்சத்தில் இவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டே காணக்கிட்டுகின்றன – (இவை இரண்டிடை, பல ஒற்றுமைகள் காணப்படினும்). 1953 இல் டட்லி சேனாநாயக்காவின் அரசு, அரிசியின் விலையை மூன்று மடங்கால் அதிகரித்தது. – 25 சதத்தில் இருந்து 70 சதம் வரை. இன்றும் ஏறக்குறைய நிலைமை அப்படியே. இதற்கான காரணங்கள், இன்றை போலவே, அன்றும் சர்வதேச அளவில், வெவ்வேறு விதமாய், வெவ்வேறு விகிதாசாரங்களில் எழுந்திருந்தன. இருந்தும், இன்றைய நெருக்கடிக்கான காரணங்களாய் கொரோனாவை அல்லது உக்ரைன்-ரசியப் போரால் விளைந்த சர்வதேச எண்ணெய் நெருக்கடியை அல்லது ஒரு சுற்றுலா நெருக்கடியை காரணமாக தூக்கிப்பிடிப்பது அரச அல்லது அரச நிர்வாகிகளுக்கு சகஜமாகி விட்டது. உதாரணமாக, அண்மித்த ஓரு நேர்காணலில் கூட எமது முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் கப்ரால் திட்டவட்டமாக பின்வருமாறு கூறியிருந்தார்:
“தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்று பிரதான காரணியாக அமைந்தது. கொரோனா தொற்றுக்காக பல மில்லியன்கள் நிதியை மத்திய வங்கி செலவிட்டுள்ளது”. (வீரகேசரி நேர்காணல் : 01.05.2022) (இவர் புரியாமல் பேசுகின்றாரா, அல்லது அனைத்தையும் தெரிந்து கொண்டு “விடயங்களை காப்பாற்ற” இன்றைய ஏனைய ‘ஆளுமைகள்’ போல நடிக்க வருகின்றாரா என்பது வேறு விடயம்). இருந்தும், இப்படியாக பட்டியலிடப்படும் இந்நெருக்கடிகள் அனைத்தும் ஏதோ ஒரு வழியில் ஏனைய நாடுகளையும் பாதிக்கவே செய்தன என்பதும், அவை அவற்றிலிருந்து ஏதோ ஒரு வழியில் மீளவே செய்தன என்பதும் குறிக்கத்தக்கது. (அது இந்தியாவாக இருக்கட்டும் அல்லது இத்தாலியாக இருக்கட்டும்).
செ. சுதர்சனின் கவிதைகள் இரண்டு: கேலிப் பட்டாசும் கோவணக் கட்டியும்! & நீல அல்லியும் செங்காந்தளும்!
கவிதை 1: கேலிப் பட்டாசும் கோவணக் கட்டியும்!
நான் ஓர் கனாக் கண்டேன்
தோழி...!
சிங்கத்தின் வாயிலே
மதுப் போத்தலும்
நீண்டு நிமிர்ந்த அதன் வாலில்
ஈராயிரம் ரூபா நோட்டும்
தூக்கிய கரத்தில்
தாக்குக் கம்புகளும்
இருப்பதாக
நான் ஓர் கனாக் கண்டேன் தோழி!
காலிக் கடலின் கரையைத் தாக்கிய
சிங்கக் கூலிகள்
உயரும் குரலின்
கூடாரங்களைத் தின்றொழிப்பதாயும்
காக்கிகளின் காவலோடும்
துப்பாக்கி அரணோடும்
மன்னரின் ஆசியோடும்
காட்டேரிகள்
கடலோரப் புயல்களை
அடித்தும் உதைத்தும் கொழுத்தியும்
முடிப்பதாயும்
எனினும், அது முடியாததாயும்
நான் ஓர் கனாக் கண்டேன் தோழி!
(முகநூல் அஞ்சலி) நான் வளர்ந்த கருப்பையை நான் இழந்து போனேன்! மயிலங்கூடலூர் பி நடராசன் (ஆடலிறை) 14.10.1939 - 12.05.2022 - நா.சபேசன் -
என்னுடைய 'குரு' மயிலங்கூடலூர் பி நடராசன் நேற்று யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவர் காலமாகும் போது எண்பத்திரண்டு வயது. இளவாலைக்கும் கீரிமலைக்குமிடையில் இருக்கும் மிகச் சிறிய கிராமமான மயிலங்கூடலை ஈழத்து இலக்கிய உலகில் நிரந்தரமாய் பதிந்துவிட்ட நடராசன் ஆசிரியரை எனது மிகச் சிறிய வயதிலிருந்தே அறிவேன். அவரது'கூடலகம்' வீட்டைச் சூழ எனது தந்தை வழி உறவினர்கள் இருந்ததும், அருகிலிருக்கும் வைரவர் ஆலயம் தாய்வழி உறவினர்கள் சிலருக்கு குல தெய்வமாக இருப்பதும் மயிலங்கூடலுக்கு அடிக்கடி செல்ல காரணங்கள். மயிலங்கூடல் வைரவர் ஆலயத்தின் பொங்கல், மடையின் போது ஆசிரியரை கண்டுள்ளேன்.
கிழக்கிலங்கையிலிருந்து மாற்றலாகி 1971ஆண்டின் பிற்பகுதியில் அவர் மகாஜனக் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக வந்தபோது, நான் மூன்றாம் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தேன். அவரது வயதையொத்த ஆசிரியர்கள் லோங்ஸோடும் சேர்ட்டோடும் பாடசாலைக்கு வருகிறபோது, விஞ்ஞான ஆசிரியரான அவரது நஷனலும் வேட்டியும்- அதை அவர் அணிந்திருக்கும் நேர்த்தியும் தனித்துவமாக காட்டின.
ஆசிரியராக வந்தவுடனேயே பாடசாலையின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பழைய மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராக ஆ சிவநேசச்செல்வனோடு இணைந்து, பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழாவை மூன்று நாட்கள் கொண்டாடியதிலும், ஈழத்தின் பெறுமதிமிக்க இலக்கிய மலர்களிலொன்றாக கருதப்படும் 'பாவலர் துரையப்பா பிள்ளை நூற்றாண்டு மலரை' வெளிக் கொணர்ந்ததிலும் ஆசிரியரின் பெரும் உழைப்பும் இருந்தது. இதே காலத்தில் கவிஞர் நுஃமானோடு இணைந்து மஹாகவி நூல் வெளியீட்டு குழுவிலும் பணியாற்றினார். மகாஜனாவின் சின்னப்பா இல்லப் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.
மயிலங்கூடலூர் பி.நடராசன் மறைவு!
எழுத்தாளர் மாஸ்டர் சிவலிங்கத்தின் மறைவையடுத்து இன்னுமொருவரின் மறைவும் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு முக்கியமானதோர் இழப்பு. எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்கள் மே 12இல் மறைந்தார் என்னும் செய்தியினை எழுத்தாளர் ஆதவனின் முகநூற் பதிவு மூலம் அறிந்துகொண்டேன். உண்மையில் மனம் வருந்தினேன். இவரை நான் சந்தித்ததில்லை. இவரது எழுத்துகள் மூலம் அறிந்திருக்கின்றேன். எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது என் தம்பி பாலமுரளி இவரைச் சந்தித்து, அ.ந.க.வின் சில படைப்புகளின் பிரதிகளைப்பெற்று அனுப்பியிருந்தான். அதனை இத்தருணத்தில் நினைவுகூர்கின்றேன்.
மாணவர்களை எழுதுவதற்குத் தூண்டிய இவரது ஆர்வத்தையும், அதற்கான உழைப்பினையும் அவதானித்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக்கொள்வதுண்டு 'இவரது மாணவர்களில் ஒருவனாக நானும் இருந்திருக்க வேண்டுமென்று'. இவரைப்போன்ற ஆசிரியர்களின் கீழ் கற்பதென்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்பேன்.
இவர் பண்டிதர் கதிரேசர்பிள்ளையிடம் (எழுத்தாளர் ஆதவனின் தந்தையார்) தமிழ் இலக்கணம் கற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்பு பன்முகப்பட்டது.
(முகநூல் அஞ்சலி) காலம் சென்ற மாஸ்டர் சிவலிங்கம் சில மனப்பதிவுகள் ! - பேராசிரியர் சி.மெளனகுரு -
மாஸ்ட்ர் சிவலிங்கம் காலமானார் எனும் செய்தியை முக நூலில் நேற்றுப் பார்த்தேன், அவசியம் சென்று பிரியாவிடை கூறவேண்டிய மனிதர் அவர், செல்லும் நிலையில்் நான் இல்லை , அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளாமை மிகுந்த வருத்தமே. பழுத்த ஓலைகள் விழுகின்றன, காலத்தின் நியதி அது.
மாஸ்டர் என்ற சொல் ஒருகாலத்தில் மட்டக்களப்பில் சிவலிங்கம் அவர்களையே குறிக்கும் சொல்லாக இருந்தது. இத்தனைக்கும் அவர் ஓர் பாடசாலை மாஸ்டர் அல்ல. பாடசாலையில் படிப்பிக்காத அவருக்கு பல்நூற்றுக் கணக்கான மாணவர்கள் இருந்தனர். மாஸட்ராக அல்ல மாமாவாக அவர் குழந்தைகளின் உளத்தில் கொலு வீற்றிருந்தார். அவரது மறைவு இயற்கையானது. அவர் தனது 89 ஆவது முது வயதில் காலமானார். இருந்திருந்தால் அடுத்த ஆண்டில் அவரது 90 வயதைக் கொண்டாடியிருப்போம்.
மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை அனைவரும் ஒரு கதைசொல்லியாக அதிலும் சிறுவர்களுக்கான கதைசொல்லியாக மாத்திரமே பார்க்கிறார்கள். முக நூலில் அப்படியொரு பிம்பமே உருவாகி இருந்தது. நான் அறிந்த மாஸ்டர் சிவலிங்கம் இன்னும் வித்தியாசமானவர். அவருடனான முதல் சந்திப்பு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அப்போது நான் வந்தாறுமூலை மத்தியகல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். காற் சட்டை போடும் . வயது 13. எட்டாம் வகுப்பு அன்று . பாடசாலை பாரதிவிழா கொண்டாடுகிறது. அத்ற்கு அவர்கள் அன்றைய மட்டக்களப்பின் பிரபல பேச்சாளர்களான பிரபலமான செ, இராசதுரை, கமலநாதன் ( அவர் வித்துவான் ஆகாதகாலம் அது) எஸ் பொன்னுதுரை ஆகியோரையும் அவர்களுடன் சிவலிங்கத்தையும் அழைத்திருந்தனர். , முன்னவர் இருவரும் தமிழரசுககட்சி மேடைகளில் விளாசித் தள்ளி மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். எஸ் பொன்னுத்துரை இன்னொரு விதத்தில் பிரபலமானவர். அவர்கள் அனைவரும் சிவலிங்கத்திலும் வயது கூடியவர்கள். சிவலிங்கத்தை மட்டக்களப்பு அதிகம் அறியாத காலம் அது. சிவலிங்கம் அப்போதுதான் தமிழ்நாட்டு வாசம் முடித்து மட்டக்களப்பு திரும்பியிருந்தார். தமிழ்நாடு சென்று வருவது என்பது அன்று பெரிய விடயம். சிவலிங்கம் தனது பேச்சில் தனது தமிழ் நாட்டு அனுபவங்களைச் சுவையாக கூறினார். அவர் அப்போது ஒரு மிமிக்கிறிக் கலைஞராக வளர ஆரம்பித்த காலம் அது. அவர் அன்றைய முதலமைச்சர் காமராஜர்போல , திராவிடக் க்ழக தலைவர் ஈ வே ரா போல, திராவிட முன்னேற்ரக்கழக தலைவர் அண்ணாதுரைபோல , கருணாநிதிபோல. சினிமா நடிகர் என் எஸ் கிருஸ்ணன் போல , சிவாஜி கணேசன் போல தனது குரலை மாற்றி மாற்றி செய்து அவர்கள் பேசுவதுபோல பேசிக் காட்டினார். சிறுவர்களாகிய எங்களுக்கு ஒரே ஆச்சரியம். குசி சந்தோசம் கைதட்டல் பெரு வியப்பு.
அஞ்சலிக்குறிப்பு: கதைசொல்லிக் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் மறைந்தார்! - முருகபூபதி -
மகாபாரதக் கதையை வியாசர் முதல் ஜெயமோகன் வரையில் பலரும் எழுதியிருக்கின்றனர். ஜெயமோகன் வெண்முரசு என்னும் தலைப்பில் ஆயிரக்கணக்கான பக்கங்களில் தொடர்ந்து எழுதினார். 2014 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து வீடு திரும்பியதும், தனது குழந்தைகளுக்கு மகாபாரதக் கதையைச் சொல்லி, அதில் வரும் பாத்திரங்களின் இயல்புகளையும் விபரித்திருக்கிறார்.
அவர் கதைசொல்லும் பாங்கினால் உற்சாகமடைந்த அவரது குழந்தைகள், " அப்பா, இந்தக்கதையையே இனி எழுதுங்கள்." என்று வேண்டுகோள் விடுத்ததும், அவர் அன்றைய தினமே மகாபாரதக்கதைக்கு வெண்முரசு என்று தலைப்பிட்டு ஒவ்வொரு பாகமும் சுமார் 500 பக்கங்கள் கொண்டிருக்கத்தக்கதாக எழுதினார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பிய காவியம்தான் மகா பாரதம்.
இலங்கையில் ஒரு காலகட்டத்தில் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மகா பாரதக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்த இரத்தினம் சிவலிங்கம் என்ற இயற்பெயர்கொண்ட மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் நேற்று முன்தினம் 11 ஆம் திகதி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி எம்மை வந்தடைந்தபோது மகாபாரதம்தான் மனக்கண்ணில் தோன்றியது. இறுதியாக அவரை கடந்த 2019 ஆம் ஆண்டு எழுத்தாளர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுடன் சென்று பார்த்தேன். அச்சமயம் அவர் சிறுநீரக உபாதையினால் சிகிச்சைக்குட்பட்டிருந்தார். தொடர்ந்தும் அவரை வருத்த விரும்பாத காலன் தற்போது அவரை கவர்ந்து சென்று, நிரந்தர ஓய்வு கொடுத்துவிட்டான்.
அஞ்சலி: 'இலங்கையின் வாண்டுமாமா' 'மாஸ்டர்' சிவலிங்கம் ( இரத்தினம் சிவலிங்கம்) மறைந்தார்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் என்ற ஊரைச் சேர்ந்தவர். சிறுவர் இலக்கியத்துக்கு மிகப்பெரும் இழப்பு. 'சிந்தாமணி'யின் 'சிறுவர் சிந்தாமணி'யில் தொடராக இவர் எழுதிய சிறுவர் நாவல்களைப் பால்ய பருவத்தில் வாசித்துள்ளேன். 'இலங்கையின் வாண்டுமாமா' என்று அப்பொழுது இவரை எண்ணிக்கொள்வேன். சரளமான, உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் நடை இவருடைய நடை.
சிந்தாமணியில் பல வருடங்களாக சிறுவர் நாவல்கள் எழுதி வருந்திருக்கின்றார். அவை அனைத்தும் நிச்சயமாகத் தொகுக்கப்பட வேண்டியவை. இவர் எழுதியவற்றில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான நூல்களே வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் சிறுவர் இலக்கியத்துக்கு மிகவும் அதிக அளவில் பங்களிப்புச் செய்தவர்களில் முக்கியமானவர் 'மாஸ்டர்' சிவலிங்கம். இவரது மறைவு இவருடைய எழுத்துகளூடு வளர்ந்தவர்களுக்கு மிகவும் துயர் தருவது. ஆழ்ந்த இரங்கல்.
மேலைநாட்டவரான மாக்ஸ்முல்லரின் இந்துக்கற்கைகள் தொடர்பான பங்களிப்புகள்! - ந.சதுர்ஜியா, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, இலங்கை -
இந்து கலாசார, நாகரிக, சமயவழிபாட்டு முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளின் உச்சகட்ட காலமாக 19ம் நூற்றாண்டினைக் குறிப்பிடலாம். இக் காலக்கட்டத்தில் மேற்கத்தைய அறிஞர்கள் பலர் கீழைத்தேய கலாசார, சமூக, சமய, இலக்கியங்கள் பற்றி அறிய பேரார்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதன் காரணமாக தமது ஈடுபாடுகளையும் பங்களிப்பினையும் ஆற்றினர். இதற்காக மேலைநாட்டினர் இந்தியாவின் மொழியான சமஸ்கிருத மொழியினை கற்க தொடங்கினார்கள். அவர்கள் அவ் மொழியினை கற்றது மட்டும் அல்லமால் இந்துப்பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் இலக்கியங்களை வெளியிட்டமை, மொழிபெயர்ப்பு பணியினை செய்தமை மற்றம் தொல்பொருள் ஆராய்ச்சி என்பனவற்றினையும் மேற்கொண்டனர்.
மேலைநாட்டினர் வேதங்கள், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் உள்ளிட்ட இந்து சமய இலக்கியமூலங்களை அச்சுருவாக்கினார், ஆங்கீலமொழியில் மொழிபெயர்த்தனர், விரிவுரைகள் செய்யப்பட்டன, ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டன, அகாரதிகள் உருவாக்கினார் மற்றும் தொல்லியல் ஆய்வுகள், ஒப்பியல் ஆய்வுகள், சமய ஆய்வுகள் நடந்தேறின. இதற்கு துணை செய்தவர்களில் சேர் வில்லியம்ஸ் ஜோன்ஸ், மாக்ஸ்முல்லர், கீத், மொனியர் வில்லியம்ஸ், எச்.ரி.கோல்புறூக், எச்.எச்.வில்சன், வின்ரநிட்ஸ், சேர் ஜோன்வூட்றொவ் போன்ற மேலைத்தேச இந்தியவியல் ஆய்வாளர்களின் வகிபாங்கு அளப்பெரியது ஆகும். இவ் ஆய்வாளர்களில் முதன்மையானவரும் சுவாமி விவேகானந்தரால் வேத ரிஷிகளுக்கு ஒப்பானவர் என்று போற்றப்பட்ட சிறப்புக்குரியவருமான ஜேர்மன் நாட்டறிஞராகிய மாக்ஸ்முல்லரின் இந்துப் பண்பாடு தொடர்பான பங்களிப்புகள் பற்றி இக் கட்டுரையில் விரிவாக ஆராய்வோம்.
ஜேர்மனியில் கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள s Dessau என்ற சிறுநகரில் வில்லியம் முல்லர், அடல்ஹெய்ட் முல்லர் ஆகியோருக்கு 1823 ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி மக்ஸ்முல்லர் மகனாகப் பிறந்தார். இவர் இளவயதில் இருந்தே காவியங்களையும், இசைகளையும் கற்பதில் பெரிதும் ஆர்வம் உடையவாரக திகழ்ந்தார். இவர் தனது பாடசாலைக் கல்வியினைக் ஜிம்னானிஸம் உயர்பள்ளி மற்றும் நிகோலாய் உயர் கல்லூரி என்பவற்றில் கற்றார். இவர் தனது பல்கலைக்கழக அனுமதிக்காக கீழைத்தேச மொழிகளில் குறிப்பாக சம்ஸ்கிருத்தை ஆழமாக கற்றிருந்தார். இவர் தனது 18வது வயதில் ஜேர்மன் பல்கலைக்கழகமான லெய்ப்ஸிஸ் பல்கலைக்கழகத்தில் மொழிப்பிறப்பியல் தொடர்பான கற்கையினை மேற்கொள்வதற்கு தெரிவாகினார். தனது பட்டப்படிப்பின் போது தொல்சீர் மொழிகளான கிரேக்கம், இலத்தீன், அரபு, பாரசீக மொழி மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவாரக திழ்ந்த இவர் 1843ல் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். இவர் மிக இளவயதிலேயே ஹிதோபதேசத்தினை ஜேர்மனிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்.
கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (2) - ஜோதிகுமார் -
2
விவசாயிகள், தொழிலாளிகள், புரட்சிகள், பாதுகாப்பரண்கள் - இவை,அனைத்துமே கிளிம்மின் வாழ்நிலைக்கு ஒவ்வாததாக இருக்கின்றன. போதாதற்கு, ஒரு வகையில், இவற்றின் ஒட்டு மொத்த பிம்பமாய் அல்லது உருவகமாய் திகழ முற்படும் மார்க்சிஸ்டுகள் பொறுத்தும், அவன் தன் அந்தரங்கத்தில், ஏளனமும் ஒரு வகை வெறுப்பும் கலந்த உணர்வினைக் கொண்டவனாய் இருக்கின்றான். ஒரு பாத்திரம், மார்க்சிஸ்டுகள், பொறுத்த தன் கருத்தைக் கூறும்:
“அவர்களிடம் நீ அறத்தைப் பற்றியோ அல்லது வாய்மைகள் பொறுத்தோ கதைப்பது என்பது உனது நேரத்தை வீணடிக்கும் செயல்தான். அறம் என்ற, அப்படியான ஒன்று அவர்களிடம் இல்லவே இல்லை. அப்படியே இருந்தாலும் கூட, அது ‘அவர்களது’ அறங்களாக அல்லது அவர்களது‘வாய்மைகளாக’ மாத்திரமே இருக்கின்றது. அவர்கள் நம்புகிறார்கள்: உ;ன்னை விட, என்னை விட அவர்களிடம் அதிகளவில், உண்மையான மனித நேயம் இருப்பதாக… ஒரு, ‘தனி மனிதனைப்’ பற்றி; அதாவது ஒரு தனி ;நபரை’ பொறுத்து அவர்களிடம் நீ கதைப்பது என்பது உதவாத ஒரு விடயமாகிறது. நேரத்தை வீணடிப்பது. “மனிதன்”– அது பிற்பாடு என்கிறார்கள் அவர்கள். முதலில், சுயமான முளைத்தலுக்காய், மண் பண்படுத்தப்படட்டும். பின்னரே ‘மனிதன்’! நீ கூறும், ‘மனிதன்’ என்பவன் யார்? அவன் எங்கிருக்கிறான் என்று கேட்கிறார்கள். கூறுகிறார்கள்: இருப்பது எல்லாம் வெற்று அடிமைகள். மண்டியிட்டு, அல்லது நன்றாய், நீட்டிசா~;டாங்கமாய் வணங்கத் தெரிந்த அடிமைகள்… அவ்வளவே…”
வாழ்த்துவோம்: இளந்தொழில் அதிபர் நிவேதா பாலேந்திரா! - வ.ந.கி -
அறிவியல் அறிஞரும் , உடலியற் துறையில் இளமானிப்பட்டதாரியும், இளந்தொழிலதிபருமான நிவேதா பாலேந்திரா மொன்ரியலிலுள்ள மரினாபொலிஸ் கல்லூரியில் (Marianopolis College) தனது கல்வியைத் தொடரும் காலத்திலேயே ஊடகங்கள் பலவற்றின் , அறிவியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதற்குக் காரணம் நீரில் கலந்துள்ள எண்ணெய்க் கசிவுகளைச் சுத்திகரிப்பதற்கான இவரது ஆய்வுகள்தாம். Pseudomonas fluorescens என்னும் நுண்ணுயிரின் ஒரு வகையினைப் பாவித்துப் பெறப்படும் இரசாயனப் பொருள் மூலம் இக்கசிவுகள் சுத்திகரிக்கப்படுகின்றன. பொதுவாக இவ்வகையான எண்ணெய்ச்சுத்திகரிப்புப் பொருட்கள் பெற்றோலியம் பொருட்களிலிருந்து பெறப்படுகின்றன. ஆனால் இவரது கண்டுபிடிப்போ நுண்ணுயிரியிலிருந்து பெறப்படுகின்றது. அத்துட ன் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் 2019இல் லவால்,மொன்ரியாலில் 'டிஸ்பேர்சா' (Dispersa) என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். வளர்ந்து வரும் இந்நிறுவனம் நுண்ணுயிரியிலிருந்து சவர்க்காரம் போன்ற வீடுகளில் சுத்திகரிக்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது. உலகளாவியரீதியில், ஆரம்பிக்கப்பட்ட இவ்வகையான இரசாயன நிறுவனங்களில் 2022இல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் Global Startup Heat Map என்னும் தரவுகளைத் தேர்ந்தெடுக்கும் பொறிமுறையினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது ஆய்வுகளுக்காகப் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் கா. சிவத்தம்பி ( 1932 - 2011 ) நினைவுகள்! மே 10 அன்னாரின் 90 ஆவது பிறந்த தினம் ! - முருகபூபதி -
"நாங்கள் சமூகத்துக்கு எவ்வளவை கொடுக்கின்றோமோ அவ்வளவைத்தான் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் ” எனச் சொல்லி வந்தவர்தான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. அவர் தமது இறுதிக்காலத்திலும், உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் அயராமல் இயங்கிய ஆளுமை.
பேராசிரியர் சிவத்தம்பியை முதல் முதலில் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் 1972 இல் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் சந்தித்தேன். அந்தநிகழ்விற்கு அவர்தான் தலைமைதாங்கினார். அப்பொழுது அவர் தமது குடும்பத்தினருடன் பொரளை கொட்டா ரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் என். எம். பெரேராவின் வீட்டுக்கு அருகில் வசித்துவந்தார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் உருவானதும் அதற்குத்தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி 1976 இல் தமிழ்நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கை இரண்டு நாட்கள் ஒழுங்குசெய்திருந்தார். அச்சமயம் அங்கு விரிவுரையாளராக விருந்த எனது இனிய நண்பர் நுஃமான் அவர்களின் அறையில் தங்கியிருந்து ஆய்வரங்கு நிகழ்ச்சிகளுக்குச்சென்றேன். சிவத்தம்பியுடன் கலந்துரையாடுவதற்கு அந்த சந்தர்ப்பம் உதவியாகவிருந்தது. ஆய்வரங்குகள் முடிந்த பின்னரும் நான் யாழ்ப்பாணத்தில் நிற்கநேர்ந்தது. ஒருநாள் மாலை யாழ். பஸ்நிலையத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு முன்பாக நின்றபொழுது - சிவத்தம்பி வல்வெட்டித்துறையிலிருந்து வந்த பஸ்ஸில் வந்திறங்கினார். அவர் அன்று வேட்டி அணிந்து மெதுவாக நடந்து புத்தகக்கடைப்பக்கம் வந்தவர், அங்கு நின்ற என்னைக்கண்டுவிட்டு, “ என்னடாப்பா இன்னும் ஊருக்குத்திரும்பவில்லையா?" எனக்கேட்டார். அவரது அந்த என்னடாப்பா என்ற உரிமையும் உறவும் கலந்த குரலை 2011 இல் அவர் மறையும் வரையில் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் கேட்கமுடிந்தது. யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரைப்பணி மற்றும் இலக்கிய விமர்சனத்துறை சார்ந்த அயராத எழுத்துப்பணிகளுக்கு அப்பால், தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு மற்றும் வடபிரதேச பிரஜைகள் குழு, யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு முதலானவற்றில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கியதை 1983 - 1987 களில் அவதானித்திருக்கின்றேன்.
வாழும் சுவர்கள். - இளவாலை எஸ்.ஜெகதீசன். -
- முன்னொரு காலத்தில் பான்ஸ்கி பற்றி நான் எழுதிய கட்டுரையை மீண்டும் பார்க்க வைத்தது கிறிஸ்டியின் கட்டுரை. இலங்கையில் சுவரோவியங்கள் வீதி ஓரங்களில் உயிர் பெற்ற பொழுது இந்தக் கட்டுரையை பரணில் இருந்து தூசி தட்டி எடுத்து வீதிகளில் காதல் ஆக்கியிருந்தேன். - எஸ்.ஜெகதீசன் - -
முன்பு ஒரு காலத்தில் ஊருக்குள் நம்ப முடியாத செய்திகளை நம்ப வைத்ததில் தெருச்சித்திரங்களுக்கும் பங்கிருந்தது. பாடசாலை கழிவறைகள் தொடக்கம் தெரு மதகுகள் சிதிலமடைந்த மதிற் சுவர்கள் மயான மண்டபங்கள் போன்றன கரித்துண்டுகளாலும் பச்சிலைகளாலும் கிறுக்கர்களின் களமாகி கிறங்கடித்தன. அசுத்தமான இடங்கள் அவர்களுக்கு தடையாக இருந்ததுமில்லை. அசிங்கமான வார்த்தைகளுக்கு அவர்கள் தடை விதித்ததுமில்லை. வியப்பு – திகைப்பு – தவிப்பு – முறைப்பு – வெறுப்பு – கடுப்பு என பல உணர்வுகள் பாதிப்படைந்தவர்களிடம் மட்டுமல்ல அவற்றை பார்த்தவர்களிடமும் ஏற்பட வேண்டும் என்ற கற்பனையுடன் அந்த கிறுக்கர்கள் அநாமதேயமாகவே சிரித்தார்கள். - அந்த கிராமிய நினைவுகள் பலருக்கு இப்பொழுதும் மங்கலாக ஞாபக இடுக்குகளில் அப்பியிருக்கும்.
பரவலாக ஆசியாவில் மட்டுமே இவ்வகை கிறுக்கல்கள் வம்பை வதந்தியாக்கிட ஏனைய கண்டங்களில் அரசை விமர்சித்தும்இவிழிப்புணர்வை ஏற்படுத்தியும்இரகஸிய தகவல்களை பகிரங்கமாக்கியும்இநாட்டு நடப்புடன் கேலி பேசியும் மனங்களை வெள்ளை அடித்தன. மன்னிக்கவும் கொள்ளை அடித்தன. அதனால் அங்கெல்லாம் மறைவிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களுக்கு வந்து சிரிக்கும் சந்தியாக சாட்சியளிக்கின்றன. தெருச் சித்திரம் (STREET ART) வரைகலை (GRAPHIC) கிறுக்கல்; (GRAFFITI) சுவரோவியம் (MURAL) போன்ற பல பெயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தற்காலத்தில் வாழும் சுவர் ( LIVING WALL) என்ற புதுப் பெயர்; பொலிவு பெறுகின்றது.
(பதிவுகளில் அன்று) வெற்றிச் சிகரத்தை நோக்கி: எண்ணம் மற்றும் எழுத்து (1) - கி. ஷங்கர் (பெங்களூர்) -
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர்
ஆகஸ்ட் 2003 , பதிவுகள்
பெங்களூர், இந்தியாவில் தற்போது வசித்து வரும் திரு .கே.சங்கர் ஒரு இயந்திரவியற் பொறியியலாளர். சந்தைப் படுத்தலில் MBA பட்டம் பெற்றவர். இருபத்து மூன்று வருடங்களுக்கும் அதிகமான கூட்டுஸ்தாபன அனுபவம் பெற்றவர். தற்போது தொழில்நுட்பம், நிர்வாகம், மனித வள அபிவிருத்தி ஆகியவற்ற்¢ல் நிபுணராகப் பணியாற்றி வருபவர். அத்துடன் ஊடக எழுத்தாளராகவும் , பேச்சாளராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர். அவர் வாழ்வின் வெற்றிக்கு அவசியமான ஆளுமை அபிவிருத்தி பற்றிய ஆக்கங்களைப் பதிவுகளில் தொடர்ந்து எழுதவிருக்கின்றார். இது அவரது முதலாவது ஆக்கம்.
வெற்றிச் சிகரத்தை நோக்கி: எண்ணம் மற்றும் எழுத்து (1)
உலகின் எல்லா மூலைகளிலும் ஏதோ ஒரு கிராமத்திலோ, குக்கிராமத்திலோ அல்லது நகரத்திலோ பிறந்து வளர்ந்து வரும் எந்த ஒரு இளைஞநிடமோ, இளைஞியிடமோ இருக்கக்கூடிய ஒரு தாக்கம், _ பொதுவான ஒரு தாக்கம் என்னவென்றால் அது வெற்றியின் தாக்கம்தான். இளம்பிராயத்தினர் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் விரும்புவது என்னவென்றால் அது வெற்றியின் சிகரத்தை தொடுவதுதான். ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா என்ன? நிச்சயமாக இல்லை. ஏன்? காரணமென்ன?
ஏனென்றால் சிலர்தான் வெற்றியின் சிகரத்தை தொடும் சூழ்நிலையில் வளர்கிறார்கள் அல்லது வளர்க்கப்படுகிறார்கள் அல்லது தயார் செய்யப் படுகிறார்கள். பலருக்கு இந்த வெற்றி என்பது ஒரு எட்டாக்கனியாக, ஒரு அடிமனக் கனவாகவே முடிந்து விடுகிறது. ஏன்? எல்லோராலும் இந்த உலகில் வெற்றி பெற முடியாதா என்ன? நிச்சயமாக முடியும். இந்த உலகில் உள்ள எல்லோருமே வெற்றி பெறுவதற்காக பிறந்தவர்கள்தான். மனிதர்களை இரண்டு வகையாகத்தான் பிரிக்க முடியும். அது ஆண், பெண் என்ற பிரிவல்ல. வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெறாதவர்கள் என்பது கூட அல்ல. அது முயற்சி உள்ளவர்கள், பயிற்சி பெற்றவர்கள் என்பது ஒரு பிரிவு. முயற்சி இல்லாதவர்கள், பயிற்சி பெறாதவர்கள் என்பது இன்னொரு பிரிவு.
காலன் ஒத்திவைத்த மரணம்! ஐ. தி. சம்பந்தன் வாழ்வும் பணிகளும்! மொழிவழித் தொழிற்சங்கங்களை உயிர்ப்பிக்க ஒலித்த குரல் ஓய்ந்தது! - முருகபூபதி -
பிறக்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் மரணம் நிச்சயமானதுதான். எமது தமிழ் சமூகத்தில் ஒருவர் மரணம் எய்தி அமரத்துவம் அடைந்துவிட்டால், இயற்கை அநர்த்தத்தினால் அல்லது விபத்தினால், வேறு ஏதும் காரணங்களினால் கொல்லப்பட்டால், “ காலன் கவர்ந்துவிட்டான் “ என்போம்.
உயிரைக்கவர வரும் எமதர்மன், தனது செயலாளர் சித்திரகுப்தனிடம் ஒருவரை எவ்வளவு காலம் பூவுலகில் வைத்திருக்கலாம் எனக்கேட்டுத்தான் மரணத்தீர்ப்பை வழங்குவார் என எமது முன்னோர்கள் சொல்வார்கள். சித்திரகுப்தனின் கணக்குத்தவறி, எமதர்மன் தனது கடமையைச் செய்யாமல் திரும்பிச்சென்றால், “ மரணிக்கவிருந்தவர் மயிரிழையில் உயிர் தப்பினார் “ என்ற பிரயோகமும் சமூகத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
இம்மாதம் 03 ஆம் திகதி லண்டனில் தமது 87 வயதில் இயற்கை எய்தியிருக்கும் மூத்த தொழிற்சங்கவாதியும், தமிழ் உணர்வாளரும், சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளரும் , ஆவணப்பதிவாளருமான ஐ.தி. சம்பந்தன் அவர்கள், இங்கு குறிப்பிடப்பட்ட எமதர்மராஜனதும் அவரது செயலாளர் சித்திரகுப்தனதும் கணிப்பின் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்ட மரணத்தை அடைந்திருக்கிறார். இதனை வாசிக்கும் வாசகர்கள், “ அது என்ன ஒத்திவைக்கப்பட்ட மரணம்…? “ எனக்கேட்கலாம். ஆம்… அவர் 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதியே முன்னாள் மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தருமலிங்கம், மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோருடன் எமதர்மனிடம் போய்ச் சேர்ந்திருக்கவேண்டியவர்.
யார் இந்த பேங்க்ஸி? - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
இடம்: சதபி ஏல விற்பனைக் கூடம் (Sotheby's Auction House), லண்டன்; காலம்: ஆக்டோபர் 05, 2018
உலகின் பல செல்வந்தர்கள் இன்று நடக்கவிருக்கும் ஏல விற்பனையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து இங்கு கூடி இருக்கின்றனர். அவர்களுடன் ஒன்றரக்கலந்து ஒரு உருவம், கடைசி இருக்கையில் அமர்ந்து, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காவண்ணம் மெதுவாக கையில் இருந்த ஒரு தொலையியக்கியை - remote control device - ஒரு முறை பார்த்து புன்னகைத்துக்கொள்கிறது. ஏலம் ஆரம்பமாகிறது! முதலில் ஏலத்திற்கு வந்த பொருள்... உலகில் பெயர்போன ஆநாமதேய தெருக்கிறுக்கல் ஓவியர் பேங்க்ஸியின் (Graffiti artist: Banksy) "பலூனுடன் ஒரு சிறுமி - Girl with the balloon" எனும் ஓவியம். மிக அழகாக தங்கமுலாம் பூசப்பட்ட அந்த பிஃறேமின் நடுவில் பதிக்கப்பட்டிருந்தது. நிமிடங்கள் நகர ஏலம் சூடு பிடித்து $1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதன் விலை நகர்த்தப்படுகிறது. இறுதி விலை அதுவாக நிர்ணயிக்கப்பட்டு சதபி விற்பனையாளர் தம் கையில் இருந்த மரச்சுத்தியலை பலமாய் மேசையில் மோதி "SOLD" என்ற வார்த்தையை உரக்கக்கூவி அந்த ஏலத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார். எல்லாம் முடிந்தது! கடைசி இருக்கையில் இருந்த அந்த உருவம் மெதுவாய் கதிரையை விட்டு எழுந்து தன் கையில் இருந்த தொலையியக்கியை ஒரு முறை அழுத்திவிட்டு அக்கூடத்தை விட்டு வெளியேறி லண்டன் சனக்கும்பவில் கலந்து மறைகிறது. அக் குமிழியில் இருந்து பிறந்த ஆணைக்கமைய $1.4 மில்லியனுக்கு விலைபோன அந்த ஓவியம் மெதுவாய் "ர்ர்ர்ர்....... " என்ற ஒலியுடன் கீழே நகர்ந்து சிறு கீற்றுக்களாய் துண்டுற்று ஒரு கிழிந்த திருவிழா அலங்காரம் போல் அலங்கோலமாய் காற்றில் அசைந்தது அமைதியானது. அக்கூடத்தில் இருந்த எல்லோர் முகத்திலும் ஒரு ஆச்சரியம் மிகுந்த அதிர்ச்சி! அந்த ஓவியத்திற்கான ஏலம் உடனே இரத்து செய்யப்படுகிறது.