- தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் பாவண்ணனின் பங்களிப்பு முக்கியமானது.  சிறுகதை, கவிதை, நாவல், இலக்கியத் திறனாய்வு மற்றும் மொழிபெயர்ப்பு என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டது. மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது பெற்றவர்.  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா)  2022 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது  பெற்றவர். விளக்கு அமைப்பின் வாழ்நாள் சாதனைக்கான புதுமைப்பித்தன் விருது பெற்றவர். புதுச்சேரி அரசின், இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவல் விருது பெற்றவர். இவை தவிர மேலும் பல இலக்கிய விருதுகளைச் சிறுகதை, கட்டுரை, குழந்தை இலக்கியத்துக்காகப் பெற்றவர். பாவண்ணன் பதிவுகள் இணைய இதழுக்கு வழங்கிய நேர்காணல் இது.  -


வணக்கம் பாவண்ணன், முதலில் உங்களுக்கு இயல்விருது 2022 வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காகக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியும் , வாழ்த்துகளும். உங்களது இலக்கியச் செயற்பாடுகளை அனைவரும் அறிந்திருக்கின்றோம். பதிவுகள் இணைய இதழிலும் உங்களது நெடுங்கதையான 'போர்க்களம்' வெளியாகியுள்ளதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றோம். முதலில் உங்கள் இளமைக்கால அனுபவங்களை, பிறந்த ஊர் போன்ற விபரங்களை அறிய ஆவலாகவுள்ளோம். அவை பற்றிய உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

வணக்கம். உங்கள் வாழ்த்து மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி. பதிவுகள் இணைய இதழில் எழுதிய பழைய நினைவுகளும் உங்களோடு பகிர்ந்துகொண்ட மின்னஞ்சல்களின் நினைவுகளும் பசுமையாக என் ஆழ்மனத்தில் பதிந்துள்ளன. அவற்றை ஒருபோதும் மறக்கமாட்டேன். தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வளவனூர் என்னும் கிராமமே எனக்குச் சொந்த ஊர். விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் இக்கிராமம் இருக்கிறது. தொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிப்படிப்பு வரை வளவனூரிலேயே படித்தேன். பிறகு புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசு கல்லூரியிலும் பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்தேன். என் ஆசிரியர்களே எனக்குச் சிறந்த வழிகாட்டிகளாக இருந்தார்கள். வளவனூர் மிக அழகான கிராமம். மொத்த ஊரே நாலு சதுரகிலோமீட்டருக்குள் அடங்கிவிடும். கிராமத்தைச் சுற்றியுள்ள பல சிற்றூர்களுக்கு பாசன வசதியைக் கொடுக்கும் அளவுக்கு பெரியதொரு ஏரி இருக்கிறது. தென்பெண்ணை ஆற்றோடு ஏரியை இணைக்கும் நீண்ட கால்வாயும் உண்டு. கோடைக்காலத்தில் வறண்டிருந்தாலும் மழைக்காலத்தில் ஏரி நிரம்பி வழியும். அப்போது பலவிதமான பறவைகளை ஏரியைச் சுற்றியுள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் அழகைப் பார்க்கமுடியும். எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் விரிவான நிலப்பரப்பைக் கொண்ட இடம். ஒரு பெரிய தோப்புக்குள் கட்டப்பட்ட வீட்டைப்போல அக்காலத்தில் இருக்கும். ஆலமரங்கள், அரசமரங்கள், நாவல் மரங்கள், இலுப்பைமரங்கள், நுணா மரங்கள் என எல்லா வகை மரங்களும் நிறைந்திருக்கும். அந்த மரங்களின் நிழலில்தான் நானும் என் நண்பர்களும் இளமைக்காலத்தில் ஆட்டமாடிக் களித்தோம். திசைக்கொரு கோவில், அழகான கிளை நூலகம், கட்சி சார்ந்த வாசக சாலைகள் எல்லாமே வளவனூரில் இருந்தன. அந்தக் கிராமத்தில் நான் கழித்த இளமைக்காலப் பொழுதுகள் இன்னும் என் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளன. இன்றும் தேவைப்படும்போதெல்லாம் அந்த அனுபவங்களின் சுரங்கத்திலிருந்து ஒரு சிலவற்றை என் படைப்புகளில் பயன்படுத்திக்கொள்கிறேன்.

உங்களது ஆரம்ப காலத்து வாசிப்பு அனுபவம் எத்தகையதாகவிருந்தது? பொதுவாகப் பலரும் அம்புலிமாமா, வெகுசன இதழ்களூடு வெகுசனப்புனைகதைகள் என்றுதான் வாசிப்புக்குள் அடியெடுத்து வைத்திருப்போம். சிலர் விதிவிலக்குகளாக இருக்கக்கூடும். உங்கள் அனுபவம் எவ்வகையானது? ஆரம்பத்தில் உங்களை ஈர்த்த படைப்புகள் எவையெவை? எழுத்தாளர்கள் யார் யார்?

நான் பள்ளியில் படித்த காலத்தில் வாரத்துக்கு ஒருமுறை நூலக வகுப்பு என்றொரு பாடவேளை இருந்தது. அப்போது எங்கள் ஆசிரியர் பள்ளி நூலகத்திலிருந்து சிறுவர்களுக்கான கதைப்புத்தகங்களை வரவழைத்து ஆளுக்கொரு புத்தகத்தைக் கொடுத்து படிக்கவைப்பார். அரைமணி நேரம் வாசிப்பு. பிறகு சிறிது நேரம் அதைப்பற்றி உரையாடல். அவரே பல நேரங்களில் கதைகளும் பாட்டுகளும் சொல்லிக் கொடுப்பார். மேலும் மேலும் புத்தகங்களைப் படிக்கும் விருப்பத்தைத் தெரிவித்தபோது அவரே நூலகரிடம் சொல்லி, எனக்குப் புத்தகம் கொடுக்க ஏற்பாடு செய்தார். ஆனால் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கமுடியாது. அவர் வழிகாட்டியபடி ஊரில் இருந்த கிளைநூலகத்துக்குச் சென்றேன். அங்கே பாண்டியன் என்றொரு அண்ணன் இருந்தார். அவர் அம்புலிமாமா இதழ்களைக் கொடுத்து படிக்கச் சொன்னார். பழைய அம்புலிமாமா இதழ்களின் தொகுதிகள் பைண்டு செய்யப்பட்டு நூலகத்தில் இருந்தன. அவற்றையெல்லாம் படித்தேன். என் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட ஆசிரியர் அவரிடமிருந்த பழைய கண்ணன், டமாரம், பாப்பா மலர் இதழ்த்தொகுதிகளைக் கொடுத்தார். நூலகர் அண்ணனும் தனிப்பட்ட சிறுவர் கதை நூல்களை எடுத்துப் படிப்பதற்கு அனுமதித்தார். என் வாசிப்பு வேகத்தைப் பார்த்த பிறகு, என் போக்கில் சுதந்திரமாக நூல்களை எடுத்துப் படிக்க அனுமதித்துவிட்டார். உயர்நிலைப்பள்ளிக்குச் சென்ற பிறகு ஆனந்தவிகடன், குமுதம், தினமணிக்கதிர் இதழ்களையெல்லாம் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அவற்றில் வெளிவரும் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் படித்தேன். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்கள், தேவனின் நகைச்சுவைக்கதைகள், சுஜாதாவின் சிறுகதைகள் என கைக்குக் கிடைத்ததையெல்லாம் ஆர்வத்துடன் படித்தேன். ஒருநாள் எங்கள் வீட்டுக்குப் பக்கத்துவீட்டிலிருந்த அக்கா ஒருவருக்குத் திருமணம் முடிவானது. அவரும் நல்ல வாசகர். ஏராளமான புத்தகங்கள் வைத்திருந்தார். எல்லாவற்றையும் மூட்டையாகக் கட்டி கடையில் போட்டுவிட்டு வருமாறு என்னிடம் கொடுத்தார். நான் அவருடைய அனுமதியோடு எல்லாவற்றையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். அந்தப் புத்தகக்கட்டில் கு.அழகிரிசாமியின் சிறுகதைத்தொகுதி இருந்தது. நான் அதுவரை படித்த கதைகளிலிருந்து அவர் கதைகள் வேறுபட்டிருந்தன. எனக்குள் ஒரு புதிய உலகத்தின் வாசல் திறந்ததுபோல இருந்தது. அழகிரிசாமியின் வழியிலேயே சென்று ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும் சுந்தர ராமசாமியையும் படித்தேன். என்னை அறியாமலேயே பொதுவாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்குள் வந்து சேர்ந்துவிட்டேன்.

ஒருவரின் வாசிப்பனுபவத்தில் வெகுசனப் படைப்புகளுக்கும் முக்கியமானதோர் பங்குண்டு. அவை வாசிப்பனுபவத்தில் படிக்கட்டுகள். இது பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

ஒரு சமூகத்தில் பொதுவாசிப்புக்குரிய படைப்புகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. அந்தப் படைப்புகள் வழியாகத்தான் ஒரு வாசகருக்கு பொது மொழிக்கு அப்பால் புழங்கும் கதைமொழி அறிமுகமாகிறது. ஒரு கதையுலகம் அறிமுகமாகிறது. கண்ணால் பார்க்கமுடியாத மனிதர்களின் கதைகள் அறிமுகமாகின்றன. பத்திரிகைகளையோ, பொதுவாசிப்புக்குரிய படைப்புகளையோ படிக்காத ஒருவர் எப்படி இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். அவர் தம்மோடு பழகக்கூடிய குடும்ப உறுப்பினர்களுக்கும் தம் தெருவில் வசிப்பவர்களுக்கும் அப்பால் ஒருவரையும் அறியாதவராகவே இருப்பார். எந்த அனுபவமும் அவரை வந்தடைய வாய்ப்பிருக்காது. பொதுவாசிப்புதான் முகம் தெரியாத மனிதர்களின் கதைகளை ஒருவருக்கு அறிமுகப்படுத்துகிறது. தாம் வாழாத பிறருடைய வாழ்க்கைவகைகளை அறிமுகப்படுத்துகிறது. அது கற்பனையாகவே இருந்தாலும் ஒருவருடைய வாழ்வில் ‘பிறர்’ என்பவருக்கு அப்போதுதான் ஓர் இடம் உருவாகிறது. பொழுதுபோக்காகவே நாம் ஏராளமானவர்களைப்பற்றித் தெரிந்துகொள்கிறோம். அது ஒரு தொடக்கம். இலக்கிய வாசிப்பு அந்த உலகத்தை இன்னும் பட்டை தீட்டிக்கொள்ளவும் கூர்மைப்படுத்திக்கொள்ளவும் துணை புரிகிறது. அந்த அனுபவத்தின் பின்னணியில் வாழ்க்கையை மதிப்பிடும் கலை நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வசப்படுகிறது.

உங்கள் வாசிப்பவனுபவத்தில் அடுத்த படிக்கட்டுகளில் உங்களைக் கவர்ந்த இலக்கியப்படைப்புகள் எவை? அவை உங்களைக்கவர்வதற்குக் காரணங்கள் என்னென்ன?

நான் ஏற்கனவே சொன்னதுபோல கு.அழகிரிசாமியின் எழுத்துகளே புதிய உலகத்தை நோக்கிச் செல்ல எனக்குத் துணைபுரிந்தன. அதைத் தொடர்ந்து ஜெயகாந்தன் கதைகளைப் படித்தேன். அவை மேலும் என்னை ஆழத்தை நோக்கிச் செலுத்தின. அவர்களைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி, க.நா.சுப்பிரமணியன், புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, மெளனி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன், எம்.வி.வெங்கட்ராம் அனைவரையும் தேடித்தேடிப் படித்தேன். க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா என்னும் புத்தகத்தை ஒருமுறை நூலகத்தில் கண்டெடுத்துப் படித்தேன். அவர் காலகட்டத்தில் மிக முக்கியமானவை என அவர் கருதிய புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விதமாக அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுதி அது. ஒரு பெரிய வழிகாட்டி நூல். பல துறைகள் சார்ந்தவை அந்நூல்கள். ஆனால் முக்கியமானவை. அவர் சுட்டிக்காட்டி உடனடியாக படித்த நாவல் நாகம்மாள். கடைசியாகப் படித்தது சங்கீதயோகம். ஒவ்வொரு புத்தகத்தையும் தேடித்தேடிப் படித்தேன். அந்தக் காலத்தில் புத்தகம் கிடைப்பது அவ்வளவு கஷ்டமாக இருந்தது. நூலகங்களைத் தவிர வேறெங்கும் கிடைக்காது. அப்பட்டியலில் இருந்த புத்தகங்களைப் படிப்பதற்கு எனக்கு பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன. அன்றும் இன்றும் எனக்குப் பிடித்தமான நாவலென க.நா.சு.வின் பொய்த்தேவு நாவலைச் சொல்வேன். அதைப் படிக்கும்தோறும் புதுப்புது எண்ணங்கள் எழுகின்றன. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, தி.ஜானகிராமனின் மோகமுள்,  அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், சா.கந்தசாமியின் சாயாவனம், விட்டல்ராவின் போக்கிடம், நதிமூலம், பூமணியின் பிறகு, வெங்கடேசனின் காவல்கோட்டம், ஜோடிகுரூஸின் ஆழிசூழ் உலகு, ஜெயமோகனின் கொற்றவை, ஏழாம் உலகம் ஆகியவை என் மனத்துக்கு நெருக்கமான நாவல்கள். அவை ஒவ்வொன்றும் ஏன் பிடித்திருந்தது என்று சொல்லலாம். ஆனாலும் அது ஏதோ பேருரை ஆற்றுவதைப்போல ஆகிவிடும். சுருக்கமாக, மானுட வாழ்வின் வெவ்வேறு தளங்களை பின்னணியாகக் கொண்டு மனம் இயங்கும் வெவ்வேறு வழிமுறைகளை அந்தப் படைப்புகள் எனக்கு உணர்த்தின என்று சொல்லலாம்.

சமகாலத்தமிழ் இலக்கியம் உங்களுக்கு நம்பிக்கையினைத் தருகின்றதா? உங்களைக் கவர்ந்த சமகால இலக்கியப் படைப்புகள், ஆளுமைகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

சமகால இலக்கியம் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. புத்தாயிரத்தாண்டுக்குப் பிறகு தமிழுக்கு வளம் சேர்க்கும் படைப்புகள் ஏராளமாக வெளிவந்துள்ளன. புதுப்புது பின்னணியில் நாவல்களை எழுதிப் பார்க்கும் ஆற்றல் நிறைந்தவர்களாக புதிய எழுத்தாளர்கள் வளர்ந்து நிற்கிறார்கள். பல எழுத்தாளர்களின் முதல் படைப்பே நாவலாகத்தான் இருக்கிறது. உடனடியாக நினைவுக்கு வரும் சில படைப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். கலைச்செல்வி எழுதிய ஆலகாலம், ஹரிலால், தேய்புரி பழங்கயிறு, முத்துநாகு எழுதிய சுளுந்தீ, சயந்தன் எழுதிய ஆறாவடு, எஸ்.செந்தில்குமார் எழுதிய கழுதைப்பாதை, அமலன் ஸ்டான்லி எழுதிய வெறும் தானாய் நின்ற தற்பரம், ஒளவிய நெஞ்சம், எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி, கீரனூர் ஜாகிர்ராஜாவின் இத்தா, அஜிதனின் மைத்ரி, தூயனின் டார்வினின் வால். சிறுகதைகளைப் பொறுத்தவரையில் திருச்செந்தாழை, சுஷில்குமார், செந்தில் ஜெகன்னாதன், மயிலன் ஜி.சின்னப்பன், கனகலதா, ஐ.கிருத்திகா, கமலதேவி, ராம் தங்கம், சுனில்கிருஷ்ணன், சரவணன் சந்திரன், அசோக்குமார் ஆகிய பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இன்று தமிழில் வெளிவரும் எந்த இணைய இதழைத் திறந்தாலும், இவர்களில் யாரேனும் ஒருவருடைய சிறுகதை இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தை இணைய இதழ்களின் காலம் என்று சொல்லலாம். இன்று நம்பிக்கையூட்டும் இவ்விளைஞர்கள் இதே வலிமையுடன் தொடர்ந்து படைப்புகளை அளித்தால், எதிர்காலத்தில் மிகச்சிறந்த ஆளுமைகளாக உயர்ந்தெழக்கூடும்.

நீங்கள் எதற்காக எழுதுகின்றீர்கள்? எழுத்து பற்றியதொரு நோக்கமுள்ளதா? மக்களுக்காக எழுதுகின்றீர்களா? உள்ளத்திருப்திக்காக எழுதுகின்றீர்களா? எழுத்துமொரு கலை. கலை இன்பத்தைத் தருமொன்று. அதற்காக அவ்வின்பத்துக்காக எழுதுகின்றீர்களா?

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைத் தொடங்கும்போதே பாயிரத்தில் தம் படைப்பின் நோக்கங்களை முன்வைத்துவிடுவதைப் பார்க்கலாம். ஆனால் இன்றைய இணையகால இலக்கிய உலகில் படைப்புகளின் ஓட்டத்தில் அல்லது வாசிப்பு அனுபவத்தில் அது வெளிப்படும்வகையில் எழுதப்படுகிறது. ஓர் எழுத்தாளரின் படைப்புலகத்தை வாசித்து உள்வாங்கிக்கொள்ளும் ஒரு வாசகனுக்கு, அந்த எழுத்தாளரின் மனத்தை எளிதாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனாலும் சிற்சில சமயங்களில் ஒரு கேள்வியாக அது வெளிப்படும்போது, அதற்கு நேரிடையாகவே பதில் சொல்லவேண்டியதாக இருக்கிறது. தொடக்கத்தில் என் சொந்த வாழ்க்கை அனுபவங்களை முன்வைப்பதாகவே என் எழுத்துலகம் அமைந்திருந்தது. கொஞ்சம்கொஞ்சமாக பிறருடைய அனுபவங்களையும் என்னுடைய அனுபவங்களாக கட்டமைத்துக்கொண்டேன். அந்த அனுபவத்தொகையில் என்னை அறியாமலேயே ஒரு தேர்வு நிகழ்ந்திருப்பதை பிற்காலத்தில் உணர்ந்தேன். என் வாழ்க்கைப்பார்வைக்கும் அத்தேர்வுக்கும் நெருக்கமானதொரு தொடர்பு இருப்பதையும் உணர்ந்தேன். கருணையும் மனிதாபிமானமும் வாழ்க்கையின் ஆதாரத்தளங்கள் என்பது என் அழுத்தமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையையே வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு மனிதர்கள் வழியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். அதுவே என் எழுத்தின் வழி. கருணையும் மனிதாபிமானமும் நிறைந்த கணங்களை இவ்வாழ்வில் தேடித்தேடி முன்வைத்தபடி இருக்கிறேன்.

நீங்கள் புனைவு, அபுனைபு, கவிதை, மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம் என்று பன்முகப்பங்களிப்பு செய்து வரும் படைப்பாளி. உங்கள் படைப்புகள் பற்றிய உங்கள் மனநிலை இன்று எவ்வாறுள்ளது? அவற்றையிட்டு மிகுந்த திருப்தியுண்டா?

நூறு கதைகளை எழுதிவிட்ட அனுபவத்தில், நூற்றியோராவது கதையை எளிதாகத் தொடங்கிவிடவும் முடியாது. முடித்துவிடவும் முடியாது. முதல் படைப்பை எழுதிய போது உணர்ந்த அதே தவிப்பும் வேகமும் எல்லாக் கதைகளுக்கும் உண்டு. ஒவ்வொரு படைப்பும் எனக்கு முதல் படைப்பே. அந்தப் படைப்பு மனநிலையும் தீவிரமும் அப்படியே நீடித்திருக்கிறது.

புனைவுகளில் சிறுகதைத்துறையில் உங்கள் பங்களிப்பு அதிகம். எனக்கு உங்கள் 'குறி' என்னும் சிறுகதை இன்னும் நினைவிலுண்டு. அது பற்றி வாசகர் கடிதமொன்றும் கணையாழியில் எழுதியுள்ளேன். ஒரு தனிமனிதன் ஒருவனின் இருப்பைச் சுற்றியிருக்கும் சமூக, அரசியற் சூழல் எவ்விதம் பாதிக்கின்றது என்பதை வெளிப்படுத்துமொரு கதையாக என் மனத்தில் அது நிற்கிறது. சிறுகதையொன்றை எழுதுகையில் உங்களுக்குத் தூண்டுதல் எவ்வாறு ஏற்படுகின்றது? உங்களைப் பாதித்த சம்பவங்களை எழுத்தில் வடிக்கின்றீர்களா? அல்லது கருத்தொன்றினை வைத்துக் கதையைப் பின்னுகின்றீர்களா?

ஒவ்வொரு நாளும் எண்ணற்ற சம்பவங்களை கண்ணால் பார்க்கிறேன். பூங்கா, ஏரிக்கரை, அஞ்சல் அலுவலகம், கடைத்தெரு, ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம் என நான் செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான நிகழ்ச்சிகளை நேருக்கு நேர் பார்க்கிற வாய்ப்பு கிடைக்கிறது. எத்தனையோ பார்த்தாலும் ஒருசில சம்பவங்கள் மட்டுமே நெஞ்சில் சட்டென பதிந்துவிடும். வேறு யாரையாவது சந்திக்கும் தருணத்தில் அவற்றைப்பற்றி எடுத்துச் சொல்லி பகிர்ந்துகொள்ளவும் தூண்டும். அவை ஒவ்வொன்றும் அப்படியே ஆழ்நெஞ்சில் தங்கிவிடும். என்னைப்போலவே சம்பவங்களைக் கவனிக்கும் விருப்பமுள்ள நண்பர்கள் தம் அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொள்வார்கள். நான் பார்த்த சம்பவம், பிறர் பார்த்த சம்பவம், என் சொந்த அனுபவம், காதுகொடுத்துக் கேட்ட பிறருடைய அனுபவம் எல்லாமே கலந்து ஆற்றின் அடியில் மூழ்கிக் கிடக்கும் கூழாங்கற்களைப்போல ஆழ்நெஞ்சில் அமிழ்ந்திருக்கும். வேறொரு நாளில் வேறொரு சம்பவத்தைப் பார்க்கும்போது, ஏதோ ஒரு காரணத்தால் திடீரென ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வரும். இரண்டும் ஒன்றோடு ஒன்று இணையும். தொட்டுக்கொள்ளும். மோதும். ஒரு கதையின் மையத்தை என் மனம் அப்படித்தான் கண்டடையும். மையம் உருவானதுமே. பின்னணிக்கட்டுமானமும் பாத்திரங்களும் தானாகவே கூடிவந்துவிடும். புகைமூட்டமான அச்சித்திரங்களை அசைபோட்டபடி இருக்கும்போது தானாகவே ஒரு தொடக்கம் அமைந்துவிடும். செல்திசையும் தெரிந்துவிடும். எழுதத் தொடங்கி குத்துமதிப்பாக கதை போய்க்கொண்டே இருப்பேன். பொருத்தமான இடத்தில் கதை தானாகவே நின்றுவிடும். எதை நோக்கி வெளிச்சம் விழவேண்டுமோ, அதை நோக்கி வெளிச்சம் தானாகவே விழுந்திருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒழுங்கு செய்து பிசிறுகளை நீக்கி செம்மைப்படுத்துவேன். இப்படித்தான் நான் எழுதும் சிறுகதைகள் உருவாகின்றன.

ஒரு சிறுகதையை முன்வைத்துச் சொன்னால், என் வழிமுறையை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். சில ஆண்டுகளுக்கு முன்னால் அம்ருதா இதழில் வெள்ளைக்காரன் என்றொரு சிறுகதையை எழுதியிருந்ந்தேன். என் நண்பர்களுக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை அது. அது உண்மைக்கதையா, அப்படி ஒருவர் இருந்தாரா என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் முழுக்கதையும் அவருடையதல்ல. வேறொருவர் கதை வழியாக அவர் வெளிப்பட்டார் என்பதுதான் உண்மை. இத்தனை காலமும் என் நினைவில் இருந்தவர், இந்தக் கதையில் ஏன் திடீரென வெளிப்பட்டார் என்பதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம். ஒருநாள் ஒரு உணவு விடுதியில் காப்பி அருந்திக்கொண்டிருந்தேன். அப்போது சாலையில் ஓர் இறுதி ஊர்வலம் சென்றது. பல பேர் எழுந்து சென்று சாலையோரமாக நின்று அந்த ஊர்வலம் கடந்துபோகும் வரை வேடிக்கை பார்த்தனர். பிறகு ஒவ்வொருவராக நாக்கு சப்புக்கொட்டியபடி திரும்பி வந்து நாற்காலிகளில் அமர்ந்து காப்பி அருந்தவோ, பேசவோ தொடங்கினர். நான் அமர்ந்திருந்த மேசையை ஒட்டி அமர்ந்திருந்த இருவர் இறந்துபோனவரைப்பற்றி மிகவும் சிலாகித்து பேசியதைக் கேட்டேன். கேட்ட விவரங்களைக் கொண்டு அவரைப்பற்றிய சித்திரத்தை நானே மனத்துக்குள் தீட்டிக்கொண்டேன். அவர் யாரோ வெளிமாநிலத்துக்காரர். இளமைப்பருவத்தில் இந்த ஊருக்கு வந்தவர். மிகவும் சிரமப்பட்டு முன்னேறினார். தன்னைப்போலவே நகருக்குள் வந்து ஆதரவில்லாமல் கையேந்தி அலைந்துகொண்டிருந்த சிறுவனொருவனை தன்னோடு சேர்த்துக்கொண்டு மகனைப்போல வளர்த்தார். அவனுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தார். குடும்ப வாழ்க்கையையே அறியாமல் ஒரு துறவியைப்போல வாழ்ந்தவர் அவனுக்குத் திருமணம் செய்துவைத்து ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொடுத்தார். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இங்கு வந்து வாழ்ந்து இந்த மண்ணில் மறைந்துவிட்டார். விதி எழுதிவைத்த கணக்கை ஒருவராலும் புரிந்துகொள்ளமுடியாது. இப்படி ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்ட பிறகு, அந்த ஊர்வலத்தைத் திரும்பிப் பார்த்தேன். வெகுதொலைவு சென்றுவிட்டிருந்தது. அந்தப் பெரியவரைப்பற்றிய நினைவுகளை அசைபோட்டபடி நான் கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தேன். எதிர்பாராத கணமொன்றில் என் சிறுவயதில் நான் பார்த்த வெள்ளைக்காரனின் நினைவு வந்துவிட்டது. அந்த முகம், அந்த உருவம், அவர் வாழ்க்கை, அவர் பின்னணி, அவர் பேச்சு எல்லாமே அடுத்தடுத்து நினைவுவந்துவிட்டது. அவரும் இப்படித்தான் ஒருநாள் வேலை செய்துவந்த வீட்டைவிட்டு வெளியேறி மறைந்தார். எங்கே சென்றார் என்பது ஒருவருக்கும் தெரியாத மர்மமாகவே இருந்தது. இறந்துபோன பெரியவரின் இடத்தில் என் மனம் அந்த வெள்ளைக்காரனைப் பொருத்திப் பார்த்தது. சரியான பொருத்தம் என்று தோன்றிய கணமே அந்தக் கதை பிறந்துவிட்டது. தொடக்கக்காட்சி கூட மனத்தில் உருவாகிவிட்டது. வீட்டுக்குத் திரும்பிய கணமே மடிக்கணினியைத் திறந்து எழுதத் தொடங்கிவிட்டேன்.

உங்கள் சிறுகதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த சிறுகதை எது? ஏன்?

என் எல்லாச் சிறுகதைகளும் எனக்கு மிகவும் பிடித்தமானதுதான். எனக்கு நிறைவைத் தராத சிறுகதையை நான் தொடங்கவே மாட்டேன். ஆனால் நீங்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்ட நிலையில் இப்படி ஒரு பொதுவான பதிலோடு நிறுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. ஏதேனும் ஒரு சிறுகதையைச் சொல்வதுதான் சரியாக இருக்கும். சமீபத்தில் வல்லினம் என்னும் இணைய இதழில் ‘சாம்பல்’ என்னும் சிறுகதையை எழுதினேன். அக்கதை பல வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. நகரத்தில் வாழும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுடைய தந்தை திடீரென இறந்துவிடுகிறார். அக்கம்பக்கத்தில் அந்தப் பெரியவருக்குத் தெரிந்த குடும்பங்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், இறந்தவரின் சாம்பலை எடுத்துச் சென்று காசியில் கரைத்துவிட்டு வரும் பழக்கத்தைப் பின்பற்றுவதைப் பார்த்துப்பார்த்து, அதுதான் சரியான முறை போலும் என அவர் நினைத்துக்கொள்கிறார். தன் மகனிடம் தன் மறைவுக்குப் பிறகு தன்னுடைய சாம்பலை எடுத்துச் சென்று காசியில் கங்கைக்கரையில் கரைத்துவிட்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். மகனும் அவர் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அப்பா உண்மையிலேயே இறந்துபோய்விடுகிறார். அப்போது, அப்பாவின் சாம்பலை என்ன செய்வது என்று புரியாமல் குழம்புகிறான் மகன். செலவுக்குத் தேவையான பணத்தைப் புரட்டமுடியாத சூழல். இது கணவன் மனைவிக்கு நடுவில் அந்தச் சாம்பல் வீண் மனஸ்தாபத்தை ஏற்படுத்துகிறது. மனக்கொதிப்பில் திருட்டு ரயிலேறி காசிக்குப் போகத் தீர்மானித்து ஸ்டேஷனுக்குச் சென்றுவிடுகிறான் மகன். ஆனால் அவன் மனசாட்சி அத்திருட்டுத்தனத்தைச் செய்ய ஒப்பவில்லை. சோர்வும் குழப்பமும் கொண்ட மனநிலையோடு வீட்டுக்குத் திரும்பி நடந்து செல்கிறான். வழியில் தென்பட்ட ஏரிக்கரையில் களைப்பில் படுத்து ஓய்வெடுக்கிறான். பொழுது சாய்ந்த நேரத்தில்தான் விழிப்பு வருகிறது. அப்பாவிடம் மன்னிப்பை யாசித்தபடி அந்த ஏரியிலேயே சாம்பலைக் கரைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்புகிறான். எழுதிய பிறகு எனக்கு மிகவும் நிறைவையளித்த சிறுகதை இது.

பல்வகையான இலக்கியப்போக்குகள் குறித்துக் காலத்துக்காலம் தர்க்கங்கள் எழுவது வழக்கம். அவை பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

அது இயற்கை. அதை ஒருபோதும் தவிர்க்கமுடியாது. ’பழையன கழிதலும் புதுவன புகுதலும் வழுவல, கால வகையினானே’ என்னும் நன்னூல் வரிகளையே நான் முன்வைக்க விரும்புகிறேன். உலகத்தில் இலக்கியப்போக்குகள் மட்டுமல்ல, ஆடை உடுத்தும் போக்கு, வீடு கட்டும் போக்கு, கல்வி கற்கும் போக்கு, வேலை செய்யும் போக்கு என எல்லாவற்றிலுமே காலத்துக்குக் காலம் மாற்றம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பம்சம் இருந்தே தீரும். சங்க காலத்துப் பாடல்கள் முழுக்கமுழுக்க ஆசிரியப்பா பாவினத்தை ஒட்டியே அமைந்திருக்கிறது. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஒன்றேமுக்கால் அடியில் குறள்வெண்பா என்னும் வடிவத்தில் அமைந்திருக்கிறது. கம்பராமாயணமும் பெரிய புராணமும் விதம்விதமான விருத்தப்பாக்களால் நிறைந்திருக்கின்றன. பாரதியார் காலத்தில் சிந்தும் கண்ணியும் கொடிகட்டிப் பறந்திருக்கின்றன. பிச்சமூர்த்தி காலத்தில் யாப்பிலக்கணத்தையே கவிதை துறந்து நிற்கிறது. எந்தப் போக்கிலும் மாறாத விதி என ஒன்றுமில்லை. எந்தப் போக்கின் வழியாக இருந்தாலும், எந்த வடிவத்திலும் ஒரு படைப்பு எழுதப்படலாம். அந்த சுதந்திரம் எல்லாப் படைப்பாளிகளுக்கும் இருக்கிறது. அந்தப் படைப்பு மிகச்சிறந்ததாக அமைந்து, அந்தப் போக்குக்கு நியாயம் செய்வதாக இருக்கவேண்டும். அது மட்டுமே காலத்தில் நீடித்து நிற்கும்.

தமிழ், இந்திய உலக இலக்கியத்தில் உங்களைக் கவர்ந்த படைப்புகள் எவை? படைப்பாளிகள் எவர்?

பிடித்த படைப்புகள் என்றால் பெரிய பட்டியலையே கொடுக்கமுடியும். ஆனால் ஒரு கேள்வி பதிலில் அப்படி ஒரு பட்டியலுக்கு இடமில்லை. சுருக்கமாகவே சொல்ல விரும்புகிறேன். தமிழ்ச்சிறுகதைகளில் நான் மீண்டும் மீண்டும் படிப்பவை அழகிரிசாமியின் சிறுகதைகள். ஏதோ ஒரு வகையில் அவர் உருவாக்கும் கதையுலகம் எனக்கு உவப்பானதாகவும் நான் இப்போது உருவாக்கிக்கொண்டிருக்கும் உலகத்தைப்போன்ற ஒன்றாகவும் தோன்றுவதுண்டு. அடுத்து, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், வண்ணதாசன் ஆகியோரின் சிறுகதைகளையும் நான் விரும்பிப் படிப்பதுண்டு. நாவல் வரிசையில் க.நா.சு.வின் பொய்த்தேவு, சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், விட்டல்ராவின் நதிமூலம், சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, பூமணியின் பிறகு, கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், ஜெயமோகனின் கொற்றவை, வெங்கடேசனின் காவல் கோட்டம், எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி எனக்குப் பிடித்தமானவை. இந்திய நாவல் வரிசையில் சிவராம காரந்தின் மண்ணும் மனிதரும், தகழியின் ஏணிப்படிகள், வைக்கம் முகம்மது பஷீரின் மதிலுகள், தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம், விபூதிபூஷன் பந்தோபாத்யாயவின் பதேர் பாஞ்சாலி, அதீன் பந்தோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத் தேடி, பிரேம்சந்தின் கோதானம், முகுந்தனின் மய்யழிக்கரையோரம், எஸ்.எல்.பைரப்பாவின் பருவம், எம்.டி.வாசுதேவன் நாயரின் நாலுகட்டு வீடு ஆகியவை எனக்குப் பிடித்தமானவை. உலகநாவல் வரிசையில் லியோ தல்ஸ்தோயியின் அன்னா கரினினா, போரும் வாழ்வும், தஸ்தாவெஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள், சூதாடி, குப்ரினின் யாமா, மாக்சிம் கார்க்கியின் அர்தமோனவ்கள், துர்கனேவிப் தந்தையும் தனயர்களும், விக்டர் ஹியுகோவின் ஏழை படும் பாடு, சார்லஸ் டிக்கன்ஸின் இரு நகரங்களின் கதை, ஹெமிங்க்வேயின் கடலும் கிழவனும், ஹெர்மன் ஹெஸெயின் சித்தார்த்தா, ஜாக் லண்டனின் கானகத்தின் குரல் ஆகிய நாவல்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

உங்களது கன்னடப்படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு மகத்தான இலக்கியப் பங்களிப்பு. பணி நிமித்தம் பெங்களூர் சென்றபின் கன்னட மொழி படித்து, அதில் பாண்டித்தியம் பெற்று மொழிபெயர்த்ததாக அறிகின்றோம். பைரப்பாவின் மகாபாரதத்தின் மறு வாசிப்பான பர்வம் தமிழில் பருவம் என்னும் தலைப்பில் தமிழில் வெளியாகியுள்ளது. அந்நூல் என்னிடமுமுள்ளது. அதற்காக மொழிபெயர்ப்புக்கான இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்றதாக அறிகின்றேன். வாழ்த்துகள். அந்த மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றிச் சிறிது கூறுங்களேன். ஏன் அந்தப் படைப்பை மொழிபெயர்க்க வேண்டுமென்று தீர்மானித்தீர்கள்?

இந்திய நாவல்களில் பருவம் மிகமுக்கியமான படைப்பு. அதன் மகாபாரதப்பின்னணி அந்நாவலுக்கு கூடுதலான பரிமாணங்களை அளிக்கிறது. குருக்ஷேத்திரப்போருக்கான தயாரிப்பு வேலைகளில் தொடங்கி போர் முடிவடையும் தருணம் வரைக்குமான காலமே அந்த நாவல் நிகழும் காலம். ஒருவரையொருவர் வென்று நிலத்தை ஆட்சி செய்ய விழையும் முடியாட்சிக்காலத்துக்கதை. போர் என்பது மனித குல அழிவுக்கே வித்திடும் என்பதும் எத்தனை சமத்காரமான பொய்களின் துணையோடும் தந்திரங்களின் துணையோடும் போரை நிகழ்த்தினாலும் இறுதியில் எஞ்சும் துயரமும் இழப்புகளும் எல்லையற்றவை என்பதும் இன்றைய குடியாட்சிக்காலத்துக் கருத்து. ஒரு முடியாட்சிக்காலத்துக் கதையைச் சொல்லும் சாக்கில் குடியாட்சிக்காலத்துக் கருத்தை அழகாகச் சித்தரிக்கிறது அந்த நாவல். பெரும்பாலான நிகழ்ச்சிகள் பெண் பாத்திரங்களின் பின்னோக்குப்பார்வையில் நடைபெறுகின்றன. போரில் உயிரிழப்பவர்கள் ஆண்கள் என்றபோதும், துணையின்றி துயரத்தில் தவிப்பவர்கள் பெண்கள் என்னும் உண்மையை இறுதிக்காட்சிகள் உணர்த்துகின்றன. எழுதப்பட்ட காலத்தில் மட்டுமல்ல, இன்றைய காலத்துக்கும் அது பொருத்தமான நாவல்.

எழுத்தாளர் சித்தலிங்கையாவின் சுயசரிதையை 'ஊரும் சேரியும் ' தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளீர்கள். தலித் எழுத்தாளரின் நெஞ்சை அதிர வைக்கும் அனுபவங்கள் அவை. உங்களது இவ்வகையான தலித் எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகளும் தமிழில் தலித் இலக்கியம் வளர்வதற்கு ஆரோக்கியமான் பங்களிப்பை நல்கியுள்ளன என்றும் கருதப்படுகின்றது. இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

என் மொழிபெயர்ப்புகள் ஆரோக்கியமான பங்களிப்பை நல்கியுள்ளன என்பதைக் கேட்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ஆரோக்கியமான ஒரு தொடக்கம் நம் மொழியிலும் சமூகத்திலும் நிகழவேண்டும் என்ற என் விருப்பம் நிறைவேறியிருப்பதைக் காண நிறைவாக உணர்கிறேன்.

கன்னடத்திலிருந்து நாவல், நாடகம், கவிதை, சுயசரிதை என்று பல்வகைப்படைப்புகளையும் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளீர்கள். உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் உழைப்பு அது. மொழிபெயர்க்கும் ஆர்வம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது, அதற்கு ஏதாவது தூண்டுதல்கள் உள்ளனவா?

மிகவும் தற்செயலாகவே நான் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். நான் கன்னட மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியபோது இலக்கிய வாசிப்பு மட்டுமே என் இலக்காக இருந்தது. அந்த வழியிலேயே நான் சென்றுகொண்டிருந்தேன். பெங்களூரில் நான் குடியேறியதும் இந்தி மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்த திருமதி சரஸ்வதி ராம்னாத் அவர்களைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒருமுறை அவர் இந்திய மொழிகளின் நாடகங்களை மொழிபெயர்ப்பு வழியாகத் தொகுக்கும் முயற்சியை அவர் தொடங்கினார். வட இந்திய மொழிகளில் வெளியான நாடகங்கள் ஏதோ ஒரு வகையில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. அதனால் அவற்றை அவர் எளிதாகத் தேடித் தொகுத்துவிட்டார். தென்னிந்திய மொழி நாடகங்களைத் தேடியெடுப்பதில் அவருக்குச் சிரமமிருந்தது. அதனால் அந்தந்த மொழி தெரிந்தவர்கள் உதவியோடு மொழிபெயர்த்துப் பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் அவர் கன்னட நாடகமொன்றை மொழிபெயர்த்துக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார். மொழிபெயர்ப்பு முயற்சியில் இறங்க எனக்குப் பெரிதும் தயக்கமிருந்து. ஆனால் அவர் அதைத் தன் ஆலோசனைகளால் களைந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட வைத்தார். காலம் செல்லச்செல்ல அதன் அருமை எனக்குப் புரிந்தது. கன்னடச்சூழலில் வாழும் வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில் நல்ல இலக்கியமுயற்சிகளைத் தமிழ்ச்சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதற்குக் கிடைத்த நல்வாய்ப்பாக நினைத்துக்கொண்டேன். தொடர்ந்து மொழிபெயர்க்கும் முயற்சியில் ஊக்கமுடன் செயல்படத் தொடங்கினேன்.

சிறுகதைத்தொகுப்புகள் ,குழந்தை இலக்கியத் தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள் , கட்டுரைத்தொகுப்புகள் என்று அதிக அளவில் உங்கள் நூல்கள் வெளியாகியுள்ளன. அந்த அளவுக்கு உங்களடைய நாவல்கள் அதிக அளவில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இனிமேல் உங்களிடமிருந்து அதிக அளவில் நாவல்களையும் எதிர்பார்க்கலாமா?

உண்மைதான். அது ஒரு குறையே. ஆனால் தவிர்க்கமுடியாத சூழலால் அப்படி நேர்ந்துவிட்டது. இரண்டு நாவல்களை தொடங்கி சில நூறு பக்கங்கள் வரை எழுதி அரைகுறையாக நிறுத்தி பல ஆண்டுகளாகின்றன. ஏதோ ஒரு தடை. அதைக் கடந்துவரத் தெரியாமல் தடுமாறி நின்றுவிட்டேன். ஒவ்வொரு முறையும் அவற்றை முடித்துவிட வேண்டும் என்றுதான் மனம் வேகம் கொள்கிறது. வெகுவிரைவில் அவற்றை முடித்து என் மனக்குறையைப் போக்கிக்கொள்வேன்.

நல்லது பாவணணன். இதுவரை உங்கள் எண்ணங்களைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். பதிவுகள் வாசகர்களுக்கு , இளம் எழுத்தாளர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

கால்நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவரும் தளம் பதிவுகள். இணைய உலகம் தொடங்கிய காலத்திலிருந்தே அது வாசகர்களுக்கு நல்லதொரு இலக்கிய அறிமுகத்தை வழங்குவதைத் தன் கடமையாகக் கொண்டிருக்கிறது. வாசகர்கள் அந்த அறிமுகத்தை ஒரு நுழைவாயில் குறிப்பாகக் கொண்டு படைப்புகளை நேரிடையாகத் தேடியடைந்து படித்து மகிழவேண்டும். இளம் எழுத்தாளர்கள் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு. ஊக்கம் குன்றாமல் அவர்கள் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். எக்காலத்திலும் எதிர்மறை சிந்தனைகளுக்கு இடமளித்து விடக்கூடாது.


 

எழுத்தாளர் பாவண்ணனின் படைப்புகள்

சிறுகதைகள்

    வேர்கள் தொலைவில் இருக்கின்றன (1987, காவ்யா பதிப்பகம்)
    பாவண்ணன் கதைகள் (1990, அன்னம் பதிப்பகம்)
    வெளிச்சம் (1990, மீனாட்சி பதிப்பகம்)
    வெளியேற்றம் (1991, காவ்யா பதிப்பகம்)
    நேற்று வாழ்ந்தவர்கள் (1992, காவ்யா பதிப்பகம்)
    வலை (1996, தாகம் பதிப்பகம்)
    அடுக்கு மாளிகை (1998, காவ்யா பதிப்பகம்)
    நெல்லித் தோப்பு (1998, ஸ்நேகா பதிப்பகம்)
    ஏழுலட்சம் வரிகள் (2001, காவ்யா பதிப்பகம்)
    ஏவாளின் இரண்டாவது முடிவு (2002, தமிழினி பதிப்பகம்)
    கடலோர வீடு (2004, காவ்யா பதிப்பகம்)
    வெளியேற்றப்பட்ட குதிரை (2006, அகரம் பதிப்பகம்)
    இரண்டு மரங்கள் (2008, புதுமைபித்தன் பதிப்பகம்)
    பொம்மைக்காரி (2011, சந்தியா பதிப்பகம்)
    பச்சைக்கிளிகள் (2014 சந்தியா பதிப்பகம்)
    பாக்குத்தோட்டம் ( 2014, உயிர்மை பதிப்பகம் )
    கண்காணிப்புக் கோபுரம் (2016, சந்தியா பதிப்பகம்)
    பிரயாணம் ( தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- 2016, காலச்சுவடு பதிப்பகம்)
    ஆனந்த நிலையம் (2020, சந்தியா பதிப்பகம் )
    கனவு மலர்ந்தது (2020, சந்தியா பதிப்பகம் )

நாவல்கள்

    வாழ்க்கை ஒரு விசாரணை (1987 புத்தகப்பூங்கா, 2014 என்.சி.பி.எச். பதிப்பகம்)
    சிதறல்கள் (1990 தாகம் பதிப்பகம், 2014 என்.சி.பி.எச். பதிப்பகம் )
    பாய்மரக்கப்பல் (1995, 2014 காவ்யா பதிப்பகம்)

குறுநாவல்கள்

    இது வாழ்க்கையில்லை (1989, சரவணபாலு பதிப்பகம்)
    ஒரு மனிதரும் சில வருஷங்களும் (1989, 2005, 2018 அகரம் பதிப்பகம்)

கவிதைகள்

    குழந்தையைப் பின்தொடரும் காலம் (1997, விடியல் பதிப்பகம்)
    கனவில் வந்த சிறுமி (2006, அகரம் பதிப்பகம்)
    புன்னகையின் வெளிச்சம் (2007, சந்தியா பதிப்பகம்)

கட்டுரைகள்

    எட்டுத்திசையெங்கும் தேடி (2002 அகரம் பதிப்பகம்)
    எனக்குப் பிடித்த கதைகள் (2003 காலச்சுவடு பதிப்பகம்)
    ஆழத்தை அறியும் பயணம் (2004 காலச்சுவடு பதிப்பகம்)
    தீராத பசிகொண்ட விலங்கு (2004 சந்தியா பதிப்பகம்)
    வழிப்போக்கன் கண்ட வானம் (2005 அகரம் பதிப்பகம்)
    எழுத்தென்னும் நிழலடியில் (2004 சந்தியா பதிப்பகம்)
    மலரும் மணமும் தேடி (2005 சந்தியா பதிப்பகம்)
    இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள் (2006 சந்தியா பதிப்பகம்)
    நதியின் கரையில் (2007 எனி இந்தியன் பதிப்பகம், 2018, சந்தியா பதிப்பகம்)
    துங்கபத்திரை (2008 எனி இந்தியன் பதிப்பகம், 2017, சந்தியா பதிப்பகம்)
    ஒரு துண்டு நிலம் (2008 அகரம் பதிப்பகம்)
    உரையாடும் சித்திரங்கள் (2008 புதுமைபித்தன் பதிப்பகம்)
    வாழ்வென்னும் வற்றாத நதி (2008 அகரம் பதிப்பகம்)
    ஒட்டகம் கேட்ட இசை (2010 காலச்சுவடு பதிப்பகம்)
    அருகில் ஒளிரும் சுடர் (2010 அகரம் பதிப்பகம்)
    மனம் வரைந்த ஓவியம் (2011 அகரம் பதிப்பகம்)
    புதையலைத் தேடி (2012 சந்தியா பதிப்பகம்)
    கனவுகளும் கண்ணீரும் (2014, என்.சி.பி.எச். வெளியீடு)
    படகோட்டியின் பயணம் (2017, என்.சி.பி.எச். வெளியீடு)
    வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள் (2017, சந்தியா பதிப்பகம்)
    கதவு திறந்தே இருக்கிறது (2018, பாரதி புத்தகாலயம்)
    சிட்டுக்குருவியின் வானம் (2018 சந்தியா பதிப்பகம்)
    சத்தியத்தின் ஆட்சி - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2019, சந்தியா பதிப்பகம்)
    ஒரு சொல்லின் வழியாக (2019, என்.சி.பி.எச். வெளியீடு)
    எல்லாம் செயல்கூடும் - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2020, சந்தியா பதிப்பகம் )
    வற்றாத நினைவுகள் (2021, என்.சி.பி.எச். வெளியீடு)
    நான் கண்ட பெங்களூரு (2021, சந்தியா பதிப்பகம்)
    ஒன்பது குன்று (2021, சிறுவாணி வாசகர் மையம்)
    என் வாழ்வில் புத்தகங்கள் (2021, சந்தியா பதிப்பகம் )
    மண்ணில் பொழிந்த மாமழை - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2021, சந்தியா பதிப்பகம்)
    சென்றுகொண்டே இருக்கிறேன் - பாவண்ணன் நேர்காணல்கள் (2022, சந்தியா பதிப்பகம்)
    தங்கப்பா - இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை நூல் (2022, சாகித்திய அகாதெமி )
    விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம் (2022, சந்தியா பதிப்பகம் )
    எப்பிறப்பில் காண்போம் இனி (2022, சந்தியா பதிப்பகம் )

குழந்தை இலக்கியம்

    பொம்மைக்கு ஓர் இடம் வேண்டும் - பாடல்கள் (1992, கலைஞன் பதிப்பகம்)
    பச்சைக்கிளியே பறந்துவா - பாடல்கள் (2009, அகரம் பதிப்பகம்)
    யானை சவாரி - பாடல்கள் (2014, பாரதி புத்தகாலயம்)
    மீசைக்காரப் பூனை- பாடல்கள் (2016, பாரதி புத்தகாலயம்)
    எட்டு மாம்பழங்கள் - பாடல்கள் (2017, பாரதி புத்தகாலயம்)
    நான்கு கனவுகள் - சிறுகதைகள் (2018, நெஸ்லிங் புக்ஸ் பப்ளிஷிங்)
    கன்றுக்குட்டி - பாடல்கள் (2019, பாரதி புத்தகாலயம்)
    கொண்டைக்குருவி – பாடல்கள் (2021, பாரதி புத்தகாலயம்)
    பொம்மைகள் -சிறார் கதைகள் (2022, தன்னறம் பதிப்பகம்)

மொழியாக்கப் படைப்புகள்

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த புத்தகங்கள்

    நீர்யானை முடியுடன் இருந்தபோது (1998, ஆப்பிரிக்க வனவிலங்களைப்பற்றிய கதைகள், என்பிடி)
    காட்டின் கதைகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
    வியப்பூட்டும் பாலூட்டிகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
    மரங்கள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
    கஸ்தூர்பா: ஒரு நினைவுத்தொகுப்பு (2019, சந்தியா பதிப்பகம் )

கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த புத்தகங்கள்

    கன்னட நவீனக் கவிதைகள் (1992, கனவு)
    பலிபீடம் (1992, நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்)
    நாகமண்டலம் (1993, நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்)
    மதுரைக்காண்டம் (1994, நாடகம், காவ்யா பதிப்பகம்)
    வினைவிதைத்தவன் வினை அறுப்பான் (1995, நாவல், என்பிடி)
    புதைந்த காற்று (1996, தலித் எழுத்துகளின் தொகைநூல், விடியல் பதிப்பகம்)
    ஊரும் சேரியும் (1996 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
    கல்கரையும் நேரம் (1998, லங்கேஷ் சிறுகதைகள், சாகித்திய அகாதெமி)
    கவர்மென்ட் பிராமணன் (1998 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
    பசித்தவர்கள் (1999, நாவல், என்பிடி)
    வடகன்னட நாட்டுப்புறக்கதைகள் (2001, சாகித்திய அகாதெமி)
    அக்னியும் மழையும் (2002, நாடகம், காவ்யா பதிப்பகம்)
    பருவம் (2002, நாவல், சாகித்திய அகாதெமி)
    ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் (2004, நவீன கன்னட இலக்கிய எழுத்துகள் தொகைநூல், அகரம் பதிப்பகம்)
    நூறு சுற்றுக்கோட்டை (2004, நவீன கன்னட சிறுகதைகள் தொகைநூல்)
    ஓம் நமோ (2008, நாவல், சாகித்திய அகாதெமி)
    அக்னியும் மழையும் (2011, ஆறு நாடகங்களின் தொகைநூல், காலச்சுவடு பதிப்ப‌கம்)
    தேர் (2010, நாவல், சாகித்திய அகாதெமி)
    வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் (2013, கட்டுரை, காலச்சுவடு பதிப்ப‌கம்)
    வாழ்வின் தடங்கள் (தன்வரலாறு, 2017, காலச்சுவடு பதிப்பகம்)
    சிதைந்த பிம்பம் (நாடகம், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
    அஞ்சும் மல்லிகை (நாடகம், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
    திருமண ஆல்பம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம்)
    அனலில் வேகும் நகரம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம் )

எழுத்தாளார் பாவண்ணன் பெற்ற விருதுகள்

புதுச்சேரி அரசின் சிறந்த நாவலுக்கான விருது(வாழ்க்கை ஒரு விசாரணை) - 1987
இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவலுக்கான விருது(பாய்மரக்கப்பல்) - 1995
கதா அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருது (பயணம்)- 1996
சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (பருவம்) - 2005
தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது (பச்சைக்கிளியே பறந்து வா) -2009
சென்னை இலக்கிய திருவிழாவின் சிறந்த எழுத்தாளர் விருது -2016
சுஜாதா-உயிர்மை அறக்கட்டளையின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது[5] - பச்சைக்கிளிகள்
என்.சி.பி.எச். வழங்கும் 2015 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரைத்தொகுதிக்கான விருது - கனவுகளும் கண்ணீரும்
வாழ்நாள் சாதனைக்காக விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கிய புதுமைப்பித்தன் விருது -2018
எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது -2021[6
தமிழ் இலக்கியத்தோட்டத்தின் (கனடா) வாழ்நாள் இலக்கியப் பங்களிப்புக்கான இயல்விருது 2022 பெற்றவர்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here