
1
1882இல், டிசம்பர் 12 இல் பிறந்த பாரதிக்கு, 1906இல், வயது இருபத்தி நான்காய், இன்னமும் அரும்பியிராத ஒரு காலப்பகுதி. சரியாக சொன்னால் தனது 23-24 வயது காலப்பகுதியிலேயே இவ் இளைஞன் இவ் உலக பரப்பினை கூர்ந்து நோக்க தலைப்படுகின்றான். இவனது இந்த செய்கைக்கு, பல்வேறு கூறுகள், அடித்தளமாய் அமைந்திருக்க கூடும் என்றாலும், இவற்றில் தலையானதாய் தெரிவது, இவனது ஆழ்ந்த வாசிப்பு திறன் எனலாம். (அதாவது, கசடு அற கற்பது என்பது இவன் பின் கொண்ட ஒரு கூறே).
இதனுடன் இணைந்தாற்போல், கைலாசபதியின் கூற்றான, “உணர்ச்சி பிழம்பாக தோன்றுபவன்” என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதுதான்.
இப்படி, “உணர்ச்சி பிழம்பாக” தோன்றியது எந்த காலப்பகுதியை சார்ந்தது என்பதனை கைலாசபதி அறுதியிட்டு கூறாமல் இருந்தாலும், இவ் உண்மையானது அவனது இறப்பு வரை நீடித்திருப்பதை அவனது எழுத்துக்கள் எதிரொலிக்காமல் இல்லை. இருப்பினும், தனது உணர்ச்சி பிரவாகத்தை ஒரு கட்டுக்குள் கொணரும் ஒரு மனிதனாக இவன் பிற்காலத்தில் உருவாகியிருக்க கூடும் என்பதனை அவனது அதே எழுத்துக்கள் எமக்கு காட்டாமலும் இல்லை.
வேறு வார்த்தையில் கூறினால், 23-24 வயது காலப்பகுதியில், இவ் இளைஞன், ஒப்பீட்டளவில், அடிப்படையில், தன் “எதிர்வினையை” அப்படியே காட்டும் “பச்சை” மண்ணாகவே இருந்துள்ளான். ஆனால், இப் பச்சை எதிர்வினைகள், ஒப்பீட்டளவில், மிக உயரிய மட்டத்தில், எந்த ஓர் சராசரி மனிதனும் இலகுவில் எட்டி பிடிக்க முடியாத தளத்தில் இயங்கின என்பதும் வேறு விடயம். இருந்தும், இவன், கால நகர்வோடு, “வையத் தலைமை கொள்” எனும் கருத்தாக்கத்திற்கு வந்து சேர்கின்றான் எனலாம்.