
இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புதுசு' சஞ்சிகையின் பங்களிப்பும் முக்கியமானது. எழுத்தாளர் நா.சபேசனை நிர்வாக ஆசிரியராகவும், எழுத்தாளர்களான இளவாலை விஜேந்திரன், பாலசூரியன், அ.ரவி ஆகியோரை உள்ளடக்கிய ஆசிரியர் குழுவையம் கொண்டு வெளியான சஞ்சிகை. காலாண்டிதழாக ஆரம்பித்த 'புதுசு' பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஒழுங்காக வெளிவரவில்லையென்று அறிகின்றோம். 'புதுசு'சஞ்சிகையில் கவிதைகளே அதிகமாகவே இடம் பெற்றிருக்கின்றன. கவிதைகள் தவிர கதை, கட்டுரை என 'புதுசு'வின் பங்களிப்பு பன்முகப்பட்டது. சமூக, அரசியலை உள்ளடக்கிய கட்டுரைகள் 'புதுசு'வில் வெளிவந்துள்ளன. இலங்கைத்தமிழர் விடயத்தில் , அவர்தம் உரிமைப்போராட்டத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்க இடதுசாரிகள் தவறிவிட்டனர் என்பதை வெளிப்படுத்தும் கட்டுரை, மலையகத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் எனப் 'புதுசு' சஞ்சிகையும் இலங்கைத்தமிழர்கள் அனைவரினதும் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









