'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
என்னை இங்கு, திரு சிவாஜி கணேசன் அவர்களின 20வது நினைவு நாளை ஒட்டிய இந்த நிகழ்வில்,சிலவார்த்தைகள் பகிர அழைத்த பேராசிரியர்,திரு பாலசுகுமார் அவர்களுக்கு மிகவும் நன்றி. அத்துடன் இங்கு வந்திருக்கும் பேச்சாளர்கள், பார்வையாளர்களுக்கும் எனது வணக்கங்கள்.பல மொழிகளில் பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த திரு சிவாஜி அவர்களைப் பேசுவதற்குச் சில மணித்தியாலங்களிலோ சில நாட்களோ போதாது. எத்தனையோ தளத்தில் வைத்து ஆய்வு செய்யப்பட வேண்டியவர் எங்கள் நடிகர் திலகம். இங்கு எனது பார்வை ஒரு திரைப்படப் பட்டதாரியின் கண்ணோட்டமாகும்.
அவர், சமூகத்தைப் பிரதிபலிக்கும் பல தரப்பட்ட பாத்திரங்கள் மட்டுமல்லாது. இதிகாச காலப் பாத்திரங்களான கர்ணன், பரதன், அத்துடன் நாரதர். முருகன் என்பதோடு மட்டுமல்லாது சாக்கரட்டிஸ்,ஓதெல்லோ போன்றவர்களையும் எங்கள் கண்முன் நிறுத்தியவர்.. நான் திரைப் படப் பட்டதரியாகப் படிப்பதற்குச் சென்ற காலத்தில்,பல பிரசித்தி பெற்ற படங்களும் அதையொட்டிய நாவல்களும். திரைப் படப் படிப்பு சார்ந்த செமினார்களுக்கு எடுக்கப் படுவது வழக்கம்.சத்தியத்ரேயின் 'பதர் பாஞ்சாலி' என்ற இந்திய கலைப் படம் தொடக்கம்,'சிட்டிசன் கேன்' என்ற மிகவும் பிரசித்தமான அமெரிக்கப் படம்வரை நாங்கள் பார்க்கவேண்டும். கலந்துரையாடவேண்டும். கட்டுரைகள் எழுதவேண்டும், செமினார் செய்யவேண்டும். அப்படியானவற்றில், 1899ல் ஜோசப் கொன்றாட் என்பரால் எழுதப்பட்ட 'ஹார்ட் ஒவ் டார்க்னெஸ்' என்ற நாவலை ஒட்டிய செமினாரும் ஒன்று. அது, 'அப்போகலிப்ஸ் நவ்' என்றொரு படமாக 1979ல் பிரான்ஸிஸ் போர்ட் கொப்பலா என்பரால் எடுக்கப் பட்டிருந்தது.இது ஒரு போர் சார்ந்த உளவியல சிக்கல்களைக் காட்டும் படம்.