முனைவர் இரா பிரேமா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் மின்னஞ்சலில் ஓர் உரையாடல் ‘ஊசலாடும் காந்தி’ மொழியாக்கச் சிறுகதைகள் நூலை முன்வைத்து!
- 2015 முதலே ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதிவரும் ஜெயந்தி சங்கர் 1995 முதல் இலக்கியவுலகில் தொடர்ந்து இயங்கி வருபவர். தற்போது ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை எழுதி முடித்து நூலாக்கத்திற்காகக் காத்திருக்கும் இவர் தனது ஆங்கிலச்சிறுகதைகளை தானே இந்நூலில் மொழியாக்கம் செய்துள்ளார். இவை Dangling Gandhi என்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தமிழ் வடிவம். Dangling Gandhi என்ற இவரது ஆங்கில நூல் இரண்டு முக்கிய அனைத்துலக விருதுகளையும் இந்தியாவில் சில விருதுகளையும் வென்றுள்ளது. இவரது ஆக்கங்கள் வேற்றுமொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யம், இந்தி, ஃப்ரெஞ்சில் மொழிபெயர்ப்பு கண்டு வருகின்றன. தமிழ் நூல்களுக்கு ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் முக்கிய விருதுகளும் வாங்கியுள்ள இவரது ஒவ்வொரு நூலுமே ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக்காலமாக ஓவிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். -
முனைவர் இரா பிரேமா: வணக்கம், ஜெயந்தி சங்கர். ‘ஊசலாடும் காந்தி’ மொழியாக்க நூலின் எனது வாசிப்பு அனுபவம் குறித்து உங்களுடன் உரையாட விருப்பம். -
ஜெயந்தி சங்கர்: உரையாடுவோம், டாக்டர். பிரேமா.
முனைவர் இரா பிரேமா: பெரும்பாலும் இந்தக் கதைகளுடைய பின்னணி இந்தியாவாகவும் இந்திய கிராமங்களாகவும் சிங்கப்பூரைப் பற்றிய வரலாற்றுக் கட்டுமானமாகவோ அல்லது நடப்பியல் ரீதியிலான சில பிரச்சினைகளை உள்ளடக்கியவையாக இருக்கின்றன. இவற்றை எழுத எதற்காக ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
ஜெயந்தி சங்கர்: இந்த சிறுகதைகளுக்காக நான் கண்டிப்பாக ஆங்கிலத்தை கையில் எடுக்கவில்லை. மாறாக, ஆங்கிலத்தில் எழுதுவது என்று முடிவெடுத்தபோது எனக்குள் நெடுங்காலமாகவே ஊறிக்கிடந்த சம்பவங்கள், கதைகள், கதாமாந்தர்கள் அம்மொழிக்கேற்ப உருக்கொண்டன. ஆங்கிலத்தில் எழுதாமலிருந்திருந்தால், இவை கண்டிப்பாக தாமதமாகவேனும் தமிழில் உருவாகியிருக்கும். அவ்வளவுதான்.